இந்தியாவுடனான உறவு அமெரிக்காவை வலிமையாக மாற்றியுள்ளது - அமெரிக்க அதிபர் பைடன் சுதந்திர தின வாழ்த்து
நியூயார்க்: நாடு முழுவதும் 75வது சுதந்திர தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து "மகாத்மா காந்தியால் வழிநடத்தப்பட்ட ஜனநாயகப் பயணத்தை கௌரவிப்பதற்காக இந்தியா மக்களுடன் அமெரிக்கா இணைகிறது" என தனது வாழ்த்துரையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவு தங்கள் நாட்டை மிகவும் புதுமையான, வலிமையான தேசமாக மாற்றியுள்ளதாகவும் பைடன் கூறியுள்ளார்.
நமது நாட்டின் 75-வது சுதந்திர தினம், 'சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவாக' நாடெங்கும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி 13-ந் தேதி தொடங்கி 15-ந் தேதி வரையில் என மூன்று நாட்கள் இல்லங்கள் தோறும் தேசியக்கொடியை ஏற்றியும், காட்சிப்படுத்தியும், இதை ஒரு இயக்கமாக நடத்த வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களை கேட்டுக்கொண்டார். இதன்படி நாடு முழுவதும் பரவலாக பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தேசியக்கொடிகளை ஏற்றி உள்ளனர். எங்கு பார்த்தாலும் மூவர்ணக்கொடி பட்டொளி வீசிப்பறப்பதை காண முடிந்தது.
வாகனங்களில் கூட மூவர்ண கொடி பறப்பதை காண முடிகிறது. நமது தேசபக்தியை ஊட்டும் இந்த கொண்டாட்டங்களுக்கு இடையே அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தியர்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். "கிட்டத்தட்ட நான்கு மில்லியன் பெருமைமிக்க இந்திய-அமெரிக்கர்கள் உட்பட உலகெங்கிலும் உள்ள இந்தியர்கள் இன்று சுதந்திர தினத்தை கொண்டாடி வரும் நிலையில், மகாத்மா காந்தியின் உண்மை மற்றும் அகிம்சையினால் வழிநடத்தப்பட்டுக்கொண்டிருக்கிற இந்திய மக்களுடன் தனது ஜனநாயக பயணத்தை மேம்படுத்திக்கொள்ள அமெரிக்கா இணைகிறது" என்று தனது வாழ்த்து செய்தியில் பைடன் கூறியுள்ளார்.
75வது சுதந்திர தினம் கொண்டாடப்படும் இந்நிலையில், இந்தியா-அமெரிக்கா தூதரக உறவுகளின் 75வது ஆண்டு விழாவும் கொண்டாடப்பட இருக்கின்றன. "நமது மக்களிடையே உள்ள ஆழமான பிணைப்புகளால் இந்தியா-அமெரிக்கா கூட்டாண்மை மேலும் வலுப்பெற்றுள்ளது. அமெரிக்காவில் உள்ள துடிப்பான இந்திய-அமெரிக்க சமூகம் எங்கள் நாட்டை மிகவும் புதுமையான, வலுவான தேசமாக மாற்றியுள்ளது. அதுபோல விதிகளின் அடிப்படையில் ஒழுங்கைப் பாதுகாக்க இரு நாடுகளும் தொடர்ந்து ஒன்றாக பயணிக்கும் என்றும்" என்றும் பைடன் கூறியுள்ளார்.
மேலும், "சுதந்திர தினம் கொண்டாடும் இந்த வேளையில் நமக்கு சவாலாக, நிரந்தர அமைதி, செழிப்பு மற்றும் பாதுகாப்பை வளர்ப்பது மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் முன்னேற்றம் உள்ளிட்டவை உள்ளது" என்றும் பைடன் கூறியுள்ளார். இவரைத் தொடர்ந்து, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கனும் சுதந்திர தின வாழ்த்தை தெரிவித்துள்ளார். அதில், "ஆகஸ்ட் 15ஆம் தேதி 75வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இந்திய மக்களுக்கு அமெரிக்காவின் சார்பாக எனது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "இந்த முக்கியமான நாளில் ஜனநாயக விழுமியங்களை நாங்கள் பிரதிபலிக்கிறோம், மேலும் ஒரு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்கி வரும் இந்திய மக்களை நாங்கள் மதிக்கிறோம்" என்றும் பிளிங்கன் சுதந்திர தின வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
Recommended Video
76 ஆவது சுதந்திர தினம்.. முதல்வர் ஸ்டாலின் தேசியக் கொடி ஏற்றுகிறார்