சீனா தாக்கினால்.. ரஷ்யா உதவிக்கு வரும்னு நினைக்காதீங்க.. ஜாக்கிரதை! இந்தியாவிற்கு அமெரிக்கா அட்வைஸ்!
நியூயார்க்: சீனா இன்னொரு முறை எல்லை கட்டுப்பாட்டு பகுதியை கடந்து இந்தியாவிற்குள் வந்தால் ரஷ்யா இந்தியாவிற்கு உதவுவதற்காக வரும் என்று நினைக்க வேண்டாம் என்று அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் தெரிவித்துள்ளார்.
Recommended Video
அமெரிக்க அதிபரின் ஆலோசகர்களின் ஒருவரும், அந்நாட்டு தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகருமான தலீப் சிங் இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்திருந்தார். இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். அமெரிக்க அதிபருக்கு தேசிய பாதுகாப்பு ரீதியாகவும், சர்வதேச பொருளாதார ரீதியாகவும் இவர் ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.
இந்தியா வந்த அவர்.. இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கு இடையிலான உறவு பற்றி பேசினார். அதோடு இந்தியாவிற்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் சில எச்சரிக்கைகளை விடுத்தார்.
எச்சரிக்கை
உக்ரைன் போர் காரணமாக ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக ரஷ்யாவின் பல்வேறு வங்கிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ரஷ்யாவின் நிறுவனங்கள் பொருளாதார தடையை எதிர்கொண்டு உள்ளது. இந்த தடைகளை வடிவமைத்தவர்களில் முக்கியமாக திகழ்ந்தவர் தலீப் சிங். ரஷ்யாவிற்கு எதிராக பல்வேறு உலக நாட்டு தலைவர்களை இவர் சந்தித்து வருகிறார்.
தலீப் சிங்
இந்தியா வந்த தலீப் சிங் வெளியுறவுத்துறை செயலாளர் ஹரிஷ் வர்தன் உடன் சந்திப்பு நடத்தினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரஷ்யாவுடன் எந்த நாடும் பொருளாதார ரீதியாக உறவு மேற்கொள்வதை நாங்கள் விரும்பவில்லை. ரஷ்யாவின் மத்திய வங்கியுடன் உறவு மேற்கொள்வதை நாங்கள் விரும்பவில்லை. ரஷ்யாவுடன் தற்போது இந்தியா மேற்கொள்ளும் கச்சா எண்ணெய் வர்த்தகம் தவறானது கிடையாது.
அமெரிக்கா தலீப் சிங்
அமெரிக்க விதிகளை அது மீறவில்லை. அதே சமயம் அமெரிக்காவின் நட்பு நாடுகள் அதிகமாக ரஷ்யாவை நம்பி இருப்பதை நாங்கள் விரும்பவில்லை. அனைத்திற்கும் ரஷ்யாவை நம்பவி இருக்கக் கூடாது. டாலரை அடிப்படையாக கொண்ட வர்த்தகத்திற்கு எதிரான வர்த்தகத்தை எங்கள் நட்பு நாடுகள் மேற்கொள்வதை நாங்கள் விரும்ப மாட்டோம்.
இந்தியா ரஷ்யா
அதே போல எங்களின் பொருளாதார தடைகளை மதிக்காமல் செயல்படுவதையும் நாங்கள் விரும்ப மாட்டோம். ரஷ்யாவுடன் இந்தியா தனது ஏற்றுமதி, இறக்குமதியை அதிகரிப்பதை நாங்கள் விரும்ப மாட்டோம். ரஷ்யாவிற்கு ஏற்றுமதி, இறக்குமதி செய்யப்படும் பொருட்களை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். எங்கள் நாடு விதித்து இருக்கும் பொருளாதார தடைகள் பற்றி பேசுவதற்காக நாங்கள் இங்கே வந்து இருக்கிறோம். ஒன்றாக சேர்ந்து பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.
இந்தியா சீனா
அதே சமயம் எங்களின் பொருளாதார தடைகளை மதிக்காத நாடுகள் எதிர்கொள்ள போகும் பின்விளைவுகள் பற்றியும் இங்கு பேசினோம். இந்தியாவிற்கு எரிவாயு, பாதுகாப்பு தொடர்பான ஏற்றுமதியை, உதவிகளை செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம். இது தொடர்பான ஆலோசனைகளை மேற்கொண்டோம். குவாட் நாடுகள் என்பது சீனாவிடம் இருந்து இந்தோ பசிபிக் நாடுகளை பாதுகாப்பது.
சீனா பாதுகாப்பு
இந்தோ பசிபிக் பாதுகாப்பை உறுதி செய்வது ஆகும். தற்போது ரஷ்யாவும் சீனாவும் மிகவும் நெருக்கமாக உள்ளன. ரஷ்யா - சீனா இடையே நோ லிமிட் உறவு உள்ளது. அனைத்து பிரச்சனைகளிலும் இரண்டு நாடுகளும் ஒன்றாக இருக்கும். அது இந்தியாவிற்குதான் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த கூட்டணியில் சீனாவின் பேச்சைத்தான் ரஷ்யா கேட்கும். சீனாவிடம் ஜூனியர் போல ரஷ்யா செயல்படும்.
உதவியாக வராது
சீனா சொல்வதை எல்லாம் இதில் ரஷ்யா கேட்கும். இது இந்தியாவிற்கு சிக்கலானது. இதனால் இந்தியாவிற்கு ரஷ்யா எப்போதும் உதவியாக வராது. சீனா இன்னொரு முறை எல்லை கட்டுப்பாட்டு பகுதியை கடந்து இந்தியாவிற்குள் வந்தால் ரஷ்யா இந்தியாவிற்கு உதவுவதற்காக வரும் என்று நினைக்க வேண்டாம். அது சாத்தியம் இல்லை, என்று தலீப் சிங் தெரிவித்துள்ளார். அதாவது சர்வதேச விவகாரத்தில் ரஷ்யாவுடன் சேர்ந்தாலும் இந்தியாவிற்கு எந்த பலனும் இல்லை என்று அவர் தெரிவித் இருக்கிறார்.