நியூயார்க் ஹோட்டலில் அனுமதி மறுப்பு.. சாலையில் நின்று உணவு சாப்பிட்ட பிரேசில் அதிபரால் பரபரப்பு!
பிரசிலியா: கொரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு நியூயார்கில் ஒரு ஹோட்டலில் அனுமதி இல்லாத நிலையில் அமைச்சர்களுடன் சென்ற பிரேசில் ஜெயிர் போல்சனேரோ சாலையில் நின்று பீட்சா சாப்பிட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி தற்போது வரை முடிவுக்கு வராமலேயே உள்ளது. இதை கட்டுப்படுத்த தடுப்பூசி ஒன்றே தீர்வு என மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தி வருகிறார்கள்.
உலகளவில் கொரோனா பாதித்த நாடுகளில் 3 ஆவது இடத்தில் பிரேசில் உள்ளது. தினசரி பலி எண்ணிக்கையிலும் சில நேரங்களில் பிரேசில் முதலிடத்தில் இருந்துள்ளது. பிரேசில் நாட்டில் மருத்துவ கட்டமைப்புகளும் சொல்லிக் கொள்ளும் படியாக இல்லை என்பதால் வெளிநாடுகளில் இருந்து ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், மருந்து மாத்திரைகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
பெகாசஸ் உளவு விவகாரம்: வல்லுநர் குழுவை அமைத்து விசாரிக்க உச்சநீதிமன்றம் அதிரடி முடிவு!
எண்ணிக்கை குறைவு
பிரேசிலில் கொரோனா எண்ணிக்கை குறைவாக இருந்த போதிலும் தற்போது 3ஆவது இடத்தில் வந்துள்ளது காரணம் அந்நாட்டு அதிபரின் அலட்சியப்போக்கு என உலக நாடுகள் விமர்சித்து வருகின்றன. மேலும் இவர் கொரோனா கையாண்ட விதத்தை எதிர்த்து அந்நாட்டு மக்கள் போராட்டத்தையும் நடத்தினர். இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு மத்தியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவரை முகக் கவசம் அணியுமாறு பாதுகாப்பு அதிகாரிகள் அறிவுறுத்தியதற்கு அவர் மறுத்துவிட்டார்.
சுகாதாரத் துறை அதிகாரிகள்
மேலும் ஊரடங்கு உத்தரவை செயல்படுத்துமாறு சுகாதாரத் துறை அதிகாரிகள் அறிவுறுத்திய நிலையில் அதிபரோ அதற்கும் மறுத்துவிட்டார். கொரோனா என்பது சாதாரண மிகவும் சிறிய வைரஸ் காய்ச்சல், இதற்கு ஏன் இத்தனை களேபரம் என்ற அளவுக்கு மிகவும் அலட்சியப்போக்காக இருந்த போல்சனேரோவுக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் கொரோனா உறுதியானது.
Recommended Video
தனிமைப்படுத்திக் கொண்ட அதிபர்
இதையடுத்து அவர் 2 வாரங்கள் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். அவருக்கு 3 முறை கொரோனா பரிசோதனை மேற்கொண்ட போது பாசிட்டிவ் என்றே வந்தது. இதையடுத்து ஹைட்ராக்ஸி குளோரோக்குயின் மாத்திரைகளை எடுத்து வந்த அவருக்கு கொரோனா நெகட்டிவ் என 4ஆவது சோதனையில் முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்த கொரோனா பாசிட்டிவ் காலத்தில் தனிமைப்படுத்திக் கொள்வதற்கும் அவர் மறுப்பு தெரிவித்தார். எனினும் மருத்துவக் குழுவினரின் அறிவுரையை ஏற்று நடந்து கொண்டார்.
தடுப்பூசியே போடவில்லை
இதே போல் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளவும் அவர் மறுத்து இதுநாள் வரை தடுப்பூசியே போட்டுக் கொள்ளவில்லை. கொரோனா ஒழிய தடுப்பூசிதான் முக்கிய ஆயுதம் என ஐநா, உலக சுகாதார நிறுவனம் உள்ளிட்டவை அறிவுறுத்தி வரும் நிலையில் அதிபராக உள்ள இவரோ தடுப்பூசியே போடாமல் தனது நாட்டு மக்களுக்கு தவறான முன்னுதாரணமாக உள்ளதாக குற்றச்சாட்டு எழுகின்றன.
ஐநா சபை
இந்த நிலையில் அமெரிக்காவில் நடைபெறும் ஐநா சபை பொது சபை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனேரோ அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு அவர் தனது சக அமைச்சர்களுடன் சேர்ந்து நியூயார்க் நகரில் உள்ள ஹோட்டலுக்கு இரவு உணவு சாப்பிட சென்றார்.
கொரோனா தடுப்பூசி
ஆனால் அந்த ஹோட்டலில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மட்டுமே உள்ளே சென்று உணவு அருந்த அனுமதி என்பதால் ஜெயிர் போல்சனேரோவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து அவர் தனது அமைச்சரவை சகாக்களுடன் சாலையோரம் உள்ள ஒரு உணவகத்தில் பீட்சா வாங்கி சாப்பிட்டார். ஜெயிர் போல்சனேரோ சாலையில் நின்று பீட்சா சாப்பிடும் புகைப்படம் வைரலாகி வருகிறது.