நாகையில் பரபரப்பு.. பள்ளி விடுதியில் சாப்பிட்ட 50 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்.. நடந்தது என்ன?
நாகை: வேதாரண்யத்தில் தனியார் மேல்நிலைப்பள்ளி விடுதியில் காலை உணவு சாப்பிட்ட 50க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவிகள், வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், கடந்த சில நாட்களாக சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்து கொடுப்பதால் பள்ளி குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்படுவது அதிகரித்து வருகிறது. இவற்றை தடுக்க தமிழக அரசு பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கிய போதும் இன்னும் குறைந்தபாடில்லை.
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அரசு நிதியுதவி கஸ்தூர்பா காந்தி கன்யா குருகுல மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 1500-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியில் மாணவிகள் தங்கி படிப்பதற்காக விடுதி ஒன்று உள்ளது. இங்கு 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான 190 மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று காலை வழங்கம்போல மாணவிகளுக்கு சிற்றுண்டி வழங்கப்பட்டது. ஆனால், காலை உணவு சாப்பிட்ட 10 நிமிடத்திற்குள் 50க்கும் மேற்பட்ட விடுதி மாணவிகளுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவிகள் அனைவரையும், ஆம்புலன்ஸ் மற்றும் ஆட்டோக்கள் மூலம், அருகே உள்ள அரசு மருத்துவமனையில் பள்ளி நிர்வாகத்தினர் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். இதில் பலருக்கு வாந்தி மயக்கம் சரியாகி விடுதிக்கு திரும்பியதாகவும், 20க்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட கல்வி அதிகாரி உள்பட பலதுறை அதிகாரிகள், காவல்துறையினர் விரைந்துவந்து விசாரணை நடத்தினர். அப்போது விடுதியில் மாணவிகள் சாப்பிட்ட கோதுமை உப்புமாவில் துண்டு துண்டாக பல்லி இருந்ததாக மாணவிகள் புகார் அளித்தாக கூறப்படுகிறது. இதையடுத்து விடுதியில் தயார் செய்யப்பட்ட காலை உணவின் தரம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் விடுதியில் சாப்பிட்ட மற்ற மாணவிகளின் உடல் நிலையையும் கண்காணித்து வருகின்றனர்.
வேதாரண்யம் தனியார் பள்ளி விடுதியில் காலை உணவு சாப்பிட்ட 50 மாணவிகளுக்கு வாந்தி,மயக்கம் ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications