எந்த விஷயம் குறித்து பேசினாலும் எச்சரிக்கையுடன் பேச வேண்டும்.. சச்சினுக்கு சரத்பவார் அட்வைஸ்!
மும்பை: விவசாயி போராட்டம் குறித்து பேசும் போது எச்சரிகையாக பேச வேண்டும் என சச்சின் டெண்டுல்கருக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் அறிவுரை வழங்கியுள்ளார்.
வேளாண் சட்டங்களை திரும்ப பெறக் கோரி டெல்லியில் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். சுமார் 70 தினங்களாக இவர்கள் நடத்தி வரும் போராட்டம் அமைதியான முறையில் நடந்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த குடியரசுத் தினத்தன்று டிராக்டர் பேரணியின் போது விவசாயிகள் கூட்டத்திற்குள் நுழைந்த மர்ம நபர்கள் சிலர் அந்த போராட்டத்தில் வன்முறை ஏற்படுத்த சதி செய்ததாக விவசாயிகள் குற்றம்சாட்டுகிறார்கள்.
கண்ணீர் புகை
விவசாயிகள் என்ற பெயரில் மர்ம நபர்கள் டெல்லிக்குள் நுழைய முற்பட்டபோது போலீஸார் தடியடி நடத்தினர். இதில் விவசாயிகள் மீது தடியடி நடத்தப்பட்டது. மேலும் கண்ணீர் புகை குண்டும் வீசப்பட்டது. மேலும் ஒரு வார காலத்திற்கு டெல்லியை சுற்றியுள்ள மாவட்டங்களில் இணையதள சேவையும் துண்டிக்கப்பட்டது.
கங்கனா
விவசாயிகளின் பிரச்சினை சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்தது. அமெரிக்கா பாப் பாடகி ரிஹான்னா, சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் உள்ளிட்டோர் விவசாயிகளுக்கு ஆதரவாக ட்வீட் போட்டனர். இந்த நிலையில் ரிஹான்னா ட்வீட்டிற்கு சச்சின் டெண்டுல்கர், கங்கனா உள்ளிட்டோர் பதிலடி கொடுத்து ட்வீட் போட்டுள்ளனர்.
இந்தியர்கள்
வெளிநாட்டு பிரபலங்களுக்கு எதிராக போடப்பட்ட ட்வீட்களில் பெரிதும் சர்ச்சையை ஏற்படுத்தியது சச்சின் டெண்டுல்கருடையது. அவர் தனது ட்வீட்டில் கூறுகையில் இந்தியாவின் இறையாண்மையை சமரசம் செய்ய முடியாது. வெளிப்புற சக்திகள் பார்வையாளர்களாக இருக்கலாம். பங்கேற்று கருத்து சொல்பவர்களாக இருக்கக் கூடாது. இந்தியர்களுக்குத்தான் இந்தியா குறித்து தெரியும் என்றும் அவர் கருத்து கூறியுள்ளார்.
வேறு துறை
இந்த ட்வீட் மட்டும் ஒரு லட்சத்திற்கும் அதிகமாக ரீட்வீட் செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் கூறுகையில் விவசாயிகள் எடுத்துள்ள நிலைப்பாடு பற்றி பல பிரபலங்கள் விமர்சிக்கிறார்கள். சச்சின் டெண்டுல்கருக்கு என்னுடைய ஆலோசனை என்னவெனில் வேறு துறையை பற்றி அவர் பேசும் போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
தீர்வு
டெல்லி எல்லைகளில் போராடி வரும் விவசாயிகளை அவமானப்படுத்தும் நோக்கில் அவர்களைத் தீவிரவாதிகள் என்றும் காலிஸ்தானிகள் என்றும் கூறுகிறார்கள். நமக்கு சோறு போடும் விவசாயிகளை புண்படுத்துவது சரியான நடைமுறை அல்ல. பிரதமர், பாதுகாப்புத் துறை அமைச்சர் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளிடம் பேசினால் ஒரு தீர்வு கிடைக்கும்.
சுயபரிசோதனை
நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து எனக்கு தெரிந்து போராட்டக்காரர்களை தடுக்க சாலையில் ஆணிகளை போட்டு தடுக்கும் முறை நடந்ததே இல்லை. முதலில் இந்திய மக்கள் மட்டுமே விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தந்த நிலையில் தற்போது வெளிநாட்டினரும் ஆதரவு தெரிவித்துள்ளார்கள். எனவே மத்திய அரசு தன்னை சுயபரிசோதனை செய்ய வேண்டும்.
எதிர்வினைகள்
நீண்ட நாட்களாக விவசாயிகள் போராடி வருவதை மத்திய அரசு எண்ணி பார்க்க வேண்டும். ஹவுடி மோடி நிகழ்ச்சியில் பேசிய மோடி அங்கு எதையோ சொல்லிவிட்டு வந்திருக்கிறார்கள். தற்போது அதற்கான எதிர்வினைகள் நமக்கு கிடைக்கின்றன என சரத்பவார் தெரிவித்தார்.