என்னாது.. எடப்பாடி கோஷ்டி பாஜகவிற்கு தாவுகிறதா.. தடதட கொங்கு.. கொளுத்திய புகழேந்தி
நாமக்கல் : எடப்பாடி பழனிசாமியுடன் இருப்பவர்கள் விரைவில் பாஜகவில் இணைய இருக்கிறார்கள் என அதிமுகவின் முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையே நிலவி வரும் மோதல் சூழல் காரணமாக, அதிமுகவினர் இரு அணிகளாகப் பிரிந்து கிடக்கின்றனர். இந்நிலையில், தங்கள் பலத்தை அதிகரிக்கும் முயற்சிகளில் இரு தரப்பினரும் ஈடுபட்டு வருகின்றனர்.
எடப்பாடி பழனிசாமி பலமாக இருக்கும் கோவை, நாமக்கல், சேலம் பகுதிகளில் இருந்து தங்கள் பக்கம் ஆட்களைத் திரட்டி வருகிறது ஓபிஎஸ் டீம். தொடர்ந்து பல முக்கிய நிர்வாகிகள் தங்கள் பக்கம் வரவிருப்பதாக ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி கூறியுள்ளார்.
மேலும், தங்களுக்கு ஆதரவு தேடி எடப்பாடி பழனிசாமி, பாஜகவை நாடிய நிலையில், அவருக்கு சாதகமான பதில்கள் மேலிடத்தில் கிடைக்கவில்லை.

ஈபிஎஸ் அணிக்குள் குழப்பம்
இதனால், பாஜகவை சீண்டும் வகையில் சில நடவடிக்கைகளில் ஈடுபட்டார் எடப்பாடி பழனிசாமி. உட்கட்சி பிரச்சனையில் பாஜக தலையிடாது என்றெல்லாம் பேசி வந்தார். தங்கள் கூட்டணி இல்லாமல் பாஜக ஜெயிக்க முடியாது என ஆதரவாளர்களிடமும் ஈபிஎஸ் பேசியதாக தகவல் வெளியானது. அதேசமயம், அவரது அணிக்குள்ளேயே பாஜகவுடன் மோதல் வேண்டாம் என்பதாக சில சீனியர்கள் கூறி வருவதால், குழப்பம் நீடித்து வருவதாகத் தெரிகிறது. இந்நிலையில் தான், ஈபிஎஸ் அணியில் இருந்து சிலர் பாஜகவிற்கு செல்லப் போகிறார்கள் எனக் கூறியுள்ளார் புகழேந்தி.

ஊழல் பற்றி விசாரிப்பாரா?
ஓபிஎஸ் ஆதரவாளரான அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி ராசிபுரம் அருகே தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய புகழேந்தி, "சென்னை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடைபெற்ற ஆயிரம் கோடி ஊழலை பற்றி தமிழக முதல்வர் ஸ்டாலின் விசாரிப்பாரா? கடந்த அதிமுக ஆட்சியின் போது சென்னையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மழை நீர் வடிகால் வாரியம் அமைக்க ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டன. அப்போது பெய்த மழையால் சென்னை பெருநகரம் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியது.

சொன்னாரே.. விசாரணை எங்கே?
அடுத்து அமைந்த திமுக ஆட்சியில் மீண்டும் மழை பெய்தபோது சென்னை முழுவதும் மழை நீர் சூழ்ந்தது. தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மழைநீர் வடிகால் வாரியம் அமைக்க ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டது, ஆனால் அது முறையாக செயல்படுத்தப்படாமல் தற்போது மழை நீர் சென்னை நகரம் முழுவதும் தேங்கியுள்ளது, இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார். ஆனால் இந்த வழக்கு குறித்து இதுவரை எந்த ஒரு விசாரணையும் மேற்கொள்ளவில்லை.

சி.எம். 1 மணி நேரம்
கோடநாடு கொலை குறித்து மேடைக்கு மேடை உரிய விசாரணை நடத்தப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசி வந்தார். முதல்வர் ஸ்டாலின் தேர்தல் நேரத்தில் 1 மணி நேரமெல்லாம் கோடநாடு வழக்கு பற்றி பேசினார். இப்போது வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி விட்டார்கள். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் பழனிசாமி ஏன் இன்னும் விசாரிக்கப்படவில்லை?

உள்ள தூக்கி போடுங்க
லஞ்ச ஒழிப்புத் துறையால் முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் சோதனை நடத்தப்பட்டும் அவர்கள் ஏன் கைது செய்யப்படவில்லை என்று மக்கள் திமுக அரசின் மீது அதிருப்தியில் உள்ளனர். யாரையாவது பிடித்து உள்ளே போட்டால் தானே பயம் வரும். சில குற்றவாளிகளை லாக்கப்பில் அடைத்து உரிய முறையில் விசாரித்தால் தான் உண்மை வரும். நீங்கள் அழைத்து சேர் போட்டு அமர வைத்து ஜூஸ், காபி கொடுத்து விசாரித்தால், திருடன் எப்படி உண்மையைச் சொல்லுவான்?

களத்தில் இறங்க வேண்டியிருக்கும்
அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை தவிர வேறு யாருக்கும் கிடையாது. பழனிசாமி, தங்கமணி, வேலுமணி இவர்களில் யார் நினைத்தாலும் அவர்களின் எண்ணம் ஈடேறாது. தங்கமணி திருந்த வேண்டும். இல்லையென்றால் நாங்கள் களத்தில் இறங்க வேண்டி இருக்கும். அவர் வேண்டுமானால் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு நாமக்கல் மாவட்டத்தில் ஆறு தொகுதியில் எந்த தொகுதியிலாவது நின்று வெற்றி பெறட்டும் பார்க்கலாம்.

ரெடி ஆகிட்டாங்க
ஓ.பன்னீர்செல்வம் முன்பே சொல்லிவிட்டார். சசிகலா, தினகரன் என அனைவரும் இணைய வேண்டும் என ஓபிஎஸ் கூறிவிட்டார். அதிமுக பிரிந்து இருக்கும் நிலையில் தற்போதைய சூழ்நிலையில் தேர்தல் வந்தால் இரட்டை இலை சின்னம் கிடைப்பது சிரமம். எடப்பாடி பழனிசாமியோடு இருப்பவர்கள் சிலர் விரைவில் பாஜகவில் இணைய தயாராகி விட்டார்கள்.

திருப்புமுனை
எல்லா மாவட்டத்தில் இருந்தும் இப்போது ஓபிஎஸ் பக்கம் நகர ஆரம்பித்து விட்டார்கள். கொங்கு மண்டலத்தில் ஆரம்பித்து அப்படியே சென்று கொண்டிருக்கிறோம். அடுத்து ஈரோடு, கோவையில் பெரிய திருப்புமுனையைப் பார்ப்பீர்கள். இப்போதுதான் செயல்வீரர்கள் கூட்டத்தை அவசர அவசரமாக ஈபிஎஸ் அணியினர் நடத்தி வருகிறார்கள். இப்போதுதான் தொண்டர்கள் ஞாபகம் வருகிறது" என தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications