'கடைசி நேரத்திலும் லதா மங்கேஷ்கர் முகத்தில் புன்னகை தவழ்ந்தது'.. இறுதி தருணங்களை விவரிக்கும் டாக்டர்
மும்பை: 'இந்தியாவின் இசைக்குயில் ' 'இந்தியாவின் நைட்டிங்கேல்' என்று அழைக்கப்படும் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் 92 வயதில் நம்மை விட்டு நேற்று பிரிந்து சென்று விட்டார். உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மும்பையில் உள்ளப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அவரது உயிர் பிரிந்தது.
லதா மங்கேஷ்கர் மரணத்தால் நாடே சோகத்தில் முழ்கியது. பிரதமர் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், சினிமா, விளையாட்டு பிரபலங்கள், வெளிநாட்டு தலைவர்கள் என பலரும் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர்.

இந்தியாவின் இசைக்குயில் பறந்து விட்டது
லதா மங்கேஷ்கர் உடல் முழு அரசு மரியாதையுடன் நேற்று மாலை மும்பை சிவாஜி பார்க்கில் தகனம் செய்யப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி, மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, நடிகர்கள் ஷாருக்கான், ரன்பீர் கபூர், சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். லதா மங்கேஷ்கர் இந்த அளவுக்கு போற்றப்படுவதற்கு அவர் இசைத்துறையில் செய்த சாதனைகள் மட்டும் அல்ல; அவரது தனிப்பட்ட குணமும்தான்.

புன்னகை ததும்ப காட்சியளிப்பவர்
எவருடனும் மிகவும் அன்போடும், கனிவோடும் பேசக்கூடியவர் அவர். எந்த நிலையிலும் முகத்தில் புன்னகை ததும்ப காட்சியளிப்பவராம் லதா மங்கேஷ்கர். இந்த நிலையில்தான் கடைசி நேரத்தில் கூட லதா மங்கேஷ்கரின் முகத்தில் புன்னகை இருந்தது என்று கூறியுள்ளார் அவருக்கு சிகிச்சை அளித்த ரீச் கேண்டி மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் ப்ரதித் சம்தானி. டாக்டர் சம்தானி கடந்த மூன்று வருடங்களாக லதா மங்கேஷ்கருக்கு சிகிச்சை அளித்து வந்தவர் ஆவார்.

லதா மங்கேஷ்கரின் இறுதி தருணங்கள்
லதா மங்கேஷ்கரின் இறுதி தருணங்களைப் பற்றி பேசிய டாக்டர் சம்தானி, ' கடந்த சில ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாததால் லதா மங்கேஷ்கரால் யாரையும் அதிகம் சந்திக்க முடியவில்லை. சிகிச்சை பெறும்போதும் அவர் புன்னகையுடன் தான் இருப்பார். கடைசி நேரத்தில் கூட அவர் முகத்தில் புன்னகை இருந்தது, என் வாழ்நாள் முழுவதும் அவளுடைய புன்னகையை நான் நினைவில் வைத்திருப்பேன்' என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.
Recommended Video

முயற்சி செய்தும் காப்பாற்ற முடியவில்லை
''லதா ஜியின் உடல்நிலை மோசமடைந்த போதெல்லாம், நான் அவருக்கு சிகிச்சை அளித்தேன், ஆனால் இந்த முறை அவரது உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்தது. நாங்கள் தொடர்ந்து முயற்சி செய்தும் அவரை காப்பாற்ற முடியவில்லை' என்று சோகத்துடன் கூறினார் டாக்டர் சம்தானி. இந்த புன்னகை அரசி மறைந்தாலும் அவரது பாடல் எப்போதும் நம்மை ஆட்சி செய்யும்.












Click it and Unblock the Notifications