குவைத்திலிருந்து வந்த கௌதம்.. அலேக்காத தூக்கிய போலீஸ்! “ப்ளேபாய்” காசி கன்னியாகுமரி நினைவிருக்கா?
நாகர்கோவில்: சென்னையை சேர்ந்த பெண் மருத்துவர் உட்பட பல பெண்களை காதலிப்பது போல் நடித்து அவர்களை ஆபாச படம் எடுத்து மிரட்டிய வழக்கில் தேடப்பட்டு வந்த காசியின் நண்பர் கௌதமை போலீசார் கைது செய்து இருக்கின்றனர்.
நாகர்கோவில் கணேசபுரத்தைச் சேர்ந்தவர் தங்கபாண்டியன் என்பவரது மகன் காசி. இவர் சென்னையை சேர்ந்த பெண் மருத்துவர் உட்பட பல பெண்களிடம் சமூக வலைதளங்கள் மூலம் அறிமுகமாகி காதலிப்பது போல் நடித்துள்ளார்.
அப்போது அவர்களை ஆபாசமாக படம் எடுத்து அந்த படத்தை காட்டி பணம் கேட்டு மிரட்டி உள்ளார். இது தொடர்பாக காவல் நிலையத்தில் சென்னையை சேர்ந்த பெண் மருத்துவர் புகார் அளித்தார். அதன் பேரில் நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

குவைத்தில் கௌதம்
இந்த வழக்கில் காசி மற்றும் அவரது கூட்டாளி ஜினோ ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். மற்றொரு கூட்டாளியான கனகப்பபுரத்தை சேர்ந்த கௌதம் என்பவர் குவைத் சென்று விட்டதால் அவர் கைது செய்யப்படாமல் இருந்து வந்தார். அவர் குறித்து அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டு இருந்தது.

சிபிசிஐடி விசாரணை
பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டது. இது தொடர்பாக சிபிசிஐடி அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த விசாரணையில் காசி வழக்கு தொடர்புடைய ஆவணங்களை அழித்ததாக அவருடைய தந்தை தங்கபாண்டியனை அவர்கள் கைது செய்தனர். தற்போது காசி சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.

கௌதம் வருகை
காசி பாலியல் வழக்கு விசாரணை நாகர்கோவில் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் குவைத்தில் தங்கி இருந்த காசியின் நண்பர் கௌதம் இன்று அந்நாட்டில் இருந்து கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள விமான நிலையத்துக்கு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தீவிர விசாரணை
அதன் பேரில் சிபிசிஐடி போலீசார் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது குவைத்தில் இருந்து வந்த கௌதமை அவர்கள் பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை நாகர்கோவில் சிபிசிஐடி அலுவலகத்திற்கு கொண்டு வந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications