மொத்தம் 2 கொடூரர்கள்.. இடுப்பை பிடித்தனர்.. முத்தமிட முயன்றனர்.. குமுறும் பெண் யூடியூபர்
மும்பை: தென்கொரியாவை சேர்ந்த பெண் யூடியூபருக்கு தொல்லை கொடுத்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் தான் அந்த பெண் யூடியூபர் நடந்து சம்பவம் பற்றிய பகீர் தகவலை வெளியிட்டுள்ளதோடு, மும்பை போலீசாரின் மின்னல் வேக செயல்பாட்டுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
தென்கொரியாவை சேர்ந்த மியோச்சி இந்தியா வந்துள்ளார். தற்போது அவர் மும்பையில் தங்கி உள்ளார். இவர் யூடியூப் சேனல் வைத்து வரும் நிலையில் பல்வேறு நாடுகளுக்கு சென்று வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.
தற்போது மும்பையில் தங்கியுள்ள மியோச்சி அங்குள்ள இடங்களுக்கு சென்று வீடியோ எடுத்து பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது ஒரு அதிர்ச்சி சம்பவத்தை மியோச்சி எதிர்கொண்டுள்ளார்.
தொல்லை கொடுத்த 2 பேர்
அதாவது இரவு நேரத்தில் மும்பையில் உள்ள சாலையில் நடந்து சென்று லைவ் வீடியோ செய்த அவரை 2 பேர் பின்தொடர்ந்து பைக்கில் வரும்படி அழைத்தனர். மேலும் பைக்கில் வரும்படி அவரை கட்டாயப்படுத்தியதோடு, தோளில் கைவைத்து முத்தமிட ஒருவர் முயன்றார். இதனால் மியோச்சி அதிர்ந்து போனார். இவை அனைத்தும் லைவ் வீடியோவில் ஓடியது. இதுபற்றி மும்பை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரை கைது செய்தனர்.
மியோச்சி கூறுவது என்ன?
இதற்கிடையே தான் சம்பவம் தொடர்பான வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவை பார்க்கும் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தான் நடந்த சம்பவம் குறித்து யூடியூபர் மியோச்சி வெளிப்படையாக கூறியுள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:
ஐ லவ் யூ என கத்தினர்
‛‛நான் ஒரு யூடியூபர். லைவ் வீடியோக்களை தொடர்ந்து பதிவேற்றி வருகிறேன். பல நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து வீடியோக்களை பதிவிட்டு வருகிறேன். ஒவ்வொரு நாடுகளில் பின்பற்றப்படும் கலாசாரம், உணவு முறை பற்றி நானும் பிற நாட்டை சேர்ந்தவர்களும் அறிய வேண்டும் என்பது தான் எனது நோக்கமாகும். சம்பவத்தன்று மும்பையில் நான் லைவ் வீடியோ எடுத்துவிட்டு ஓட்டல் அறைக்கு திரும்பி கொண்டிருந்தேன். அப்போது தான் 2 பேர் வந்தனர். ஒருவர் ‛ஐ லவ் யூ' என என்னை நோக்கி கத்தினார். லைவ் வீடியோ எடுக்கும்போது இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது இயல்பு தான். ஏனென்றால் ஒவ்வொருவரும் தங்களின் செயல்பாடு மூலம் கவனம் ஈர்க்க விரும்புகிறார்கள்.
இடுப்பில் கை வைத்து முத்தமிட முயற்சி
ஆனால் தற்போதைய சம்பவம் வேறுவிதமாக மாறிப்போனது. எங்கே செல்கிறேன் என கேட்டனர். ஓட்டலுக்கு செல்வதாக கூறினேன். பைக்கில் ஏற கூறினார்கள். நான் மறுத்த நிலையில் இடுப்பை பிடித்து பைக்கில் ஏற்ற முயற்சித்தனர். நான் அவர்களை தடுத்த நிலையில் தோளில் கை போட்டு முத்தமிட முயன்றார். இதையும் தடுத்தேன். இந்த நேரத்தை மிகவும் கடினமானதாக உணர்ந்தேன். அவர்கள் 2 பேராக இருந்தனர். நான் தனி ஆளாக இருந்தேன். இதனால் அவர்களை தவிர்த்துவிட்டு ஓட்டலுக்கு வேகமாக நடக்க துவங்கினேன். இருப்பினும் பின்தொடர்ந்தனர். செல்போன் எண்ணை கேட்டனர். இதனால் போலி எண்ணை கொடுத்துவிட்டு வேகமாக நகர்ந்துவிட்டேன்.
மும்பை போலீசுக்கு பாராட்டு
இதுபோன்று மற்ற நாடுகளிலும் பிரச்சனையை சந்தித்து இருக்கிறேன். அந்த சமயங்களில் யாரிடம் உதவி பெற வேணே்டும் என்பது தெரியாத நிலை இருந்தது. ஆனால் இந்தியாவில் அதிர்ஷ்டவசமாக எனக்கு நண்பர்கள் உதவ முன்வந்தனர். மேலும் ட்விட்டரில் வீடியோவை பதிவிட்டு மும்பை போலீசுக்கு டேக் செய்தனர். மும்பை போலீசாரும் விரைவான நடவடிக்கை எடுத்து 2 பேரை கைது செய்துள்ளனர். இது பாராட்டுக்குரியது. இந்தியா எனக்கு பிடித்துள்ளது. இன்னும் 3 வாரம் இந்தியாவில் இருக்கிறேன். '' என்றார்.