இந்தியாவுக்குள் சீனா புகுந்ததை போல.. கர்நாடகாவுக்குள் நாங்கள் ஊடுருவோம்.. சிவசேனா ராவத் எச்சரிக்கை
மும்பை: இந்தியாவுக்குள் சீனா புகுந்ததை போல கர்நாடகாவுக்குள் நாங்கள் ஊடுருவி விடுவோம் என சிவசேனா கட்சியின் (உத்தவ் தாக்கரே அணி) மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்ட்ரா - கர்நாடகா இடையேயான எல்லைப் பிரச்சினை கொழுந்துவிட்டு எரியும் நிலையில், சஞ்சய் ராவத்தின் இந்த பேச்சு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, சஞ்சய் ராவத்தின் இந்த பேச்சுக்கு கர்நாடகாவில் உள்ள அரசியல் கட்சிகளும், கன்னட அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

பெலகாவியை உரிமை கோரும் மகாராஷ்டிரா
கர்நாடக மாநில எல்லையோரத்தில் உள்ள பெலகாவி மாவட்டம், உத்தர கன்னட மாவட்டத்தில் உள்ள கார்வார் உள்ளிட்ட சில பகுதிகளை தங்கள் மாநிலத்துடன் இணைக்க வேண்டும் என மகாராஷ்டிரா பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. இந்த மாவட்டங்களில் மராத்தி மொழி பேசும் மக்கள் அதிகம் பேர் வசிக்கின்றனர். மேலும், அங்குள்ள மக்கள் பெரும்பாலானோர் மராட்டிய மாநில பாரம்பரியத்தையே கடைப்பிடித்து வருகின்றனர்.

உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்
1957-ம்ஆம் ஆண்டு மொழி அடிப்படையில் மாநிலங்களை பிரித்த போது, மராத்தி மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் சில பகுதிகள் கர்நாடகாவுக்கு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, கர்நாடகாவில் உள்ள சில கிராமங்களை மகாராஷ்டிரா உடன் இணைக்க வேண்டும் என அம்மாநில அரசும், பல மராட்டிய அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன. இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி பல போராட்டங்களும் நடைபெற்றிருக்கின்றன. இந்த சூழலில்தான், கடந்த சில வாரங்களுக்கு முன்பு கர்நாடக எல்லையோரம் இருக்கும் சில கிராமங்களை மகாராஷ்டிரா உடன் இணைக்க வேண்டும் என அம்மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

பயங்கர மோதல் - சஞ்சய் ராவத் ஆவேசம்
இதனால் கர்நாடகா - மகாராஷ்டிரா எல்லைப் பகுதிகளில் இரு மாநிலங்களைச் சேர்ந்த அமைப்பினர் இடையே அண்மையில் பயங்கர மோதல் ஏற்பட்டது. இரு மாநில பேருந்துகளும் அடித்து நொறுக்கப்பட்டன. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து சிவசேனா கட்சியின் (உத்தவ் தாக்கரே அணி) எம்.பி. சஞ்சய் ராவத்திடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்து அவர் கூறுகையில், "ஒருகாலத்தில் பாம்பே மாகாணத்தின் கீழ்தான் பெலகாவி உள்ளிட்ட பகுதிகள் இருந்தன. அவை யாவும் நியாயமாக மகாராஷ்டிராவுக்கு சொந்தமானவை ஆகும்.

"சீனாவை போல ஊடுருவுவோம்"
இந்த எல்லை பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலமாக தீர்த்துக் கொள்ளலாம் என்றுதான் நாங்கள் கேட்கிறோம். ஆனால், கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மைதான் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றி வருகிறார். நாங்கள் பொறுமையாக இருக்கிறோம். எங்களை சீண்டி பார்க்காதீர்கள். அப்படி செய்தால், சில தினங்களுக்கு முன்பு இந்தியாவுக்குள் சீனா எப்படி புகுந்ததோ, அதேபோல கர்நாடகாவுக்குள் அதிரடியாக நாங்கள் நுழைவோம். மகாராஷ்டிராவில் தற்போதுள்ள பாஜக கூட்டணி அரசு பலவீனமான அரசாக உள்ளது. கர்நாடகா எல்லை பிரச்சினையில் ஒரு தீர்க்கமான நிலைப்பாட்டை எடுக்கக்கூட அது தயங்குகிறது" என்றார்.












Click it and Unblock the Notifications