மும்பை மாநகரில் சூப்பர் மாற்றம்.. முதல்முறையாக இன்று கொரோனாவால் யாரும் இறக்கவில்லை
மும்பை : மும்பை நகரை கடந்த 2020 மார்ச் மாதம் கொரோனா தொற்றுநோய் தாக்குதலுக்கு ஆளானது. கடந்த ஒன்றரை வருடத்தில் முதல் முறையாக ஞாயிற்றுக்கிழமை (இன்று) பூஜ்ஜிய கொரோனா வைரஸ் இறப்பை பதிவுசெய்துள்ளது. அதாவது கொரோனா பாதிக்க தொடங்கிய ஒன்றரை வருடத்தில் முதல் முறையாக (இன்று) ஒரு நாளில் மும்பையில் கொரோனாவால் இறக்கவில்லை.
கொரோனாவின் இரண்டு அலைகளிலும் மோசமாக பாதிக்கப்பட்ட மும்பை நகரம், இன்று மட்டும் 367 பேர் புதிதாக கொரோனா பாதிப்புக்கு ஆளாகி இருப்பதாக கிரேட்டர் மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
மும்பை மாநகராட்சி ஆணையர் இக்பால் சிங் சாஹல், கொரோனா பாதிப்பால் இன்று யாருமேஇறக்கவில்லை என்ற செய்தியை பகிர்ந்து சுகாதாரத்துறையினரை வெகுவாக பாராட்டினார். "மும்பையில் உள்ள அனைவருக்கும் இது ஒரு சிறந்த செய்தி. மும்பை சுகாதாரத்துறை, மற்றும் மும்பை மாநகராட்சி பணியாளர்களின் அற்புதமான செயல்திறனை பாராட்டுகிறேன்.
மும்பை மாநகராட்சிக்கு அளவற்ற ஆதரவு மற்றும் நம்பிக்கை அளித்த ஊடகத்திற்கும் நான் மிகவும் நன்றி கூறுகிறேன். நாம் அனைவரும் முககவசம் அணிவதை தொடர்ந்து உறுதி செய்ய வேண்டும். மும்பையில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும். மும்பையை பாதுகாப்பாக வைக்க அனைவருக்கும் உதவுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.
மும்பை பெருநகரத்தின் ஆக்டிவ் கேஸ்கள் 5,030 ஆக அதாவது 1.27 சதவீதமாகக் குறைந்துள்ளது. மும்பை மாநகரில் கொரோனாவில் இருந்து குணம் அடைபவர்களின் விகிதம் தற்போது 97 சதவீதமாக உள்ளது. மாநகர அதிகாரிகளின் கூற்றுப்படி, கடந்த 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 28,600 கோவிட் சோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
முன்னதாக தொற்றுநோயின் இரண்டாவது அலையின் உச்சத்தில், மும்பை கோவிட் கேஸ்கள் மற்றும் இறப்புகளின் அதிவேக உயர்வைக் கண்டது, ஒரே நாளில் 11,000 க்கும் மேற்பட்டோர் நோய்த்தொற்றுகளால் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் ஒட்டுமொத்த மகாராஷ்டிரா மாநிலமும் இரண்டாவது அலைக்குப் பிறகு கடந்த மாதங்களில் கொரோனா கேஸ்கள் அதிக உயர்வை கண்டன. தற்போது குறைந்துள்ளது. மகாராஷ்டிராவில் சனிக்கிழமை நிலவரப்படி 1,553 கொரோனா வைரஸ்-பாசிட்டிவ் கேஸ்கள் மற்றும் 26 இறப்புகளைப் பதிவு செய்துள்ளது, அதே நேரத்தில் 1,682 நோயாளிகள் குணமடைந்துள்ளதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
மும்பை நகரத்தில் சனிக்கிழமை 319 புதிய கோவிட் -19 கேஸ்கள் மற்றும் மூன்று இறப்புகள் பதிவாகியுள்ளன. இருப்பினும், மகாராஷ்டிராவில் பெரிய கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட நிலையில், தீபாவளிக்குப் பிறகு கொரோனா வைரஸ் கேஸ்கள் அதிகரிக்கும் என்று மாநில அரசு அலார்ட்டாக உள்ளது என்று சுகாதார அமைச்சர் ராஜேஷ் டோப் கூறினார். மூன்றாவது அலையின் எந்த எழுச்சியையும் சந்திக்க ஏற்பாடுகள் முழுவீச்சில் இருப்பதாக மாநில சுகாதார அமைச்சர் ராஜேஷ் டோப் கூறினார்.