அம்பலமான சிவசேனா எம்எல்ஏவின் ”கடத்தல்” நாடகம்.. சிரித்துக்கொண்டிருக்கும் ”செல்பி” படம் வெளியீடு
மும்பை: குஜராத்தின் சூரத் ஹோட்டலில் இருந்து தப்பித்து வந்து தான் கடத்திச் செல்லப்பட்டதாக குற்றம்சாட்டிய சிவசேனா எம்.எல்.ஏ. விமானத்தின் முன்பாக சிரித்துக்கொண்டிருந்த புகைப்படத்தை சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்கள் குழு வெளியிட்டு இருக்கிறது.
மகாராஷ்டிரா சட்டசபையில் உள்ள 288 இடங்களில் பாஜகவுக்கு 106 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். 2019 தேர்தலில் பாஜகவுடன் இணைந்து போட்டியிட்ட சிவசேனாவுக்கு 55 இடங்கள் கிடைத்தன.
ஆனால் தேர்தலுக்கு பிறகு யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் சிவசேனா, காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ், சிறு கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் ஆதரவுடன் ஆட்சியமைத்தது.
செல்லாது.. செல்லாது! நீதிமன்றத்தை அவமதிச்சுட்டாங்க - எல்லாம் போலி! இபிஎஸ் மீது எகிறும் வைத்திலிங்கம்
பாஜகவின் திட்டம்
சிவசேனா தலைமையிலான மகா விகாஷ் அகாடி கூட்டணி ஆட்சிக்கு மொத்தம் 169 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருந்தது. தொடர்ந்து பாஜகவுக்கு எதிராக அரசியல் செய்து வந்த ஆளும் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளை பல வகைகளில் வளைக்க முயன்றது பாஜக. அதன் பயனாக மாநிலங்களவை மற்றும் சட்ட மேலவைத் தேர்தலில் பாஜகவின் ஆட்டத்துக்கு ஓரளவு வெற்றி கிடைத்தது.
குதிரைபேரம்
இதனால் சிவசேனா கட்சிக்குள் தலைமைக்கு எதிரான அதிருப்தி மனநிலை எழத் தொடங்கியது. இதுதான் சரியான சந்தர்ப்பம் என்பதை உணர்ந்த பாஜக தனது வழமையான குதிரை பேர முறையை கையில் எடுத்தது. நேற்று முந்தினம் பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் உள்ள சிவசேனா அமைச்சர் ஏக்னாத் ஷிண்டே தலைமையிலான 34 எம்.எல்.ஏக்கள் முகாமிட்டனர். அதன் பின்னர் நேற்று அவர்கள் பாஜக ஆளும் அசாம் மாநிலத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
நிதின் தேஷ்முக்
அப்போது சிவசேனா எம்.எல்.ஏக்களில் ஒருவரான நிதின் தேஷ்முக் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் குழுவிலிருந்து தப்பித்து மீண்டும் மகாராஷ்டிராவுக்கு வந்து உத்தவ் தாக்கரேவுக்கு ஆதரவு தெரிவித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தான் கடத்தப்பட்டதாகவும், வலுக்காட்டாயமாக நூற்றுக்கணக்கான போலீசார் தன்னை குஜராத்தின் சூரத் மருத்துவமனைக்கு கடத்திச் சென்று ஊசிபோட்டதாகவும் குற்றம்சாட்டினார்.
வெளியான புகைப்படங்கள்
இந்த நிலையில் நிதின் தேஷ்முக்கின் குற்றச்சாட்டை ஷிண்டே ஆதரவு எம்.எல்.ஏக்கள் குழு திட்டவட்டமாக மறுத்துள்ளது. குஜராத்துக்கு தனி விமானத்தில் செல்லும்போது மற்ற அதிருப்தி எம்.எல்.ஏக்களுடன் நிதின் தேஷ்முக் சிரித்துக்க்கொண்டு செல்பி எடுத்த படத்தையும், விமானத்தின் உள்ளே அமர்ந்து இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டு நிதின் தேஷ்முக்கின் கடத்தல் நாடகத்தை அம்பலப்படுத்தியுள்ளது.