உடலில் 50 இடங்களில் துளை.. 5 வயதில் புக் ரிலீஸ்.. 2022ன் டாப் 5 கின்னஸ் சாதனைகள் என்னென்ன தெரியுமா?
நியூயார்க்: உலகம் முழுவதும் ஆண்டு தோறும் பல கின்னஸ் சாதனைகள் நிகழ்த்தப்பட்டு வரும் நிலையில், 2022ம் ஆண்டுக்கான சிறந்த 5 கின்னஸ் சாதனைகள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
உலகின் தனிச்சிறப்பு வாய்ந்த விஷயங்கள் கின்னஸ் சாதனையாக பதிவு செய்யப்படுகின்றன. இவ்வாறு பதிவு செய்யப்படும் சாதனைகள் உலகில் ஒன்றே ஒன்றுதான் இருக்கும். வேறு எங்கும் இதுபோல இருக்காது. இவர்களை அடையாளப்படுத்தும் விதமாக கின்னஸ் சான்றிதழ்கள் கொடுக்கப்படுகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டு நிகழ்த்தப்பட்ட குறிப்பிட்ட 5 கின்னஸ் சாதனைகள் அதிகமான மக்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
இந்த வரிசையில் இரண்டாவதாக இருப்பது 24,679 வைரங்களை கொண்டு உருவாக்கப்பட்ட மோதிரம்தான். இது பெரும்பாலான மக்களின் கவனத்தை ஈர்த்திருந்தது. இதற்கு முன்னர் வரை 12,638 வைரங்களை கொண்டு உருவாக்கப்பட்ட மோதிரம்தான் உலக அதிசயமாக இருந்தது. ஆனால், இந்த ஆண்டு இதன் சாதனையை 24,679 வைரங்களை கொண்டு உருவாக்கப்பட்ட 'தி டச் ஆஃப் அமி' எனப்படும் மோதிரம் முறியடித்துள்ளது. கேரளாவின் பிரபலமான SWA டயமன்ட்ஸ் நிறுவனம்தான் இந்த வைர மோதிரத்தை உருவாக்கியுள்ளது. நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டிசைனில் முதுகலை பட்டம் பெற்ற ரிஜிஷா என்பவர்தான் இந்த மோதிரத்தை வடிவமைத்துள்ளார்.

புத்தகம்
அடுத்த சாதனை, மிகவும் இளம் வயதில் பெண் ஒருவர் புத்தகம் வெளியிட்டதை பற்றியதாகும். இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பெல்லா ஜே டார்க் எனும் 5 வயது சிறுமிதான் புத்தகத்தை வெளியிட்டுள்ளார். 'தி லாஸ்ட் கேட்' எனும் பெயரில் தொலைந்து போன பூனையை பற்றிதான் இந்த சிறுமி புத்தகம் எழுதி இருக்கிறார். இந்த புத்தகத்தை சிறுமி தனது 5 வயது 21வது நாளில் வெளியிட்டுள்ளார். இப்புத்தகம் சுமார் 1,000 பிரதிகளுக்கும் அதிகமாக விற்பனையாகியுள்ளது. இதற்கு முன்னர் இதே போல சிறுவர்கள் புத்தகங்களை வெளியிட்டுள்ளனர். அந்த வகையில் கடைசியாக 1964ம் ஆண்டு ஆறு வயது சிறுவனால் புத்தகம் ஒன்று வெளியிடப்பட்டது. கடந்த 2021ம் ஆண்டு வரை இந்த புத்தகம்தான் மிக சிறிய வயதில் எழுதப்பட்ட புத்தகமாக இருந்தது.

ரூபிக்ஸ் கியூப்
அடுத்த கின்னஸ் சாதனை ரூபிக்ஸ் கியூப்பை பற்றியதாகும். அதாவது டெல்லி குருக்கிராமில் வசித்து வரும் 15 வயது சிறுவன் ஒருவன் இந்த ரூபிக்ஸ் கியூப் புதிரை வேகமாக தீர்த்துள்ளார். சாதாரணமாக எல்லோரும் இதனை செய்துவிடுவார்கள்தான். ஆனால் சைக்கிள் ஓட்டிக்கொண்டே செய்ய முடியுமா? இதைதான் சர்வக்யா குல்ஷ்ரேஷ்டா எனும் 15 வயது சிறுவன் செய்து சாதனை படைத்துள்ளார். இவ்வாறு சைக்கிள் ஓட்டிக்கொண்டே 12.90 வினாடிகள் ரூபிக்ஸ் கியூப் புதிரை தீர்த்துள்ளார். இதற்கு முன்னர் இந்த அளவுக்கு வேகமாக யாரும் செய்ததில்லை என்கிறது கின்னஸ் அகாடெமி. இதனை சாதிப்பதற்கு சர்வக்யா பல மாதங்களாக பயிற்சி மேற்கொண்டதாக கூறியுள்ளார்.

உடல் மாற்றம்
அடுத்த சாதனை நம்மை கொஞ்சும் பயமுறுத்தும் வகையில் இருக்கும். அதாவது உலகிலேயே அதிக உடல் மாற்றங்களை செய்த தம்பதியினர்தான் இந்த கின்னஸ் சாதனையை படைத்திருக்கிறார்கள். இவர்கள் அப்படி என்ன மாற்றத்தை செய்திருக்கிறார்கள் என்று கேட்கிறீர்களா? இவர்கள் இருவரும் சேர்ந்து தலா 98 டாட்டுக்களை தங்கள் உடலில் குத்தியுள்ளார்கள். மட்டுமல்லாது 50 இடங்களில் உடலில் துளையிட்டு அணிகலன்களை அணிந்திருக்கிறார்கள். இதேபோல 8 இடங்களில் கம்மல்களையும் குத்திக்கொண்டுள்ளனர். இது தவிர இவர்களது உடலில் 14 இடங்களில் செயற்கையாக பொருட்கள் உள்வைக்கப்பட்டுள்ளன.

திங்கட்கிழமை
இந்த வரிசையில் முதல் இடத்தில் இருப்பது எது தெரியுமா? அது திங்கட்கிழமைதான். திங்கட்கிழமை எப்படிங்க கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறும் என்று நீங்கள் கேட்கலாம். இந்த ஆண்டு உலகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சர்வேயில் திங்கட்கிழமைதான் மிகவும் மோசமான நாள் என்று அனைவரும் கூறியுள்ளனர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் தொடங்கி பணியிடங்களில் வேலை செய்வோர் வரை அனைவரும் இதைதான் கூறியுள்ளனர். எனவே உலகின் மிக மோசமான கிழமை திங்கட்கிழமை என்று கின்னஸ் அகாடெமி ஒரு முடிவுக்கு வந்துள்ளது.












Click it and Unblock the Notifications