அந்தப் பக்கம் அப்பா.. இந்தப் பக்கம் மனைவி.. 2 "வாத்தியார்கள்".. ஓலை முடைந்த சுப. உதயகுமாரன்!
நாகர்கோவில்: கற்றுக் கொள்ள வயசு கிடையாதுங்க.. எந்த வயதிலும் எதையும் கற்றுக் கொள்ளலாம். சிலர் வசதிக்காக கற்றுக் கொள்வார்கள்.. சிலர் வாழ்க்கைக்காக கற்றுக் கொள்வார்கள்.. சிலர் பாரம்பரியம் மறைந்து போய் விடக் கூடாதே என்று கற்றுக் கொள்வார்கள்.
Recommended Video
தகிக்க வைத்த கூடங்குளம் போராட்டக் களத்தில் தலைமை தாங்கி பீடு நடை போட்டு மக்களை வழி நடத்திய முன்னோடி சுப உதயகுமாரனும் அப்படி ஒரு வித்தையை இப்போது கற்றுக் கொண்டுள்ளார்.
இணையதள சேவையை முடக்குவது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது.. ஜி 7 நாடுகள், இந்தியா வெளியிட்ட கூட்டறிக்கை
அவருக்குக் கற்றுக் கொடுத்தவர் வேறு யாருமல்ல.. அவரது அப்பாதான். கூடவே அவரது மனைவியும் இருந்து சொல்லிக் கொடுக்க அழகாக அந்தக் கலையைக் கற்றுக் கொண்டுள்ளார் உதயகுமாரன். அது வேறு ஒன்றுமல்ல.. தென்னை ஓலை முடைவதுதான்.
மறைந்து போகும் கலைகள்
கிராமத்துக் கலைகள் எத்தனையோ இன்று மறைந்து போய் விட்டன. காரணம், அதை அடுத்தடுத்து கொண்டு செல்ல இப்போதைய தலைமுறையினர் பலர் விரும்பவில்லை அல்லது அதற்கு நேரம் இல்லை.. இடப் பெயர்ச்சிகள் இன்னொரு பெரிய காரணம். கிராமங்களில் வசித்த பலரும் இன்று நகரங்களுக்கு இடம் பெயர்ந்து போய் விட்டனர். வருடத்திற்கு ஒரு முறை வருவது கூட பெரும் அயர்ச்சியாக இருக்கிறது அவர்களுக்கெல்லாம்.
கலைப் பொக்கிஷங்கள்
கிராமப்புறங்களில் பயன்படுத்தப்பட்ட பாரம்பரியப் பொருட்கள், பழக்க வழக்கங்கள் கூட இன்று பல ஊர்களில் மறைந்து போய் கொண்டிருக்கின்றன. பல்வேறு வகையான தாக்கங்கள் அவர்களை வேறு பக்கம் திசை திருப்பிக் கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் தனது அப்பாவிடம் தென்னை ஓலை முடைவது எப்படி என்று கற்றுக் கொண்ட உதயகுமாரன் நம்மை ஆச்சரியப்பட வைக்கிறார்.. கூடவே இதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது.. இது அவரது கடமை என்றும் எண்ண வைக்கிறார்.
குத்த வைத்துக் கற்றுக் கொண்ட பிள்ளை
"எவ்வளவு வயதானாலும் அப்பாக்களிடம் புதிதாகப் படிப்பதற்கு ஏதாவது இருக்கிறது. ஊரடங்கு காலத்தில், அப்பாவின் தென்னை ஓலை முடையும் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறேன்" என்று தனது முகநூல் பக்கத்தில் போட்டுள்ளார் உதயகுமாரன். அப்பா ஒரு ஸ்டூலில் அமர்ந்து கொண்டு பிள்ளைக்கு சொல்லிக் கொடுக்கிறார். அதிகம் பேசி வேலை வாங்காத "நல்ல அப்பா"வாக இருக்கிறார்! அதையும் உதயகுமாரன் சொல்லியுள்ளார்.
கற்றுத் தந்த துணைவியார்
"பள்ளிப் பருவத்தில் போலல்லாமல், இப்போது திட்டவோ, அடிக்கவோ வரவில்லை" என்று கூறியுள்ள உதயகுமாரன், "கூடுதலாக ஒரு டீச்சரும் அப்பாவின் உதவிக்கு" என்று சொல்லியுள்ளார். அந்த கூடுதல் டீச்சர் யார் தெரியுமா.. உதயகுமாரின் துணைவியார் மீரா அவர்கள்தான். கையில் டீ டம்பளரை ஏந்தியபடி கணவருக்கு சொல்லிக் கொடுக்கிறார் மீரா உதயகுமாரன். இப்படி பண்ணுங்க.. அப்படி பண்ணுங்க என்று அழகாக கணவருக்குச் சொல்லித் தருகிறார் மீரா.
2 வாத்தியார்கள் புடை சூழ
அப்பா ஒரு வாத்தியார், மனைவி இன்னொரு வாத்தியார் என இரு பக்கமும் சொல்லிக் கொடுக்க கிராமத்து ஸ்டைலில் குத்த வைத்து உட்கார்ந்து அழகாக தென்னை ஓலையை முடைகிறார் உதயகுமாரன். ஒரு கட்டத்தில் மீரா அம்மையாரே களம் இறங்கி முடையை ஆரம்பிக்கிறார். மருமகளுக்கும் சில டிப்ஸ் கொடுக்கிறார் மாமனார். இந்த கண் கொள்ளாக் காட்சியை வீடியோவோக்கி பகிர்ந்துள்ளார் உதயகுமாரன்.
நாமும் கற்போம்
உண்மையில் ஒவ்வொருவரும் தத்தமது கலையை கைவிடாமல் கைக் கொள்ள வேண்டும். அதை பின்பற்ற வேண்டும். அவை மறைந்து விடாமல் காக்க கற்றுக் கொள்ள வேண்டும். நாம் கற்றுக் கொண்டதை நமது வழித்தோன்றல்களுக்கும் சொல்லிக் கொடுக்க வேண்டும். ஏணி மீது ஏறிப் போய் விட்டால் மட்டும் போதாது.. அந்த ஏணி வழியாக பலரை நாமும் ஏற்றி விட வேண்டும். உதயகுமாரனை, அவரது ஆர்வத்தை நாம் நிச்சயம் பாராட்டலாம்.
அறிவார்ந்த அப்பாக்கள்
அப்பாக்கள் எப்போதுமே அழகுதான்.. அவர்களிடமிருந்து ஒரு வீணான நிமிடத்தைக் கூட பிள்ளைகள் பெறுவதில்லை. ஏதாவது ஒன்றை சொல்லிக் கொண்டேதான் இருப்பார்கள். ஒரு போராளிக்குள் புகுந்த இந்த சின்னச் சின்ன ஆசை பார்க்கவே சுவாரஸ்யமாக இருக்கிறது.. நீங்களும் பார்த்து மகிழுங்கள்.. நீங்களும் ஏதாவது கற்றுக் கொள்ள முயற்சியுங்கள்.. கற்பித்தல் ஒரு கலை என்றால் கற்பது அதை விட பெரிய சுவாரஸ்யம்.. பண்ணிப் பாருங்க.. உங்களுக்கே உங்களை ரொம்பப் பிடிக்கும்.