சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் சிக்கிக்கொண்டது இதனால்தான்.. எலான் மஸ்க் சொல்லும் புது காரணம்
நியூயார்க்: விண்வெளிக்குச் சென்ற இந்திய வம்சாவளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் எப்பொழுது பூமிக்கு திரும்புவார் என்று எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. இந்நிலையில் செய்தி ஊடகத்திற்கு பேட்டி அளித்த எலான் மஸ்க், ஏன் சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் சிக்கிக்கொண்டார் என்பது குறித்து விவரித்திருக்கிறார்.
நேற்று ஃபாக்ஸ் நியூஸ் செய்தி ஊடகத்திற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்பும் அவருடைய நண்பருமான எளான் மஸ்க் இருவரும் சேர்ந்து கூட்டாக பேட்டி அளித்திருந்தனர்.

இந்த பேட்டியின் போது செய்தியாளர்களிடமிருந்து பல்வேறு கேள்விகள் எழுந்தன. குறிப்பாக சுனிதா வில்லியம்ஸ் எப்போது பூமிக்கு திரும்புவார் என்றும் கேள்வி எழுந்தது.
இதற்கு பதிலளித்த மஸ்க், "அவர்கள் இருவரும் அரசியல் காரணங்களுக்காக விண்வெளியில் கைவிடப்பட்டதாக நாங்கள் நினைக்கிறோம். அதிபர் டிரம்ப்பின் வேண்டுகோளின் பேரில் அவர்களை மீண்டும் பூமிக்கு கொண்டுவர நாங்கள் தீவிரமாக முயற்சிகளை எடுத்து வருகிறோம். ஏற்கனவே இதற்கு முன்பு பல விண்வெளி வீரர்களை நாங்கள் பூமிக்கு பத்திரமாக கொண்டு வந்து சேர்த்திருக்கிறோம். எனவே இந்த வேலையில் எங்களுக்கு அனுபவம் உண்டு.
சுனிதா வில்லியம்ஸையும், புட்ச் வில்மோரையும் பூமிக்கு கொண்டுவர நான்கு வாரங்கள் வரை ஆகும் என்று நினைக்கிறேன். இதற்கான அனுமதி கொடுத்த ட்ரம்புக்கு நன்றி. எங்களுக்கும் பைடன் நிர்வாகத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது" என்று எலான் மாஸ்க் கூறி இருக்கிறார்.
கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் போயிங் நிறுவனத்தின் ஸ்டார் லைனர் விண்கலத்தில் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் அனுப்பி வைக்கப்பட்டனர். வெறும் 10 நாட்கள் மட்டும் விண்வெளியில் தங்கி ஆய்வுகளை மேற்கொண்டு பூமிக்கு திரும்புவதுதான் திட்டம்.
ஆனால் இவர்கள் சென்ற ஸ்டார்லைனர் விண்கலத்தின் த்ரஸ்டர்கள் பழுதானதால் இவர்களால் பூமிக்கு திரும்ப முடியவில்லை. எனவே சர்வதேச விண்வெளி மையத்திலேயே இவர்கள் தங்கிக் கொண்டனர். இவர்களை பூமிக்கு மீட்டுக் கொண்டு வர ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தை அமெரிக்க அரசு அணுகியது. எனவேதான் அதற்கான பணிகளை எலான் மஸ்க் மேற்கொண்டிருக்கிறார்.
சர்வதேச விண்வெளி மையம் என்பது பூமியிலிருந்து சுமார் 400 கி.மீ உயரத்தில் இருக்கிறது. இங்குதான் சர்வதேச விண்வெளி மையமும் அமைந்திருக்கிறது. இந்த மையத்தில் பல்வேறு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் தங்கி ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இப்படியான ஆய்வுக்காகதான் சுனிதாவும் வில்மோரும் சென்றனர்.
பிரபல விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்கலத்தில் விண்வெளி வீரர்கள் விண்வெளிக்கு சென்றது இதுதான் முதல் முறை. விண்வெளி துறையில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மட்டும்தான் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. எனவே, போட்டியில் இணைய போயிங் இப்படியான விண்கலத்தை உருவாக்கியிருந்தது. ஆனால் தொடக்கத்தில் பரிசோதனையின்போதே இந்த விண்கலம் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டிருந்தது. இப்படி இருக்கையில் த்ரஸ்டர் பழுதடைந்தது எதிர்பாராதது என போயிங் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications