துப்பாக்கி கலாச்சாரம்! 1 வயது குழந்தையை சுட்டுக்கொன்ற 3 வயது சிறுமி.. அமெரிக்காவில் ஷாக் சம்பவம்
நியூயார்க்: அமெரிக்காவில் தனது 1 வயது சகோதரியை 3 வயது சகோதரி ஒருவர் சுட்டு கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிக அளவில் நடக்கும் நாடாக அமெரிக்கா இருக்கும் நிலையில், துப்பாக்கி பயன்பாட்டுக்கு தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கைகள் தற்போது தீவிரமடைந்துள்ளன.
கலிஃபோர்னியாவின் ஃபால்ப்ரூக் பகுதியின் தெற்கு ஸ்டேஜ்கோச் லேனின் 1100 பிளாக்கில் உள்ள ஒரு வீட்டிலிருந்து துப்பாக்கிச்சூடு சத்தம் நேற்று காலை 7 மணிக்கு கேட்டிருக்கிறது. இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்திருக்கின்றனர். இதனையடுத்து சம்பந்தப்பட்ட வீட்டிற்கு வந்த காவல்துறையினர் அங்கு ஒரு வயது மதிக்கத்தக்க குழந்தை ஒன்று ரத்த வெள்ளத்தில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனடியாக அக்குழந்தை மீ்ட்கபட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

ஆனால், குழந்தை ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர். இதனையடுத்து இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தினர். வீட்டில் பெரியவர்கள் யாரும் இருக்கவில்லை. உயிரிழந்த குழந்தைக்கு சகோதரி இருக்கிறார். சம்பவத்தின் போது இவர்கள் இருவர் மட்டுமே வீட்டில் இருந்திருக்கின்றனர். எனவே 3 வயது சகோதரியிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது சிறுமி கூறிய விஷயத்தை கேட்டு போலீஸார் மிரண்டு போயினர்.
அதாவது, வீட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்து விளையாடிக்கொண்டிருந்தபோது அது தவறுதலாக வெடித்திருக்கிறது. இதில் வெளியேறிய குண்டு ஒன்று, ஒரு வயது சகோதரியின் தலையில் பாய்ந்துள்ளது. இதனையடுத்து ஒரு வயது குழந்தை மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளது.
இச்சம்பவம் அமெரிக்காவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே துப்பாக்கிக் கலாச்சாரம் நாட்டையே ஆட்டிப்படைத்து வரும் நிலையில், துப்பாக்கி பயன்பாட்டுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்கிற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகை 33 கோடிதான். ஆனால் அந்நாட்டில் தற்போது பயன்பாட்டில் இருக்கும் துப்பாக்கிகளின் எண்ணிக்கை மட்டுமே சுமார் 43 கோடியாகும். அதாவது, அந்நாட்டு குடிமக்களின் எண்ணிக்கை விட துப்பாக்கிகளின் எண்ணிக்கை அதிகம் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இந்த எண்ணிக்கையை குறைத்தால் மட்டுமே இதுபோன்ற துப்பாக்கிச்சூடு சம்பவங்களை குறைக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications