எங்களை முதுகில் குத்தி நீங்கள் சாதித்ததுதான் என்ன?அதிருப்தி எம்.எல்.ஏக்களை வசைபாடிய ஆதித்ய தாக்கரே
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் ஜல்காவில் நடந்த கூட்டத்தில் பேசிய சிவசேனா இளைஞர் அணி தலைவர் ஆதித்ய தாக்கரே, 'எங்கள் முதுகில் குத்தி தற்போது நீங்கள் சாதித்தது என்ன?' என்று அதிருப்தி எம்.எல்.ஏக்களை பார்த்து பேசியுள்ளார்.
Recommended Video
மகாராஷ்டிராவில் கடந்த 2020-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் தேவேந்திர பட்னாவிஸ் தலமையிலான பாஜனதாவும், சிவசேனாவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன.
இதேபோல் காங்கிரசும்-சரத்பவார் தலமையிலான தேசியவாத காங்கிரசும் கூட்டணி வைத்து போட்டியிட்டன. தேர்தல் முடிவில் பாஜனதா சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றது.

கூட்டணி அமைத்து போட்டி
ஆனால் முதல்வர் பதவி பிரச்சினையில் பாஜனதாவுக்கும் சிவசேனாவுக்கும் போட்டி ஏற்பட்டது. தலா 2 அரை ஆண்டுகளுக்கு முதல்வர் பதவியை பகிர வேண்டும் என்ற உத்தவ் தாக்கரேயின் கோரிக்கையை பாஜக ஏற்காததால், கூட்டணி முறிந்தது. அதிக தொகுதிகளை பாஜனதா கைப்பற்றி இருந்தாலும், அந்த கட்சியால் ஆட்சியமைக்க முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் எப்படியும் சிவசேனா நம்முடன் கூட்டணி வைத்து தான் ஆகவேண்டும் என்ற நினைப்பில் பாஜனதாவும் முதல்வர் பதவியை பகிர்ந்தளிக்க சம்மதிக்கவில்லை.

மகா விகாஷ் அகாடி
ஆனால் திடீர் திருப்பமாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரசுடன் கூட்டணி அமைத்து முதல்வராக பதவியேற்றார். துணை முதல்வராக தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அஜித் பவார் பதவியேற்றுக்கொண்டார். 2 ஆண்டுகளை கடந்து ஆட்சி நடந்துவந்த நிலையில், திடீரென சிவசேனாவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஏக்னாத் ஷிண்டே தனக்கு ஆதரவாக சில எம்.எல்.ஏக்களை திரட்டி உத்தவ் தாக்கரேக்கு எதிராக திரும்பினார்.

உத்தவ் தாக்கரேக்கு பின்னடைவு
தொடர்ந்து சிவசேனா அதிருப்தி அணியாக உருவாகிய ஏக்னாத் ஷிண்டே பாஜனதாவுடன் கூட்டணி வைத்து மமாராஷ்டிரா அரசியலில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தினார். தொடர்ந்து மாநிலத்தின் முதல்வராக ஏக்னாத் ஷிண்டே பதவியேற்றார். துணை முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்றுக்கொண்டார். இதனால் உத்தவ் தாக்கரேக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. இந்த நிலையில், நாங்கள் அனைத்து வழிகளிலும் எம்.எல்.ஏக்களுக்கு ஆதரவாக இருந்த போதும் எங்கள் முதுகில் குத்தி நீங்கள் சாதித்ததுதான் என்ன? என்று ஆதித்ய தாக்கரே அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

என்ன சாதித்தீர்கள்?
மகராஷ்டிர மாநிலம் ஜல்காவ் என்ற இடத்தில் சிவசேனா உத்தவ் தாக்கரே அணியினரின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய ஆதித்ய தாக்கரே கூறியதாவது; நாங்கள் அவர்களுக்கு (அதிருப்தி எம்.எல்.ஏக்கள்) போட்டியிட வாய்ப்பு கொடுத்து, கடுமையாக உழைத்து வெற்றி பெற செய்தோம். அனைத்து வழிகளிலும் அவர்களுக்கு நாங்கள் உதவி செய்தோம். ஆனால், அவர்கள் ஏன் எங்களை முதுகில் குத்தினார்கள்? துரோகிகளாக இருந்து என்ன சாதித்தீர்கள்? தங்கள் சுயலாபத்திற்காக மட்டுமே அனைத்தையும் இவர்கள் பெற்றுக்கொள்கிறார்கள். மக்களுக்கு எதையும் திருப்பிக்கொடுக்கவில்லை" என்றார்.












Click it and Unblock the Notifications