கல்யாணம் காட்சின்னு பண்ணியிருந்தாதானே தெரியும்.. மாயாவதி குறித்து மத்திய அமைச்சர் விமர்சனம்
மும்பை: கல்யாணம்னு ஒண்ணு பண்ணியிருந்தாதான் கணவனை எப்படி சமாளிப்பது என்று தெரியும் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதிக்கு மத்திய அமைச்சர் ராமதாஸ் அத்வாலே பதில் கொடுத்துள்ளார்.
மக்களவை தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. நாளை 7 வது கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்து விட்டது.
தேர்தல் பிரச்சாரம் ஓயும்வரை அனைத்துக் கட்சித் தலைவர்களுமே தங்களது எதிர் அணியினரை எந்த அளவுக்கு விமர்சிக்க முடியுமோ அந்த அளவுக்கு விமர்சித்து வந்தார்கள். பிரதமர் மோடி ராகுலை விமர்சிப்பதும் ராகுல் அதற்கு பதிலடி கொடுப்பதும், ராகுல் பிரதமரை விமர்சிப்பதும் அதற்கு அவர் பதிலடி கொடுப்பதும் சர்வ சாதாரணமாக நடைபெற்று வந்தது. இதில் மாநிலக் கட்சிகளும் ஒன்றுக்கொன்று சளைத்தது அல்ல என்று நிருபித்து வந்தனர்.
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி சில நாட்களுக்கு முன்னர் தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் பிரதமர் மோடியை விமர்சித்துப் பேசியிருந்தார். அப்போது பேசிய அவர் மோடி தான் திருமணம் செய்த மனைவியை தனது அரசியல் சுயநல லாபத்துக்காக கைவிட்டவர். இப்படி மனைவியை கைவிட்ட ஒருவர் எப்படி பிற பெண்களை மதிப்பார் என்று எதிர்பார்க்க முடியும் என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
எலியும் பூனையுமாக இருந்த ராவும், நாயுடுவும்.. பாஜக அரசை வீழ்த்த கேசிஆருக்கு அழைப்பு!
மோடியின் இந்த செய்கையினால் பாஜகவில் உள்ள பெண்கள் தங்களது கணவர்களை மோடியிடம் அழைத்துச் செல்லவே பயப்படுகிறார்கள். அந்தப் பெண்கள் மோடி தனது மனைவியை கைவிட்டது போல தங்களிடம் இருந்து தங்களது கணவர்களை பிரித்து விடுவார் என்று அந்தப் பெண்கள் அஞ்சி நடுங்குவதாக தனக்கு தெரியவந்துள்ளது என்று மாயாவதி பேசினார். அதோடு இப்படிப்பட்ட மனிதருக்கு பெண்கள் யாரும் வாக்களிக்க கூடாது என்று மாயாவதி அந்தப் பிரச்சாரக் கூட்டத்தில் பேசியிருந்தார்.
மாயாவதியின் இந்த பேச்சு கடும் எதிர்ப்பை சந்தித்தது. அதோடு சர்ச்சையையும் ஏற்படுத்தி இருந்தது. மாயாவதியின் இந்த பேச்சுக்கு இந்திய குடியரசுக் கட்சியின் தலைவரும் மத்திய அமைச்சருமான ராமதாஸ் அத்வாலே கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். மாயாவதியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள ராமதாஸ் அத்வாலே, மாயாவதி திருமணம் செய்யாதவர். குடும்பம் என்றாலே அவருக்கு என்னவென்று தெரியாது. திருமணம் செய்திருந்தால்தான் அவருக்கும் கணவரை எப்படி சமாளிப்பது என்று தெரிந்திருக்கும் என்று ராமதாஸ் அத்வாலே கூறியுள்ளார்.
பிரதமர் மோடி குறித்தும் அவரது மனைவி குறித்தும் மாயாவதி பேசியதற்கு ராமதாஸ் அத்வாலே இப்படி பதில் கூறியுள்ளார். மாயாவதியின் மோடி குறித்த பேச்சே ஏற்கனவே சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் ராமதாஸ் அத்வாலேயின் இந்த கருத்தும் பெண்கள் மத்தியில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.