அமெரிக்காவில் ஓயாத மரண அலைகள்- ஒரே நாளில் 2137 பேர் பலி- உயிரிழப்பு 34,617 ஆக உயர்வு
நியூயார்க்: அமெரிக்காவில் ஒவ்வொரு நாளும் 2,000க்கும் அதிகமானோர் கொரோனா தொற்று நோயால் உயிரிழந்து வருகின்றனர். அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 2,137 பேர் கொரோனா தொற்று நோய்க்கு உயிரிழந்திருக்கின்றனர்.
உலக நாடுகளில் கொரோனாவால் மிக மோசமான பேரழிவை சந்தித்து வருகிறது அமெரிக்கா. இங்கு மொத்தம் 6,77,570 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
கடந்த சில நாட்களாக ஒவ்வொரு நாளும் சுமார் 2,000க்கும் அதிகமானோர் அமெரிக்காவில் கொரோனாவால் பலியாகி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 2137 பேர் மரணித்துள்ளனர். மிக மோசமாக நியூயார் நகரில்தான் மொத்தம் 16,106 பேர் மாண்டு போயிருக்கின்றனர். இங்கு மட்டும் 2,26,198 பேர் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
அமெரிக்காவை தொடர்ந்து இத்தாலியில் மரணமடைந்தோர் எண்ணிக்கை 22,170 ஆக உயர்ந்துள்ளது. இத்தாலியில் கடந்த வாரம், நாள்தோறும் உயிரிழப்புகள் அதிகமாக இருந்த நிலையில் தற்போது இது கொஞ்சம் குறைந்திருக்கிறது. ஸ்பெயினில் 19,315 பேரும் பிரான்ஸில் 17,920 பேரும் கொரோனாவுக்கு காவு கொடுக்கப்பட்டிருக்கின்றனர்.
சிங்கப்பூரில் கொரோனா பயங்கர தாக்குதல்- ஒரே நாளில் 728 பேருக்கு பாதிப்பு
இங்கிலாந்தில் 13,729 பேர் கொரோனாவால் மரணித்துப் போயுள்ளனர். ஈரானில் 4,869, ஜெர்மனியில் 4,052, பெல்ஜியத்தில் 4,857 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர்.
உலக நாடுகளில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மொத்தம் 1,45,507 ஆகவும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21,81,758 ஆகவும் உயர்ந்துள்ளது.