மாணவி கூட்டு பலாத்காரம்: மைசூரு பல்கலைக்கழகம் எடுத்த சர்ச்சை நடவடிக்கை.. எதிர்ப்பால் வாபஸ் பெற்றது!
மைசூரு: கர்நாடக மாநிலம் மைசூர் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவி ஒருவர் கடந்த 24 ஆம் தேதி அன்று தனது ஆண் நண்பருடன் சாமுண்டி மலை அருகே காரை நிறுத்திவிட்டு பேசிக் கொண்டிருந்தார்.
Recommended Video
ஆள் நடமாட்டம் இல்லாத அந்த பகுதியில் திடீரென்று வந்த 6 பேர் அந்த ஆண் நண்பரை கடுமையாக தாக்கி விட்டு அந்த மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து விட்டு தப்பியோடிவிட்டனர்.

அதிர்வலை ஏற்படுத்தியது
அங்கே வந்த சிலர் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்த பகீர் சம்பவம் கர்நாடக மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று மாணவ-மாணவிகள், அரசியல் கட்சி தலைவர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர். இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் கைது செய்யப்ட்டுள்ளனர்.

5 பேர் கைது
தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், திருப்பூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் கூலித் தொழிலாளர்கள். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் 18 வயதுக்கு உட்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக எதிர்ப்பு வலுத்து வந்ததால் மைசூர் பல்கலைக்கழகம் ஒரு அதிரடி முடிவை எடுத்தது.

6 மணிக்கு மேல் தடை
அதாவது பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட குக்கராஹள்ளி ஏரி அருகே மாலை 6 மணிக்கு மேல் மாணவிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது. பல்கலைக்கழகத்தின் மானசா கங்கோத்திரி வளாகத்திலும் மாலை 6 மணிக்கு மேல் மாணவிகள் தனியாக அமர்ந்து இருக்க கூடாது . அங்கேயும் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரைக்கும் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் நியமிக்கப்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த கட்டுப்பாடுகளால் மாணவிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

பெண்கள்தான் காரணமா?
''பல்கலைக்கழக பதிவாளர் பெண்களின் பாதுகாப்பை அதிகரிக்கவும் அவர்களுக்கு பாதுகாப்பை வழங்குவதற்கும் பதிலாக பெண்களின் நடமாட்டத்தை தடை செய்துள்ளார். கற்பழிப்புக்கு பெண்கள்தான் காரணம் என்பதை அவர்களின் சிந்தனை செயல்முறையை இது தெளிவாக காட்டுகிறது'' என்று மாணவ அமைப்புகள் கடுமையாக எதிர்த்தன.

தடையை திரும்ப பெற்றது
கடுமையான எதிர்ப்பை தொடர்ந்து, மைசூர் பல்கலைக்கழக வளாகத்தில் மாலை 6.30 மணிக்கு மேல் பெண்கள் நடமாடுவதற்கான விதிக்கப்பட்ட தடையை மைசூரு பல்கலைக்கழகம் நீக்கியுள்ளது. இதுதொடர்பாக கர்நாடகா உயர்கல்வி அமைச்சர் சிஎன் அஸ்வத் நாராயண் அறிவுறுத்தியதாக வட்டாரங்கள் தெரிவித்தன.












Click it and Unblock the Notifications