டெஸ்ட் வச்சேன்.. நம்ம எம்பி பாஸ்.. இவரு ஸ்டேட் பிளேயர், அவர் ஒலிம்பிக்- குஷியாகி பாராட்டிய ஸ்டாலின்!
நாமக்கல் : நாமக்கல்லில் நடைபெற்ற திமுக நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மாநிலங்களவை எம்.பி ராஜேஷ் குமாரை பாராட்டித் தீர்த்துள்ளார்.
உள்ளாட்சியிலும் நல்லாட்சி என்ற பெயரில் நாமக்கல்லில் நடைபெற்று வரும் திமுக நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றி ஆற்றினார்.
இந்த மாநாட்டில் பேசிய முதல்வர் ஸ்டாலின், மாநாட்டு ஏற்பாடுகளைச் செய்த நாமக்கல் மாவட்ட திமுக செயலாளரும், ராஜ்ய சபா எம்.பியுமான ராஜேஷ் குமாரை பாராட்டிப் பேசினார்.
சாதாரண பதவின்னு நினைக்காதீங்க.. அண்ணா வார்டு உறுப்பினராக போட்டியிட்டவர்.. முதல்வர் ஸ்டாலின் பேச்சு!
பிரமாண்ட மாநாடு
தி.மு.க சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு நாமக்கல் அருகே பொம்மைக்குடிமேட்டில் நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகளை அமைச்சர் கே.என்.நேரு ஆலோசனையின்பேரில் மாநிலங்களவை எம்.பி.ராஜேஷ் குமார் மேற்கொண்டார். இந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகளையும், வரவேற்பு ஏற்பாடுகளையும் பிரமாண்டமாகச் செய்ததால் முதல்வர் ஸ்டாலின் அகமகிழ்ந்து போயுள்ளார். இதையடுத்து பந்தல் ஏற்பாடு, சமையல் ஏற்பாட்டாளர்களை மேடையிலேயே கவுரவித்த முதல்வர் ஸ்டாலின், ராஜேஷ் குமாரை மனதாரப் பாராட்டினார்.
ராஜேஷ் குமார் ‘பாஸ்’
இந்த மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், "இந்த நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டை எங்கு நடத்தலாம் என யோசித்துக் கொண்டிருந்தபோது, புதிதாக ஒருவருக்கு இந்த வாய்ப்பை வழங்கவேண்டும் என்று தீர்மானித்தோம். நான் வைத்த தேர்வில் ராஜேஷ் குமார் பாஸாகி விட்டார். ஏன் அதனைத் தாண்டியும் சொல்கிறேன். முதல் மதிப்பெண் பெற்றுவிட்டார்.
மக்கள் அலை
நேற்று கரூரில் மக்கள் நலத் திட்டங்கள் வழங்கும் அரசு விழாவில் பங்கேற்று, அங்கு மக்கள் கடலைப் பார்த்தேன். அந்த விழாவுக்குப் பொறுப்பேற்று நடத்திய செந்தில் பாலாஜியை வாழ்த்தினேன். அதை ராஜேஷ்குமார் கேட்டுவிட்டார் போல. நாமக்கல் வந்தால் மாவட்ட எல்லையில் இருந்து நான் தங்கிய இடம் வரை 13 கி.மீ தொலைவுக்கு மக்கள் அலையில் நீந்தித்தான் நான் வந்தேன்.
திமுகவின் கோட்டை
அந்தக் கூட்டத்தைப் பார்த்ததும் என்னுடன் இருந்தவர்களிடம் சொன்னேன். உள்ளாட்சி மாநாட்டை நடத்தச் சொன்னால் மாநில மாநாடே நடத்தியிருக்கிறார்களா என்று. நாமக்கல் மாவட்டத்தை திமுகவின் கோட்டையாக மாற்றியிருக்கும் மாவட்ட செயலாளர் ராஜேஷ் குமார் எம்.பியை மனதார பாராட்டுகிறேன்.
ஸ்டேட் பிளேயர்
கே.என்.நேரு போன்றவர்கள் ஒலிம்பிக் போன்ற பல வெற்றியைப் பார்த்தவர்கள். ராஜேஷ் குமார் ஸ்டேட் பிளேயராக வெற்றி பெற்றிருக்கிறார். இளமையான மாவட்ட செயலாளராக இருந்தாலும், நான் இளைஞரணி செயலாளராக இருந்தபோது மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக இருந்த அனுபவத்தின் மூலமாக மிகத் தேர்ச்சி பெற்றவர் போல மிடுக்கோடும், பிரமாண்டமாகவும் இந்த மாநாட்டை நடத்திக் காட்டியுள்ளார் ராஜேஷ்குமார். அவரோடு தோளோடு தோள் நின்று பணியாற்றிய அனைவரையும் பாராட்டுகிறேன்" எனத் தெரிவித்தார்.