அதிமுக சேர்மனை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய திமுக மாவட்டச் செயலாளர்! மாஜி அமைச்சர் தங்கமணிக்கு ஷாக்!
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் சந்திரசேகரபுரம் அதிமுக ஊராட்சி மன்றத் தலைவர், துணைத் தலைவர், கவுன்சிலர்கள் என கொத்தோடு திமுகவில் இணைத்து மாஜி அமைச்சர் தங்கமணிக்கு ஷாக் கொடுத்திருக்கிறார் திமுக மாவட்டச் செயலாளர் ராஜேஷ்குமார் எம்.பி.
நாமக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை அதிமுகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக திகழும் தங்கமணியின் சொந்த மாவட்டமாகும். இந்நிலையில் அவரது சொந்த மாவட்டத்திலேயே அதிமுகவினர் திமுகவுக்கு தாவியிருப்பது முக்கியமான நிகழ்வாக கருதப்படுகிறது.

தமிழகம் முழுவதும் திமுகவில் புதிய உறுப்பினர்களை இணைக்கும் பணிகளும், மாற்றுக் கட்சிகளை சேர்ந்த முக்கியப் பிரமுகர்களை வளைக்கும் படலங்களும் நடந்து வருகின்றன.
அந்த வகையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஒன்றியத்தில் உள்ள சந்திரசேகரபுரம் அதிமுக ஊராட்சி மன்றத் தலைவர் பழனிவேல், துணைத் தலைவர் முத்துசாமி, மற்றும் 5 கவுன்சிலர்கள் ஆகியோர் மாஜி அமைச்சர் தங்கமணி மீது அதிருப்தியில் இருப்பதை உள்ளூர் திமுக நிர்வாகிகள் ஸ்மெல் செய்திருக்கின்றனர்.
இது குறித்த தகவலை நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ராஜேஷ்குமார் எம்.பி. கவனத்திற்கும் கொண்டு சென்றிருக்கின்றனர்.
இதையடுத்து அதிமுக சேர்மன், வைஸ் சேர்மன் மற்றும் 5 கவுன்சிலர்களை கொத்தாக திமுகவுக்கு தூக்குவதற்கான பணிகளை கவனித்தார் ராஜேஷ்குமார் எம்.பி.
அதிமுக தரப்பிலும் திமுகவின் முயற்சிகளை முறியடிக்க பல்வேறு முயற்சிகளை எடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அது பலன் அளிக்கவில்லை.
ஏற்கனவே நாமக்கல் மாவட்டத்தில் பல அதிமுக முக்கியப் பிரமுர்களை திமுகவுக்கு அழைத்துசென்ற ராஜேஷ்குமார், இப்போது மீண்டும் தனது 2வது இன்னிங்ஸை ஆரம்பித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே கரூர் மாவட்டத்தில் அதிமுக பஞ்சாயத்து தலைவர்களே இல்லை என்ற நிலையை உருவாக்கும் வகையில் அமைச்சர் செந்தில்பாலாஜி டீம் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications