உங்கள் ஜியோ நெட்வொர்க் வேலை செய்யவில்லையா? காலையிலேயே கடுப்பான வாடிக்கையாளர்கள்! இது தான் காரணம்!
மும்பை : இந்தியாவில் வாடிக்கையாளர்களுக்கு செல்போன் சேவை வழங்கும் முன்னணி நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க் இந்தியாவின் பல பகுதிகளில் திடீரென முடங்கியதால் வாடிக்கையாளர்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்
இந்தியாவின் பெரும் தொழிலதிபர்களின் ஒருவரான முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் பல துறைகளில் கால் பதித்துள்ளது அந்த வகையில் அதன் துணை நிறுவனமான ஜியோ 4ஜி மற்றும் 5ஜி சேவைகளை இந்தியா முழுவதும் வழங்கி வருகிறது.
தொடக்கத்தில் அன்லிமிடெட் கால், அளவில்லா இன்டர்நெட் வசதியுடன் அறிமுகப்படுத்தப்பட்ட ஜியோ இந்திய டெலிகாம் துறையில் அபார வளர்ச்சியை சந்தித்தது.
சென்னையில் ஜியோ 5ஜி தொடக்கம்.. எது “ஃப்ரீயா?” அசத்தல் “ஆஃபர்”அறிவித்த அம்பானி -“யூஸ்” பன்றது எப்படி?
ரிலையன்ஸ் ஜியோ
இதன் காரணமாக ஏர்செல் உள்ளிட்ட பல்வேறு தொலைதொடர்பு நிறுவனங்கள் மூடு விழா கண்டது. மேலும் ஏர்டெல் பிஎஸ்என்எல் உள்ளிட்ட நிறுவனங்களையும் நெருக்கடிக்கு உள்ளாக்கிய ஜியோ தற்போது இந்தியாவின் மிகப் பெரிய நெட்வொர்க்கில் ஒன்றாக திகழ்கிறது. தற்போதைய சூழலில் அரசுத்துறையான பிஎஸ்என்எல் தவிர ஜியோ, ஏர்டெல், ஐடியா வோடபோன் உள்ளிட்ட நிறுவனங்கள் செல்போன் சேவையை வழங்கி வருகின்றன.
நெட்வொர்க் செயலிழப்பு
ஆரம்ப காலத்தில் ஜியோ கட்டணங்களை உயர்த்தியதால் ஏராளமான வாடிக்கையாளர்கள் ஏர்டெல்லுக்கு மாறினார். அதனைத் தொடர்ந்து கட்டணம் மாறுபாடு ஏற்பட்ட நிலையில் தற்போது இந்தியாவில் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் ஜியோ மற்றும் ஏர்டெல் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தான் அடிக்கடி ஜியோ வாடிக்கையாளர்கள் சிக்கலை சந்தித்து வருகின்றனர். இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பை டெல்லி பெங்களூரு உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று ஜியோ நெட்வொர்க் செயலிழந்ததால் வாடிக்கையாளர்கள் கடும் அவதி அடைந்தனர்.
சேவை முடக்கம்
இந்த ஆண்டு மட்டும் பல நாட்கள் ஜியோ நிறுவனத்தின் சேவை முடங்கியது குறிப்பிடத்தக்கது. ஏர்டெல் பிஎஸ்என்எல் உள்ளிட்ட செல்போன் சேவைகளிலும் இதே குறைபாடு இருந்தாலும் சிறிய அளவிலேயே முடக்கம் இருக்கும் ஆனால் ஜியோவை பொறுத்தவரை அடிக்கடி இதே போல பெரிய அளவில் நெட்வொர்க் முடக்கம் இருப்பதாக புகார் கூறுகின்றனர் பயனாளர்கள். கடந்த 2021 இறுதிப் பகுதியில் சத்தீஸ்கர் ,மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட பகுதிகளில் ஜியோ நெட்வொர்க் செயலிழந்தது. இதேபோல இந்த ஆண்டு ஜனவரி, ஜூன், ஆகஸ்ட் காலகட்டங்களிலும் பல இடங்களில் ஜியோ நெட்வொர்க் செயலிழந்தது குறிப்பிடத்தக்கது.
கடும் அவதி
இந்நிலையில் இன்று அதிகாலையில் ஜியோ நெட்வொர்க் பயன்படுத்தி வந்த வாடிக்கையாளர்கள் இன்கமிங் அவுட்கோயிங் கால் வசதிகளை பெற முடியாமலும் எஸ்எம்எஸ் சேவையை பயன்படுத்த முடியாமல் அவதி அடைந்தனர். அதிகாலை 6 மணியிலிருந்து இந்த பிரச்சனை இருந்தது சில இடங்களில் மூன்று மணி நேரத்திற்கு மேலாக சேவை தடைபட்டதால் வாடிக்கையாளர்கள் கடும் அவர் அடைந்தனர். அதே நேரத்தில் மொபைல் இன்டர்நெட் வசதி மட்டும் அவர்களுக்கு கிடைத்திருக்கிறது. இது தொடர்பாக ட்விட்டரில் பயனளர்கள் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர்.
என்ன காரணம்
ஜியோ நெட்வொர்க் குறைபாடு குறித்து செல்போன் சேவை குறைபாட்டு வலைதளமான டவுன் டிடெக்டரிலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் புகார் அளித்துள்ளனர். குறிப்பாக மும்பை, டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட பெரிய நகரங்களில் இருந்து தான் புகார்கள் பதிவாகி இருக்கின்றன. தற்போது ஜியோ சேவை சீரடைந்துள்ளதாக கூறப்பட்டாலும் தொடர்ந்து இதே போல் பிரச்சினை அடிக்கடி எழும்பும் நிலையில் ஜியோ உரிய தீர்வு காண வேண்டுமென வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்து இருக்கின்றனர். ஆனால் வழக்கம் போல் ஜியோ சேவை முடக்கம் குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.