ஒரு புறம் கொரோனா, மறுபுறம் ஊழல் புகார்.. ஸ்கெட்ச் போட்டு, காத்திருக்கும் பாஜக.. சிவசேனா தலை தப்புமா
மும்பை: ஒருபுறம் கொரோனா தொற்று, மறுபுறம் உள்துறை அமைச்சர் மீது ஊழல் புகார், அம்பானி வெடிகுண்டு விசாரணையில் முக்கிய போலீஸ் அதிகாரிக்குத் தொடர்பு என இடியப்ப சிக்கலில் சிவசேனா அரசு சிக்கியுள்ளது.
மகாராஷ்டிராவில் தற்போது சிவசேனா-தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணி அரசு தற்போது ஆட்சியில் உள்ளது, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராகவும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் துணை முதல்வராகவும் உள்ளனர்.
நாடு முழுவதும் பல மாநிலங்களில் பாஜகவுக்கு எதிராக அமைக்கப்பட்ட கூட்டணி அரசுகளால் சில காலம் மட்டுமே தாக்குப்பிடிக்க முடிந்தது. ஆனால், உத்தவ் தாக்கரே மற்றும் சரத் பவாரின் வலுவான தலைமையால் மகாராஷ்டிராவில் இந்தக் கூட்டணி அரசு இன்னும் தொடர்கிறது. இந்நிலையில், இந்தக் கூட்டணி அரசுக்கும் தற்போது சிக்கல் எழுந்துள்ளது.
கொரோனா பாதிப்பு
மகாராஷ்டிர அரசுக்கு கொரோனா பரவலே தற்போது முக்கிய பிரச்னைாக உள்ளது. மற்ற மாநிலங்களிலும் கொரோனா பரவல் அதிகமாகவே இருக்கிறது. ஆனால் அவற்றையெல்லாம் விட ஜெட் வேகத்தில் மகாராஷ்டிராவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அங்கு 30,535 பேருக்குப் புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மீண்டும் லாக்டவுன்
தினசரி கொரோனா பாதிப்பும் 100 சதவீதம் அதிகரித்து வருகிறது. அம்மாநில அரசு எவ்வளவோ விழிப்புணர்வுகளை ஏற்படுத்த முயன்றும்கூட பொதுமக்கள் வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்றுவதில்லை. இதனால் லாக்டவுனை மீண்டும் அமல்படுத்துவது குறித்தும் மாநில அரசு ஆலோசித்து வருகிறது. இருப்பினும், லாக்டவுன் அமல்படுத்தினால் ஏற்படும் பொருளாதார பாதிப்பு அதிகமாக இருக்கும் என்பதால் அரசு தயக்கம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.
அம்பானி வெடிகுண்டு வழக்கு
கொரோனா பரவல் கூட இயற்கை பாதிப்பு, கிட்டதட்ட அனைத்து மாநிலங்களும் பாதிக்கப்படும். ஆனால் அம்பானி வீட்டின் அருகே கண்டறியப்பட்ட வெடிகுண்டு சிவசேனா அரசுக்கு அடுத்த பெரும் சிக்கலாக உருவெடுத்தது. ஆசியாவிலேயே மிகப் பெரிய கோடீஸ்வர குடும்பத்தினரின் வீட்டில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது சட்ட ஒழுங்கை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. கார் உரிமையாளர் மரணம், போலீஸ் அதிகாரிக்குத் தொடர்பு என அது விஸ்வரூபம் எடுத்தது.
100 கோடி உத்தரவு
அது ஓய்வதற்குள்ளேயே போலீஸ் அதிகாரி சச்சின் வாஸிடம் மாதம் ரூ.100 கோடி பணம் வசூலித்துக் கொடுக்கும்படி அம்மாநில உள் துறை அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் முக்கிய தலைவர்களில் ஒருவருமான அனில் தேஷ்முக் வற்புறுத்தியதாக, முன்னாள் மும்பை ஆணையர் பரம்பீர் சிங் புதிய குண்டை தூக்கிப்போட்டார். முகேஷ் அம்பானி வீட்டின் அருகே வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் தான் இந்த சச்சின் வாஸ். இப்படி நிலை நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டே சென்றது.
பாஜக vs சிவசேனா
மற்ற மாநிலங்களில் எல்லாம், பாஜகவுக்கு எதிரான கூட்டணி ஆட்சி அமைக்கும்போது, அக்கட்சியின் எம்எல்ஏகள் பாஜகவை நோக்கிப் படையெடுப்பார்கள். ஆனால், மராட்டியத்தில் உத்தவ் தாக்கரே அரசு மிகவும் தீர்க்கமாக இருந்தது. பல்வேறு விஷயங்களிலும் காங்கிரஸ் கட்சியே அமைதி காத்தபோதும்கூட, தாக்கரே அரசு பாஜகவை வெளுத்து வாங்கியது. இந்த நேரத்தில் ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழ்நிலையால் எம்எல்ஏகள் பாஜகவை நோக்கிச் செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
காத்திருக்கும் பாஜக
எப்போது ஒரு சிறு பூசல் உண்டாகும், ஆட்சியைக் கவிழ்க்கலாம் என்பதில் மகாராஷ்டிரா பாஜக தீவிரமாகக் கண்காணித்து வந்தது. அதற்கு ஏற்றார்போல தற்போது சூழ்நிலையும் அமைந்துள்ளது. இதனால் மாநிலத்தில் சட்ட ஒழுங்கு சரி இல்லை என்றும் ஆட்சியில் இருக்கும் தார்மீக பொறுப்பை தாக்கரே அரசு இழந்துவிட்டதாகவும் மகாராஷ்டிரா பாஜக தலைவரும் முன்னாள் முதல்வருமான தேவேந்திர பட்னாவிஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து மகாராஷ்டிரா ஆளுநரையும் சந்தித்து, அவர் புகார் அளித்ததுள்ளார்.
பறிபோகும் அமைச்சர் பதவி
ஒவ்வொரு நாளும் நிலைமை மோசமாவதை உணர்ந்துள்ள உத்தவ் தாக்கரே மற்றும் சரத் பவார் இது குறித்து விரைவில் ஆலோசிக்கவுள்ளனர். மேலும் மகாராஷ்டிர அரசு அதிகாரிகள் பாஜகவுடன் இணைந்து மாநில அரசைக் கவிழ்க்க முயல்வதாகவும் தாக்கரே குற்றஞ்சாட்டியுள்ளார். இருப்பினும், தற்போது இக்கட்டான சூழ்நிலை நிலவுவதால், நிலைமையைச் சமாளிக்க அனில் தேஷ்முக் தற்காலிகமாக அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.