வெறும் 70 ரூபாயில் வீடு தேடி வரும் வசதி.. தமிழக அரசு பணி ஓய்வூதியதாரர்களுக்கு தபால் துறை குட்நியூஸ்
நாகர்கோவில் : அரசு பணி ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் தபால்காரர்கள் மூலமாக வீட்டில் இருந்தபடியே உயிர்வாழ் சான்று சமர்ப்பிக்கலாம் என்று கன்னியாகுமரி கோட்ட கண்காணிப்பாளர் அறிவித்துள்ளார்.
தமிழக அரசு பணிக்கான ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் ஆண்டு முழுவதும் வீட்டில் இருந்தபடியே தங்களது உயிர் வாழ் சான்றிதழை டிஜிட்டல் முறையில் தபால்காரர்கள் மூலம் சமர்பிக்க முடியும். வெறும் 70 ரூபாயில் வீட்டு வாசலிலேயே பயோமெட்ரிக் முறையை பயன்படுத்தி டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் சமர்பிக்க முடியும்..

இதுபற்றி தபால்துறை கன்னியாகுமரி கோட்ட கண்காணிப்பாளர் செந்தில் குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழக அரசு பணிக்கான ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் ஆண்டு முழுவதும் வீட்டில் இருந்தபடியே தங்களது உயிர் வாழ் சான்றிதழை டிஜிட்டல் முறையில் தபால்காரர்கள் மூலம் சமர்ப்பிப்பதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது.
அதன்படி தபால் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி, ஓய்வூதியதாரர்களின் வீட்டு வாசலிலேயே பயோமெட்ரிக் முறையை பயன்படுத்தி டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் (ஜீவன் பிரமான்) சமர்ப்பிக்க ஏற்பாடு செய்துள்ளது. இதற்கு சேவை கட்டணமாக ரூ.70 தபால்காரரிடம் செலுத்த வேண்டும்.
ஓய்வூதியதாரர்கள் தங்கள் பகுதி தபால்காரரிடம் ஆதார், செல்போன் எண், பி.பி.ஓ. எண் மற்றும் ஓய்வூதிய வங்கி கணக்கு விவரங்களை தெரிவித்து கைவிரல் ரேகையைப் பதிவு செய்தால் ஒரு சில நிமிடங்களில் டிஜிட்டல் உயிர் வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க முடியும்.
இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் வங்கி, கன்னியாகுமரி தபால் கோட்டத்தில் தபால் நிலையங்கள் மூலமாகவும், ஸ்மார்ட் போன்கள் மற்றும் பயோமெட்ரிக் சாதனங்கள் வழங்கப்பட்டுள்ள தபால்காரர்கள் மற்றும் கிராமிய தபால் ஊழியர்கள் மூலமாகவும் வங்கி மற்றும் இதர சேவைகளை வழங்கி வருகிறது" இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications