துளசிராம் பிரஜாபதி போலி என்கவுண்டர் வழக்கில் அமித்ஷா முக்கிய சதிகாரர்: விசாரணை அதிகாரி
மும்பை: குஜராத்தில் 2006ம் ஆண்டு துளசிராம் பிரஜாபதி என்பவர் போலி என்கவுண்டர் மூலம் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில், பாஜக தலைவர் அமித் ஷா ஐபிஎஸ் அதிகாரிகள் தினேஷ், ராஜ்குமார் பாண்டியன் மற்றும் டி.ஜி.வன்சரா ஆகியோர் முதன்மை சதிகாரர்கள் என்று, இவ்வழக்கின் தலைமை விசாரணை அதிகாரி சந்தீப் தம்காட்ஜ், சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநில அரசில் உள்துறை அமைச்சராக பதவி வகித்தவர் அமித் ஷா. அப்போது, அந்த மாநிலத்தைச் சேர்ந்த சொராபுதீன் ஷேக் என்பவருக்குத் தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாகவும், அரசியல் தலைவர்களை கொல்லத் திட்டமிட்டுள்ளார் என்றும் குற்றம்சாட்டி, குஜராத் தீவிரவாத தடுப்பு படையினர் 2005ல், கைது செய்தனர்.
அதே ஆண்டு, நவம்பர் 26ம் தேதி, சொராபுதீன் ஷேக்கை போலீசார் என்கவுண்ட்டரில் சுட்டுகொலை செய்தனர். இந்த பரபரப்பு ஓயும் முன்பாக, சொராபுதீன் ஷேக் மனைவி கவுசர்பியையும் போலீசார் சுட்டுக்கொன்றனர்.
பாரிக்கர் தனது பதவியை ராஜினாமா செய்ய விரும்பினார், பாஜக தலைமை அனுமதிக்கவில்லை: அமைச்சர்
அடுத்தடுத்து என்கவுண்டர்கள்
இதன்பிறகு, கடந்த 2006ம் ஆண்டு, சொராபுதீன் ஷேக் உதவியாளர் துளசி பிரஜாபதியை, குஜராத் மற்றும் ராஜஸ்தான் போலீசாருடன், இணைந்து டிசம்பர் மாதம் சுட்டுக்கொன்றனர். இந்த 3 கொலைகளும் நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தின. இவை போலி என்கவுண்டர்கள் என சமூக ஆர்வலர்கள் போர்க்கொடி உயர்த்தினர். 3 கொலைகளிலும், குஜராத் மாநில அரசின் உள்துறை அமைச்சராக இருந்த அமித் ஷாவுக்கு தொடர்பு இருந்ததாக, அப்போது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இதையடுத்து அமித்ஷா 2010ல் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தார். இந்த வழக்கு விசாரணை, மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இணைக்கப்பட்ட வழக்குகள்
இவ்வழக்கை, 2012ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் கண்காணித்து வந்தவர் தலைமை விசாரணை அதிகாரி, சந்தீப் தம்காட்ஜ். சந்தீப் இந்த வழக்கில், துணை குற்றப்பத்திரிகை ஒன்றையும் தாக்கல் செய்தார். அப்போது சொராபுதீன் போலி மோதல் வழக்கும் பிரஜாபதி வழக்கும் தனித்தனியாக விசாரிக்கப்பட்ட நிலையில், பின்பு இந்தக் கொலைகளின் பின்னணியில் பெரிய அளவிலான சதி இருப்பதாக உணர்ந்த, சிபிஐ நீதிமன்றம் வழக்குகளை ஒன்றாக இணைத்தது. இந்த நிலையில்தான், சந்தீப் தம்காட்ஜ், சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வழங்கியுள்ள சாட்சியம் நாடு முழுக்க பரபரப்பிற்கு காரணமாகியுள்ளது.
ராஜஸ்தான் அமைச்சர்
இந்த விவகாரத்தில் அரசியல் ஒத்துழைப்பு இருப்பதாகவும் அவர் தனது சாட்சியத்தில் தெரிவித்துள்ளார். குஜராத் உள்துறை அமைச்சராக இருந்த, அமித்ஷா மட்டுமின்றி, ராஜஸ்தான் மாநிலத்தின் உள்துறை அமைச்சராக இருந்த குலாப்சந்த் கட்டாரியாவுக்கும் இந்த கூட்டு சதியில் தொடர்பு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
கால் ரெக்கார்டுகள்
'கால் டேட்டா ரெக்கார்டுகள்' அடிப்படையிலும் குற்றவாளிகள் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சந்தீப் தெரிவித்துள்ளார்.
அமித் ஷா, வன்சாரா, பாண்டியன், தினேஷ் ஆகியோரிடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதில், என்கவுண்டர் சதித்திட்டம் தீட்டப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும் சந்தீப் தனது சாட்சியத்தில் கூறியுள்ளார்.
பின்னணி இதுதான்
2006 ஆம் ஆண்டு டிசம்பர் 28-ஆம் தேதி துளசிராம், குஜராத்தில் வைத்து என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். அகமதாபாத் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜர்படுத்திவிட்டு, ராஜஸ்தானின் உதய்ப்பூர் சிறைக்கு அழைத்து சென்றபோது துளசிராம் தப்பி ஓட முற்பட்டதாகவும், அப்போது போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் ராஜஸ்தான் போலீசார் தெரிவித்திருந்தனர். ஆனால், இதன் பின்னணியில் அரசியல் சதி இருப்பதாக விசாரணை அதிகாரி கூறியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
|
ராகுல் காந்தி காட்டம்
ட்விட்டரில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, "உண்மை என்பது எப்போதும் உள்ளது. நீங்கள் உண்மையிலிருந்து தப்ப முடியாது", என்று கீதை சொல்கிறது. விசாரணை அதிகாரி தனது வாக்குமூலத்தில், அமித்ஷாதான் முக்கிய சதியாளர் என கூறியுள்ளார். பாஜகவிற்கு இப்படியான ஒரு நபர்தான் தலைவராக இருக்க பொருத்தமானவராக இருக்க முடியும். இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.