தாஜ்மஹாலின் அடியில் பிரதமர் மோடியின் டிகிரியை தேடுகின்றனர்! பாஜகவினரை சீண்டிய அசாதுதீன் ஓவைசி
மும்பை: மும்பை தாஜ்மஹாலின் அடியில் பிரதமர் நரேந்திர மோடியின் டிகிரியை பாஜகவினர் தேடுகின்றனர் என ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவரும், எம்பியுமான அசாதுதீன் ஓவைசி விமர்சனம் செய்துள்ளார்.
உத்தர பிரதேசம் மாநிலம் ஆக்ராவில் தாஜ்மஹால் உள்ளது. இதுபற்றி அடிக்கடி சர்ச்சைகள் கிளம்பி வருகின்றன. அதாவது தாஜ்மஹால் முதலில் சிவன் கோவிலாக இருந்ததாக இந்துத்துவ அமைப்பினர் கூறி வருகின்றனர்.
சமீபத்தில் கூட தாஜ்மஹால் எங்களுக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டுள்ளதாக பாஜக எம்பி தியாகுமாரி கூறினார். இது விவாதப்பொருளானது. அதன்பிறகு தாஜ்மஹாலில் உள்ள 22 ரகசிய அறைகளுக்குள் பழமையான ஹிந்து தெய்வங்களின் சிலைகள் உள்ளதாக தகவல்கள் பரவின.

தாஜ்மஹால் ஆய்வுக்கு மனு
இதுதொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ கிளையில் மே 9ல் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில், ‛‛தாஜ்மஹாலில் சிவன் கோயில் இருந்ததற்காகன ஆதாரங்களாக அங்குள்ள 22 அறைகளில் இந்து தெய்வங்களின் சிலைகள் உள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த அறைகளின் கதவுகள் பூட்டப்பட்டு உள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பதில் கிடைத்துள்ளது. இந்த அறையில் இருப்பதை அறிய உண்மை கண்டறியும் குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும்'' என கூறப்பட்டு இருந்தது.

நீதிமன்றம் மறுப்பு
இம்மனு மீது உயர்நீதிமன்றம் விசாரித்தது. அப்போது இதுபோன்ற வழக்குகள் நீதிமன்றத்திற்கு வெளியே அல்லது பல்வேறு வழிமுறைகளில் தீர்க்கப்பட வேண்டும். அதோடு வரலாற்று அறிஞர்களின் கருத்துகள் பின்பற்ற வேண்டும் எனக்கூறிய நீதிமன்றம் உண்மை கண்டறியும் குழு அமைத்து ஆய்வுக்கு உத்தரவிட முடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தது. இருப்பினும் தாஜ்மஹால் பற்றிய சர்ச்சை இன்னும் முடிவுக்கு வரவில்லை.
இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் பிவாண்டியில் ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவரும், எம்பியுமான அசாதுதீன் ஓவைசி பேசினார். அப்போது அவர் தாஜ்மஹால் சர்ச்சை, இந்தியா யாருக்கு சொந்தமானது என்பது பற்றி பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டு பேசினார். அவர் பேசியதாவது:

மோடியின் டிகிரி
"இந்தியாவில் தற்போது பல்வேறு சர்ச்சை சம்பவங்கள் நடக்கின்றன. தேவையில்லாத விஷயங்கள் கிளப்பப்படுகின்றன. பாஜகவினர் பிரதமர் நரேந்திர மோடியின் டிகிரி சான்றிதழ்களை தாஜ்மஹாலின் அடியில் தேடுகின்றனர் என நினைக்கிறேன். அதனால் தான் தாஜ்மஹாலை ஆய்வு செய்ய விரும்புகின்றனர்.

இந்தியா யாருக்கு சொந்தம்
இந்தியா என்னுடையது அல்ல என்றால் தாக்கரேவுக்கும் இல்லை. மோடி-அமித்ஷாவுக்கும் சொந்தமானது அல்ல. இந்தியா யாருக்கு சொந்தமானது என்றால் அது திராவிடர்கள் மற்றும் ஆதிவாசிகளுக்கு தான். அதோடு முகலாயர்களுக்கு பிறகு தான் பாஜக, ஆர்எஸ்எஸ்கள் வந்தனர். ஆப்பிரிக்கா, ஈரான், மத்திய ஆசியா, கிழக்கு ஆசியாவில் இருந்து மக்கள் குடியேறிய பிறகே இந்திய நாடே உருவானது.

யார் மருமகள்?
மகாராஷ்டிராவில் காங்கிரஸ், சிவசேனாவுடன் தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்துள்ளது. ஆனால் சட்டசபை தேர்தலின்போது பாஜக, சிவசேனாவை வீழ்த்த தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் எனது கட்சிக்கு ஓட்டு கேட்டனர். ஆனால் தேர்தலுக்கு பிறகு தேசியவாத காங்கிரஸ் கட்சி சிவசேனாவை திருமணம் செய்து கொண்டது. இருப்பினும் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனாவில் யார் மணமகள் என தெரியவில்லை'' என கூறினார்.












Click it and Unblock the Notifications