படித்திருந்தாலும் பெண்ணை வேலைக்கு செல்ல கட்டாயப்படுத்த முடியாது; மும்பை உயர்நீதிமன்றம் கருத்து
மும்பை: ‛‛படித்து இருக்கிறார் என்பதற்காகவே விருப்பத்துக்கு மாறாக பெண்களை வேலைக்கு செல்ல கட்டாயப்படுத்த முடியாது'' என வழக்கு ஒன்றில் மும்பை உயர்நீதிமன்றம் கூறியது.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்த தம்பதிக்கு 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 13 வயதில் மகள் இருக்கிறார்.
இந்நிலையில் தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
பாஜகவை தோற்கடிப்பது தான் நோக்கமே! மகாராஷ்டிரா ராஜ்யசபா தேர்தலில் காங்.,க்கு ஆதரவளித்த ஓவைசி கட்சி
விவாகரத்து வழங்கிய நீதிமன்றம்
வழக்கை விசாரித்த நீதிமன்றம் தம்பதிக்கு விவாகரத்து வழங்கியது. மேலும் 13 வயது மகள் மனைவியின் பராமரிப்பில் இருக்கிறார். இதனால் மனைவிக்கும், மகளின் பராமரிப்புக்கும் மாதந்தோறும் பணம் வழங்க குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி மாதந்தோறும் மனைவிக்கு ரூ.5 ஆயிரம் ஜீவனாம்சமாகவும், 13 வயது மகளின் பராமரிப்புக்காக ரூ.7 ஆயிரமும் வழங்க நீதிமன்றம் கூறியது.
உயர்நீதிமன்றத்தில் முறையீடு
ஆனால் அந்த நபருக்கு மனைவிக்கு ஜீவனாம்சம் தொகையை வழங்க விரும்பவில்லை. இதனால் குடும்பநல நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‛‛எனது மனைவி பட்டப்படிப்பை முடித்துள்ளார். அவருக்கு வருமான ஆதாரங்கள் உள்ளன. இதனால் குடும்பநல நீதிமன்றம் வழங்ககோரிய மாதாந்திர ஜீவனாம்ச தொகையை ரத்து செய்ய வேண்டும்'' என்பன உள்ளிட்ட விஷயங்களை குறிப்பிட்டு இருந்தார்.
நீதிமன்றத்தில் வாதம்
இந்த மனுவை நீதிபதி பாரதி தாங்ரே விசாரித்தார். அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‛‛குடும்ப நல நீதிமன்றம் நியாயமற்ற முறையில் ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட்டுள்ளது. அவரது மனைவி பட்டதாரி. வேலை செய்யும் திறன் கொண்டவர் என்பதை நீதிமன்றம் கருத்தில் கொள்ளாமல் உத்தரவிட்டுள்ளது'' என்றார். அப்போது நீதிபதி பாரதி தாங்ரே குறுக்கீட்டு சில விஷயங்களை கூறினர்.
கட்டாயப்படுத்த முடியாது
நீதிபதி பாரதி தாங்ரே கூறுகையில், ‛‛ஒரு பெண் பட்டம் படித்திருந்தாலும் கூட வேலைக்கு செல்வதும், வீட்டில் இருப்பதும் அவருடைய விருப்பம் தான். சொல்லப்போனால் வீட்டின் தேவைக்கான பணத்தை பெண்ணும் சம்பாதிக்க வேண்டும் என்பதை நமது சமூகம் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை. அதேநேரத்தில் பட்டப்படிப்பை படித்துள்ளார் என்பதற்காக பெண்ணை வேலைக்கு செல்லும்படி யாரும் கட்டாயப்படுத்த முடியாது. நான் இன்று நீதிமன்றத்தில் நீதிபதியாக இருக்கிறேன். நாளை வீட்டில் இருக்க வேண்டிய சூழல் எனக்கு வரலாம். அப்போது நான் படித்து உள்ளேன். நீதிபதியாக பொறுப்பு வகித்தவர் எனக்கூறி வீட்டில் சும்மா இருக்க கூடாது என சொல்வீர்களா? " என கேள்வி எழுப்பினார். பின்னர் வழக்கு விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தார்.