வேளாங்கண்ணி பேராலய விழா: மக்கள் நேரில் வர வேண்டாம் - ஆன்லைனில் தரிசனம் செய்யலாம்
வேளாங்கண்ணி பேராலய ஆண்டு விழாவை தொலைக்காட்சி-சமூக வலைதளங்களில் கண்டுகளிக்க வேண்டும் என நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாகப்பட்டினம்: கொரோனா பரவல் காரணமாக வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதால் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்திற்கு பக்தர்கள் பாதையாத்திரையாகவும், பஸ்கள் மற்றும் வாகனங்கள் மூலமாக வருவதை தவிர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்றுபரவல் காரணமாக அனைத்து மத வழிபாட்டுத்தளங்களிலும் வருகிற 31ஆம் தேதி வரை பொதுமக்கள் பிரார்த்தனை செய்ய மற்றும் மதம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
பிரசித்திபெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தின் ஆண்டு திருவிழா வருகிற 29ஆம் தேதி கொடியேற்றுத்துடன் தொடங்குகிறது. செப்டம்பர் 8ஆம் தேதி வரை விழா நடைபெறும் நிலையில், கொரோனா பரவலை கவனத்தில் கொண்டு, பக்தர்களுக்கு தடைவிதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

வேளாங்கண்ணி திருவிழா
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு பெருவிழா வருகிற 29ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 9ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த விழாவில் கலந்து கொள்ள லட்சக்கணக்கானோர் பாதையாத்திரையாகவும், வாகனங்கள் மூலமாகவும் வந்து செல்வார்கள்.
வங்க கடலோரம் அமைந்துள்ள வேளாங்கண்ணியில் திருவிழா நடைபெறும் 11 நாட்களும் மனித கடலாக காட்சியளிக்கும். அந்தளவுக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் அங்கு குவிவார்கள்.

பல சமய பக்தர்கள் வருகை
வேளாங்கண்ணியில் உள்ள பேராலயம் பிரான்ஸ் நாட்டின் லூர்து நகரில் உள்ள பேராலயத்தை போன்று வடிவமைக்கப்பட்டிருக்கிறது. கிறிஸ்துவ பெருமக்கள் மட்டுமல்லாமல் இந்துக்கள், இஸ்லாமியர்கள் என பல தரப்பட்டோரும் அங்கு சென்று வருவது வழக்கம். இதனால் மத நல்லிணக்கத்தின் அடையாளச் சின்னமாக வேளாங்கண்ணி பேராலயம் திகழ்கிறது.

பாதயாத்திரை
ஏசுபிரானின் தாயான மரியன்னை தங்களுக்காக அவர் மகனிடத்தில் பரிந்துரைத்து துயர் துடைப்பார் என்பது கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் நம்பிக்கை. தீராத நோய்களுடனும் துன்பங்களுடன் அவதிப்படும் ஆயிரக்கணக்கானோர் வேளாங்கண்ணி பேராலயத்திற்கு வருகை தருவதாக வேண்டி தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றுவார்கள். தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் நடந்தே பாதயாத்திரையாகவும் வேளாங்கண்ணிக்கு வருகை தருவார்கள்.

பக்தர்கள் வேண்டுதல்
திருவிழா நடைபெறும் 11 நாட்களும் தமிழ், ஆங்கிலம், மராத்தி, மலையாளம், கொங்கணி, தெலுங்கு, கன்னடம் ஆகிய பல மொழிகளில் திருப்பலிகள் நடைபெறும். இதேபோல் நோய்களில் அவதிப்படுபவர்கள் குணம்பெற வேண்டி சிறப்பு வேண்டுதல் நிகழ்வும் நடைபெறும். கண்ணீர் மக்கள் மக்கள் அன்னையிடம் பிராத்தனை செய்து கொள்வார்கள்.

பக்தர்களுக்கு தடை
மரியே வாழ்க என்ற விண்ணை பிளக்கும் பக்தர்களின் முழக்கங்களுடன் ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக நடைபெற்று வந்த வேளாங்கண்ணி திருவிழாவில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் பக்தர்கள் பங்கேற்கவில்லை. இந்த ஆண்டும் திருவிழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர் உத்தரவு
கொரோனா பரவல் காரணமாக வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதால் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்திற்கு பக்தர்கள் பாதையாத்திரையாகவும், பஸ்கள் மற்றும் வாகனங்கள் மூலமாக வருவதை தவிர்க்க வேண்டும் என நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் கூறியுள்ளார். இதற்கு பதில் வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா ஆராதனை நிகழ்ச்சிகளை, பக்தர்கள் தொலைக்காட்சி, செய்திதாள்கள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக கண்டுகளிக்கலாம்.

ஆன்லைனில் தரிசனம்
கொரோனா தொற்று பரவாமல் தடுக்க பாதையாத்திரையாகவோ, வாகனங்கள் மூலமாகவே பக்தர்கள் வருவதை தவிர்த்து மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், 10 நாட்களும் வேளாங்கண்ணியில் தங்கும் விடுதிளை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. திருவிழாவை முன்னிட்டு தற்காலிக கடைகள் அமைப்பதற்கும், பிற கடைகள் மற்றும் உணவகங்கள் திறப்பதற்கும் அனுமதியில்லை என மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications