கரண்ட் கம்பத்தின் உச்சியில் அமர்ந்து சாப்பிடும் ஊழியர்.. ஒரு ராயல் சல்யூட்!
கரண்ட் கம்பத்தில் உட்கார்ந்து சாப்பிடுகிறார் மின் ஊழியர் ஒருவர்.
நாகை: சாப்பிட கூட நேரம் இல்லாமல், கரண்ட் கம்பத்திலேயே மின் ஊழியர் ஒருவர் சாப்பிடும் போட்டோ ஒன்று இணையத்தில் படு வேகமாக வைரலாகி வருகிறது.
டெல்டா மாவட்டங்களில் புயல்போய் ஒரு வாரத்துக்கு மேல் ஆகிவிட்டாலும் நிலைமை சீராகவில்லை. இன்னமும் கூட மீட்பு பணிகள் அங்கு போய் கொண்டுதான் இருக்கின்றன.
இதில் தனியார் அமைப்புகள் முதல், அரசு வரை எல்லாருமே ஈடுபட்டு வருகிறார்கள். இப்போதைக்கு அவர்களுக்கு தேவை சாப்பாடும், கரண்ட்டும்தான்.
கரண்ட் அத்தியாவசியம்
உணவு பொருட்கள் நிறைய பேர் தயார் செய்து கொண்டு வந்து தருகிறார்கள். ஆனால் கரண்ட்தான் இன்னமும் பெரும்பாலான இடங்களுக்கு வரவில்லை. அதை சீர் செய்யும் பணிகள்தான் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.ஏனென்றால் குடிநீருக்கும், பம்ப் செட்டுக்கும் கரண்ட்தான் டெல்டா மாவட்ட மக்களுக்கு அத்தியாவசிய தேவையாக இருக்கிறது.
பழுது பார்க்கும் வேலை
இதற்காக இரவு பகல் பாராமல், நிறைய மின்வாரிய ஊழியர்கள் கடுமையாக வேலை பார்த்து வருகிறார்கள். சாய்ந்து கிடக்கும் கரண்ட் கம்பங்களை சரிசெய்தும், அறுந்து விழுந்து கிடக்கும் மின் கம்பிகளை பழுது பார்க்கும் வேலையில் இறங்கி உள்ளனர்.
உச்சியில் சாப்பாடு
இப்படித்தான் ஒருவர் நாகை மாவட்டத்தில் மின்கம்பத்தை சரி செய்யும் வேலையில் இறங்கினார். அந்த மின்கம்பம் ஒரு வயல்வெளிக்கு நடுவில் உள்ளது. கம்பத்தின் உச்சியில் போய் உட்கார்ந்து கொண்டு வேலை பார்த்தார். பின்னர் கீழே இறங்கி வந்து சாப்பிடக்கூட முடியாமல், கம்பத்திலேயே உட்கார்ந்து கொண்டு சாப்பிடுகிறார். இந்த போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ராயல் சல்யூட்
இவர் மட்டுமில்லை, இவரை போன்று எத்தனையோ பேர், மரங்களை சீர் செய்யும்போது, நடுரோட்டிலேயே உட்கார்ந்து கொண்டு சாப்பிடுகிறார்கள். பலர் கொட்டும் மழையில் நனைந்து கொண்டு சாப்பிடுகிறார்கள். இப்படிப்பட்ட போட்டோக்களை எல்லாம் பார்க்கும்போது இவர்களுக்கு நாம் ஒரு சல்யூட் வைத்தே ஆக வேண்டும்.