“பயமா? எனக்கா?” திமுக எம்பி விவாதத்துக்கு “ரெடியா”.. நாமக்கலில் நாக்கை மடித்து சவால் விட்ட தங்கமணி
நாமக்கல்: தான் 10 ஆண்டுகள் நாமக்கல் தொகுதிக்கு என்ன செய்தேன் என்பது பற்றி பொது மேடையில் தன்னோடு விவாதிக்க திமுக எம்பி ராஜேஷ் குமார் தயாராக இருக்கிறாரா? என அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி கேள்வி எழுப்பி இருக்கிறார்.
மத்திய அரசின் இந்தி திணிப்பை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாமக்கலில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக எம்பி ராஜேஷ் குமார் அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணியை விமர்சித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நாமக்கல் நகர அதிமுகவின் செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டு நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார்.

திமுக எம்பி ராஜேஷ் குமார்
அப்போது பேசிய அவர், "இந்தி திணிப்பை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் திமுக மாவட்டச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான ராஜேஷ்குமார் இந்தி திணிப்பை கண்டித்து பேசாமல் தன்னை பற்றி பேசியுள்ளார்.நாமக்கல் நகர்மன்ற தலைவர் தாழ்த்தப்பட்டவராக இருக்கிறார். அவர் எதிலும் தலையிடக்கூடாது, எம்.எல்.ஏ வும் தலையிடக்கூடாது என கூறியுள்ளார். கடந்த 10 ஆண்டுகாலம் நான் என்ன செய்தேன் என ராஜேஷ்குமார் பேசியுள்ளார்.

பயப்படவில்லை
அவர் விடுத்த சவாலை ஏற்றுக்கொண்டு பொதுமேடையில் என்ன செய்தோம் என பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் விவாதிக்க தயார். முன்னாள் அமைச்சர் சரோஜாவும் நானும் கடந்த 5 ஆண்டுகளாக ஆய்வு கூட்டங்கள் நடத்திய அனைத்து புகைப்படங்கள் ஆதாரம் முழுமையாக என்னிடம் உள்ளது. தாழ்த்தப்பட்ட சமூகத்தை ராஜேஷ் குமார் ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார். அதேபோல் எங்களையும் ஏமாற்றுவதற்காக அவர் பொய்யை சொல்லிவிட்டு சென்றுள்ளார். இதற்கெல்லாம் நான் பயப்படவில்லை.

அதிமுகவில் தொய்வு
அதிமுகவில் சிறிது தொய்வு ஏற்பட்டு இருக்கிறது. ஒரு சிலர் திமுகவில் கைகோர்த்து கொண்டு அதிமுகவை ஒழித்து விட்டலாம் என்றும் அப்படி செய்தால் தங்கள் மீது வழக்குகள் பாயாது என்றும் நினைத்து திமுகவின் பி டீமாக ஒரு அணி செயல்பட்டு கொண்டு இருக்கிறது. அதிமுக ஆரம்பிக்கப்பட்டதே திமுகவிற்கு எதிர்ப்பு தெரிவித்துதான். எம்.ஜி.ஆர் அதிமுகவை தொடங்கினார்.

எடப்பாடி பழனிசாமி
அந்த எதிர்ப்பில் இருந்து கொஞ்சம் கூட பின் வாங்க கூடாது என நினைத்து, திமுகவை எதிர்க்கும் தலைவரான எடப்பாடி பழனிசாமிதான் அதிமுகவின் பொதுச்செயலாளராக இருக்க வேண்டும்.கடந்த 4 ஆண்டு காலம் தமிழ்நாட்டில் அதிமுகவின் சிறப்பான ஆட்சியை எடப்பாடி பழனிசாமி கொடுத்துள்ளார்." என்று கூறி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications