மும்பையை உலுக்கும் போக்சோ குற்றங்கள்.. ஒரே நாளில் 2 சிறுமிகள் பாதிப்பு.. பள்ளி முதல்வருக்கு வலை!
மும்பை: மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் 20 மாத பெண் குழந்தையை 35 வயது கிராஃபிக் டிசைனர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் கிராஃபிக் டிசைனரை கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை மேற்கொள்கையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. அதோ போல தனியார் பள்ளியில் பயின்று வந்த 14 வயது சிறுமியும் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் பள்ளி முதல்வர் தலைமறைவாகியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் குடியிருப்பு ஒன்றில் 35 வயதான நபர் தனியாக தங்கி வந்துள்ளார். இவர் கிராஃபிக் டிசைனராக பணியாற்றுவதாக சொல்லப்படுகிறது. இவருக்கு எதிர் வீட்டில் இளம் தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு சமீபத்தில்தான் பெண் குழந்தை பிறந்திருக்கிறது. இந்நிலையில் வீட்டில் குழந்தையின் அப்பா வேலைக்கு சென்றுவிட்ட நேரத்தில் தனியாக இருக்கும் குழந்தையை கிராஃபிக் டிசைனர் அடிக்கடி வந்து கொஞ்சி இருக்கிறார்.
குழந்தையின் தாயும் இது குறித்து எதுவும் நினைக்கவில்லை. இந்நிலையில், இரண்டு தினங்களுக்கு முன்னர் குழந்தைக்கு திடீரென காய்ச்சல் அடிக்க தொடங்கியுள்ளது. குழந்தை பயங்கரமாக அழுதிருக்கிறது. என்ன காரணம் என்று தெரியாமல் முழித்த பெற்றோர் மருத்துவரை சந்தித்துள்ளனர். அப்போதுதான் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார் என்கிற விஷயம் வெளியில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து உடனடியாக காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்ததை தொடர்ந்து கிராஃபிக் டிசைனர் கைது செய்யப்பட்டார்.
வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை.. யார் இந்த மல்யுத்த சம்மேளன தலைவர்? பாஜக எம்பியாமே.. முழுபின்னணி
பாலியல் பலாத்காரம்
அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது இந்த கிராஃபிக் டிசைனர் கடந்த 2017ம் ஆண்டு இதுபோன்று ஒரு பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கியுள்ளார். அப்போதிலிருந்து தற்போது வரை இவர் தலைமறைவாக வாழ்ந்து வந்திருக்கிறார். இதனையடுத்து இவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் இவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். இவரிடம் விசாரணை தொடர்ந்து வருகிறது. மும்பையில் இதேபோல மற்றொரு சம்பவம் அரங்கேறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனியார் பள்ளி
அதாவது, மத்திய மும்பையின் நாக்பாடா பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 14 வயது சிறுமி ஒருவர் பள்ளியின் முதல்வரால் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கடந்த மாதம் நடந்துள்ளது. இது குறித்து காவல்துறையினர் கூறியுள்ளதாவது, "கடந்த மாதம் இந்த சிறுமியை 50 வயதான பள்ளியின் முதல்வர் தனியாக அழைத்துள்ளார். தன்னுடைய அறையில் வைத்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சிறுமிக்கு முதலில் தனக்கு என்ன நடக்கிறது என்பது தெரியவில்லை. பின்னர் இதேபோல நேற்றும் சிறுமியை பள்ளி முதல்வர் தனியாக அழைத்திருக்கிறார்.
இரண்டாவது முறை
அன்று நடந்ததை போலவே நேற்றும் பாலியல் பலாத்காரத்திற்கான முயற்சிகள் நடந்துள்ளன. இதனால் உடனடியாக உஷாரான சிறுமி அங்கிருந்து போக வேண்டும் என்று கூறி சென்றிருக்கிறார். பின்னர் வீடு திரும்பியதும் தனது பெற்றொரிடத்தில் தனக்கு நேர்ந்த துயரத்தை கூறியுள்ளார். உடனடியாக பெற்றோர்கள் எங்களிடத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் போக்சோ வழக்கு பதிவு செய்த நாங்கள் குற்றம்சாட்டப்பட்ட பள்ளி முதல்வரை தேடி சென்றோம். ஆனால் அவர் பள்ளியிலும், இல்லத்திலும் காணவில்லை. எனவே தலைமறைவான அவரை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம்" என்று கூறியுள்ளனர்.
இரண்டு சம்பவங்கள்
ஒரே நாளில் இரண்டு சிறுமிகள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ள சம்பவம் மும்பையை உலுக்கியுள்ளது. பெண்களை போகப்பொருளுாக பார்க்கும் சிந்தனை மாறும் வரை இம்மாதிரியான குற்றங்களை குறைக்க முடியாது என மகளிர் அமைப்புகள் கூறியுள்ளன. அதேபோல சினிமாக்கள், விளம்பரங்கள் மற்றும் இதர ஊடகங்களில் பெண்களை கண்ணியமாக காட்சிப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளன.