"எனக்குனே வருவீங்களா டா".. ரூட் பஸ்ஸில் ஏறி சொந்த ஊருக்கு டிக்கெட் கேட்டு.. நடத்துனர் மீது தாக்குதல்
நாமக்கல்: ரூட் பஸ்ஸில் ஏறிவிட்டு தனது சொந்த ஊருக்கு டிக்கெட் கேட்டதோடு மட்டுமல்லாமல், டிக்கெட் இல்லை எனக் கூறிய நடத்துனர் மீது சரமாரியாக தாக்குதல் நடத்திய போதை ஆசாமியால் நாமக்கல்லில் பரபரப்பு ஏற்பட்டது.
ஒருகட்டத்தில் பொறுமை இழந்த நடத்துனரும், போதை ஆசாமியை அடித்ததால் இருவரும் சாலையில் கட்டிப்புரண்டு சண்டை போட்டனர்.
பின்னர் தகவலறிந்த போலீஸார், அங்கு வந்து போதையில் இருந்த நபரை கைது செய்தனர். இந்த களேபரத்தால் அந்தப் பகுதியில் சில மணிநேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

தினுசு தினுசான பிரச்சினைகள்..
"உனக்கென்னப்பா அரசாங்க வேலை.. பிரச்சினையே இல்லை" என அரசு ஊழியர்களை பார்த்து பலர் வாடிக்கையாக கூறுவதை பார்த்திருப்போம். ஆனால் இந்தக் கூற்று நிச்சயம் அரசுப் பேருந்து ஓட்டுநர்களுக்கும், நடத்துனர்களுக்கும் மட்டும் பொருந்தாது. தினம் தினம் ஏதாவது புதிய பிரச்சினையை சந்தித்து வரும் ஒரே அரசு ஊழியர்கள் அவர்கள்தான். பல தரப்பு மக்களுக்கான வாகனமாக பேருந்து இருப்பதால், தினமும் விதவிதமான மனிதர்களை அவர்கள் சந்திக்க வேண்டி இருக்கிறது. இதனால் புதுப்புது பிரச்சினைகளும் வருவது வாடிக்கை தான். அப்படியொரு சம்பவம்தான் நாமக்கல்லில் நடைபெற்றுள்ளது.

அமைதியாக சென்ற ரூட் பஸ்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் இன்று காலை பல பயணிகளை ஏற்றிக்கொண்டு காரவிளை பகுதியை நோக்கி ஒரு ரூட் பஸ் சென்று கொண்டிருந்தது. காலை நேரம் என்பதால் அலுவலகத்துக்கு செல்பவர்கள், பள்ளி - கல்லூரி மாணவர்கள் என பஸ்ஸே நிறைந்திருந்தது. இதனால் கூட்டநெரிசலில் கஷ்டப்பட்டு ஒவ்வொரு பயணிகளிடமும் சென்று நடத்துநர் டிக்கெட் கொடுத்துக் கொண்டிருந்தார்.

கோவைக்கு டிக்கெட் வேணுமாம்
அப்போது திடீரென பாதி வழியில் ஒரு போதை ஆசாமி ஒருவர் அந்த பஸ்ஸை வழிமறித்தார். பின்னர் பஸ்ஸில் ஏறிய அவர், தனது சொந்த ஊரான கோவைக்கு செல்ல நடத்துனரிடம் டிக்கெட் கேட்டார். ஏற்கனவே பயணிகள் கூட்டத்தில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த நடத்துனர், "இது ரூட் பஸ்; இது கோவைக்கெல்லாம் போகாது" எனக் கூறினார். ஆனால் அந்த போதை ஆசாமியோ, போன வாரம் தான் இந்த பஸ்லில் போனேன்.. இன்னைக்கு போகாதுன்னு சொல்றியா எனக் கேட்டு நடத்துனரை பளார் பளார் என அறையத் தொடங்கினார்.

கைகலப்பு - போக்குவரத்து ஸ்தம்பிப்பு
இதனால் பொறுமை இழந்த நடத்துனரும், போதை ஆசாமியை தாக்கவே, இருவரும் பஸ்ஸில் இருந்து வெளியே விழுந்து நடுரோட்டில் கட்டிப்புரண்டு சண்டை போட்டனர். இவர்களின் சண்டையால் பஸ்ஸில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், பஸ் சாலையில் நின்றதால் அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த போலீஸார், சண்டையிட்டுக் கொண்டிருந்த இருவரையும் விலக்கிவிட்டனர். பின்னர் போதை ஆசாமியை கைது செய்து காவல் நிலையத்துக்கு அவர்கள் அழைத்துச் சென்றனர். இந்த சம்பவத்தால் ராசிபுரத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications