விலகும் இருள், உதிக்கும் நம்பிக்கை.. கொரோனாவை வென்ற மகாராஷ்டிர கிராமம்.. சாதித்தது எப்படி?
மும்பை: கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளைத் தீவிரமாகப் பின்பற்றியதன் மூலம் மகாராஷ்டிராவிலுள்ள போயரே குர்த் என்ற கிராமம் கொரோனாவை முற்றிலுமாக ஒழித்துள்ளது.
நாடே தற்போது கொரோனா 2ஆம் அலைக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கிறது. தினசரி கொரோனா பாதிப்பு நாட்டில் நான்கு லட்சம் வரைகூட சென்றது.
அதேபோல முதல் அலையில் தப்பிய கிராமங்களும் பகுதிகளும்கூட கொரோனா 2ஆம் அலையில் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாகக் கிராமங்களில் சுகாதார உள்கட்டமைப்பு வலுவாக இல்லாததால், அங்கு கொரோனா பாதிப்பு மிக மோசமாக உள்ளது.
மகாராஷ்டிரா கிராமம்
இந்நிலையில், மகாராஷ்டிராவைச் சேர்ந்த அகமதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள போயரே குர்த் என்ற சிறிய கிராமம் கொரோனாவை முற்றிலுமாக ஒழித்துள்ளது. கொரோனா பற்றிய விழிப்புணர்வு, தடுப்பு நடவடிக்கைகளை முறையாகப் பின்பற்றுவது, கொரோனா பரிசோதனைகள், கண்டிப்புடன் பின்பற்றப்படும் தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் காரணமாக இந்த கிராமம் கொரோனாவை முற்றிலுமாக ஒழித்துவிட்டனர்.
சாதித்தது எப்படி
சரியான கொரோனா தடுப்பு நடவடிக்கை, கூட்ட முயற்சி ஆகியவை மூலம் கொரோனாவை எளிதாக ஒழிக்க முடியும் என்பதற்கு இந்த கிரமமே சிறந்த உதாரணம். 1500 பேரைக் கொண்ட இந்த கிராமத்தில், தொடக்கத்தில் நான்கு பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் கண்டறியப்பட்டு, அவர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர்.
விழிப்புணர்வு
இதுதவிர கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்தும் அக்கிராம மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மாஸ்க் அணிவது, தனிமனித இடைவெளியைப் பின்பற்றுவது. கைகளைக் கழுவுவது போன்றவை கொரோனாவை ஒழிப்பதில் எந்தளவு முக்கியமானது என்பது குறித்து கிராம மக்களுக்கு விளக்கப்பட்டது. இங்குள்ள கோயில்களில் இருக்கும் ஒலிபெருக்கிகள் மூலம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கப்பட்டன. இதைக் கிராம மக்களும் முறையாகப் பின்பற்றினர்.
கொரோனா பரிசோதனை
மேலும், கிராமத்திலுள்ள ஆரம்பச் சுகாதார மையத்தின் அதிகாரிகள் மூலம் அவ்வப்போது கிராமங்களில் உள்ளவர்களிடம் கொரோனா பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர், அவருக்கே தெரியாமல் மற்றவர்களுக்கு கொரோனாவை பரப்புவதும் தடுக்கப்பட்டது. இந்த நடவடிக்கைகள் மூலம் கொரோனா சங்கிலியை இந்த கிராமம் வெற்றிகரமாக உடைத்துள்ளன.
2ஆவது கிராமம்
மகாராஷ்டிராவில் கொரோனாவை முற்றிலுமாக ஒழித்த 2ஆவது கிராமமாக போயரே குர்த் உருவெடுத்துள்ளது. முன்னதாக மகாராஷ்டிர மாநிலத்தின் நந்தெட் மாவட்டத்திலுள்ள போசி என்ற கிராமம், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மூலம் கொரோனாவை வெற்றிகரமாக ஒழித்துள்ளது. அடுத்தகட்டமாகத் தடுப்பூசி போட்டுக் கொள்வது பற்றிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் பணிகள் இந்த கிராமங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.