லோக்சபா தேர்தலில் பாஜகவை ஆதரித்து தேர்தல் பணியாற்ற ரெடி.. சீமான் அதிரடி.. ஆனால் ஒரு கண்டிஷன்!
நாகர்கோவில்: தமிழர் ஒருவர் பிரதமர் ஆக வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள். 2024 தேர்தலில் தமிழரை பிரதமராக அறிவியுங்கள் நாங்கள் ஆதரிக்கிறோம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். பிரதமர் வேட்பாளராக பொன்.ராதாகிருஷ்ணனா, தமிழிசையா, அண்ணாமலையா யாரை அறிவிக்கிறீர்கள்?" அதை வெளிப்படையாக சொல்லுங்கள் என்றும் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாகர்கோவிலில் நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், உலகத்தில் எவன் உயர்ந்த மனிதன் என்றால் வீழ்ந்து கிடப்பவனை குனிந்து எவன் கைதூக்கி விடுகிறானே அவன்தான் உயர்ந்த மனிதன்.
இந்த தத்துவம் உருவாவதற்கு முன்பே இந்த மண்ணில் பிறந்த புரட்சியாளன் வைகுண்டர். தாழகிடப்பாரை தற்காப்பதே தர்மம்' எனக்கூறிவிட்டார். மார்ஷல் நேசமணி இந்த மண்ணை மீட்க போராடினார். அவருடைய பேரன் பேத்திகள் இந்த மண்ணை காக்க போராடிக்கொண்டிருக்கிறோம் என்றார்.

இயற்கையைப் பற்றி பேசிய சீமான், தொடர்ந்து அரசியலுக்கு மாறினார்.செந்தில் பாலாஜி வந்த பிறகு நிறைய கள்ளச்சாராயம் வந்துவிட்டது. பத்து லட்சம் ரூபாய் கிடைக்கும் என்பதால் நிறையபேர் கள்ளச்சாராயம் குடிக்கிறார்கள். இப்போது அந்த மகாராசனுக்கும் முடியல. கைது என்றால் நெஞ்சுவலி வருவதை தெலுங்கு படத்திலும், விஜயகாந்த் படத்திலும் பார்த்திருக்கிறோம். அவருக்கு இ.சி.ஜி இயல்பு நிலையில் இல்லை என்கிறார்கள்.
உண்மையிலேயே செந்தில் பாலாஜியால் நாட்டு மக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக இயல்பு நிலையில் இல்லை. மின்சார கட்டண உயர்வு, மின் தடை என எதுவும் இயல்புநிலையில் இல்லை. அதிலும் சரக்கு இயல்பு நிலையில் இல்லை.
செந்தில் பாலாஜி அ.தி.மு.க ஆட்சி காலத்தில் செய்த ஊழலுக்கு இப்போது ரெய்டு நடத்துகிறார்களாம். ஜெயலலிதா அம்மையார் ஆட்சியில் நடந்த ஊழலுக்கு இப்போது ரெய்டு போகிறீர்கள். இவ்வளவு நாட்கள் என்ன செய்தீர்கள். செந்தில் பாலாஜிக்கு உடம்பு சரியில்லை என்றால் அரசு மருத்துவமனைக்கு போனவர் ஏன் தனியார் மருத்துவமனைக்கு போக வேண்டும் என்கிறார் என்று கேட்டார் சீமான்.
தமிழர் ஒருவர் பிரதமர் ஆக வாய்ப்பு இருக்கிறது என்று அமித்ஷா கூறியுள்ளார். 2024 தேர்தலில் தமிழரை பிரதமராக அறிவியுங்கள் நாங்கள் ஆதரிக்கிறோம், தேர்தல் வேலை பார்க்கவும் ரெடி. பொன்.ராதாகிருஷ்ணனா, தமிழிசையா, அண்ணாமலையா யாரை அறிவிக்கிறீர்கள். அதை விட்டு விட்டு பொதுவாக தமிழரை பிரதமர் வேட்பாளராக அறிவிப்போம் என்று வாயில் பாயாசம் கிண்டி, வாயில் வடை சுடக்கூடாது. 2 கோடி பேருக்கு வேலை எனச்சொன்னார்கள். வேலை கேட்டால் பக்கோடா விற்க சொல்கிறார்கள் என்றும் கிண்டலடித்தார் சீமான்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு , மத்திய அமைச்சர் அமித்ஷா தமிழகத்திற்கு வந்து கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தில் பேசும் போது தமிழர் ஒருவர் வருங்காலத்தில் பிரதமராக வேண்டும் எனவும் அதற்காக பாஜக தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என பேசியிருந்தார். அந்த தமிழர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இப்போதைக்கு மத்திய அரசின் உயர் பதவியில் நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் ஆகியோர் உள்ளனர் அவர்கள் இருவரையும் மனதில் வைத்து அமித்ஷா கூறினாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
தமிழர் பிரதமர் வேட்பாளர் என்பது குறித்த கேள்விக்கு சில நாட்களுக்கு முன்பு பதில் அளித்த மு.க ஸ்டாலின், பிரதமர் மோடி மீது அமித்ஷாவிற்கு என்ன கோபம் என்று தெரியவில்லை. பிரதமர் வேட்பாளராக எல்.முருகன், தமிழிசை சவுந்தரராஜனை அறிவிப்பார்களா என்றும் முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications