சஞ்சய் தத் முன்கூட்டியே விடுதலை.. பேரறிவாளன் வழக்கை விசாரணைக்கு ஏற்க மும்பை ஹைகோர்ட் உத்தரவு
மும்பை: நடிகர் சஞ்சய் தத் தண்டனைக்காலம் முடியும் முன்னரே விடுதலை செய்யப்பட்டது குறித்து எரவாடா சிறை நிர்வாகம் பதிலளிக்க கோரிய பேரறிவாளன் வழக்கை இறுதி விசாரணைக்கு பட்டியலிட உயர் நீதிமன்ற பதிவளாருக்கு மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
கடந்த 1993ம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற தொடர் வெடிகுண்டு சம்பவம் தொடர்பாகவும், வீட்டில் ஏ.கே.56 ரக துப்பாக்கி வைத்திருந்ததாகவும் குற்றவாளியாக கண்டறியப்பட்ட பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் சஞ்சய் தத்தின் குற்றத்தை உறுதி செய்த உச்ச நீதிமன்றம் அவரது தண்டனையை 5 ஆண்டுகளாக குறைத்தது.

இதனைதொடர்ந்து கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் எரவாடா சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட சஞ்சய் தத் பலமுறை பரோல் பெற்று வெளியே வந்து இருந்தார். இருப்பினும் தண்டனை காலம் நிறைவடையும் முன்பே கடந்த 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 25 ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டிருந்தார்.
நடிகர் சஞ்சய் தத்திற்கு எப்படி சிறை தண்டனை நிறைவடைவதற்கு முன்பே விடுதலை அளிக்கப்பட்டது என்பது தொடர்பான தகவல்களை எரவாடா சிறை நிர்வாகத்திடம் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளியான பேரறிவாளன் கேட்டு மனு அளித்திருந்தார். ஆனால் அந்த விவரங்கள் கிடைக்காத நிலையில் மும்பை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை கடந்த பிப்ரவரி மாதம் விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம் இது தொடர்பான தகவல்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு மகாராஷ்டிரா மாநில தகவல் ஆணையத்திற்கு நோட்டீஸ் ஒன்றையும் பிறப்பித்து இருந்தது.
அதேபோல் பேரறிவாளன் விடுதலை தொடர்பாக தமிழக அரசின் தீர்மானத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்த தமிழக ஆளுநரின் முடிவு குறித்த விவரங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய பேரறிவாளனுக்கு மும்பை உயர் நீதிமன்றம் அனுமதியும் வழங்கி இருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு கடந்த ஜூலை 30 ஆம் தேதி நீதிபதிகள் பிரித்திவிராஜ் சவான், கே.கே.தாடெட் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, பேரறிவாளன் மனுவை விசாரணைக்கு ஏற்ககோரி வாதம் வைக்கப்பட்டது.
இதனையடுத்து நீதிபதிகள், மனுதாரரான பேரறிவாளன் இந்த விவகாரத்தில் எழுப்பிய முகாந்திரங்கள் ஏற்கும்படியாக உள்ளதால், பேரறிவாளன் மனுவை விசாரணைக்கு ஏற்றதோடு, இந்த மனுவை இறுதி விசாரணைக்காக பட்டியலிட மும்பை உயர்நீதிமன்றம் பதிவாளருக்கு உத்தரவிட்டனர்
ஒருவேளை வழக்கு இறுதி விசாரணைக்காக பட்டியலிடப்படவில்லை என்றால் நீதிபதிகள் முன்பு முறையிடவும் பேரறிவாளன் தரப்பு அனுமதி தரப்புக்கு வழங்கி உத்தரவிட்டனர்












Click it and Unblock the Notifications