பெரும் போருக்கு தயாராகும் அமெரிக்கா.. 66 சர்வதேச குழுக்களில் இருந்து.. ஒரே நாளில் வெளியேற்றம்!
நியூயார்க்: உலகின் பல நாடுகளை அமெரிக்கா வெளிப்படையாக எதிர்க்க தொடங்கிவிட்டது. ஒரு பக்கம் வெனிசுலாவை கைப்பற்றி லத்தீன் அமெரிக்கா நாடுகளையும், ரஷ்யா, சீனாவையும் அமெரிக்கா எதிர்க்கிறது. கிரீன்லாந்தை கையகப்படுத்த திட்டமிடுவதன் மூலம் நேட்டோவையும், ஐரோப்பியன் யூனியனையும் அமெரிக்கா எதிர்க்கிறது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், 66 சர்வதேச அமைப்புகளில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அறிவித்தார். "அமெரிக்கா முதலில்" என்ற கொள்கையின் கீழ், அமெரிக்க நலன்களுக்கு எதிரானதாகக் கருதப்படும் இந்த அமைப்புகளில் இருந்து விலகும் அதிபரின் பிரகடனத்தில் டிரம்ப் கையெழுத்திட்டதாக வெள்ளை மாளிகை கடந்த வியாழக்கிழமை அறிவித்தது. இந்தியாவின் சோலார் குழு உட்பட 66 குழுக்களில் இருந்து அமெரிக்கா வெளியேறி உள்ளது.

இந்த உத்தரவு, ஐ.நா.வுடன் தொடர்பு இல்லாத 35 குழுக்களுக்கும், ஐ.நா. அமைப்புகளின் கீழ் வரும் 31 அமைப்புகளுக்கும் நிதி வழங்குவதையும், அவற்றில் ஈடுபடுவதையும் அனைத்து அரசு நிறுவனங்களும் நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறது. இந்த முடிவுகள், அமெரிக்காவின் தேசிய நலன்களுக்கு இனி உதவாத அமைப்புகளை இலக்காகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை கூறியது.
அமெரிக்கா வெளியேற முடிவு
வெளியேறும் அமைப்புகளின் பட்டியலில், சர்வதேச சூரியசக்தி கூட்டணி (இந்தியா மற்றும் பிரான்ஸ் கூட்டாக வழிநடத்தும் ஒரு தூய்மையான எரிசக்தி முயற்சி), பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம் (IUCN), மற்றும் காலநிலை மாற்றத்திற்கான பன்னாட்டு அரசுக்குழு (IPCC) போன்ற முக்கிய சுற்றுச்சூழல் அமைப்புகளும் அடங்கும்.
ஜனவரி 7, 2026 அன்று, எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "அமெரிக்கா முதலில்" என்ற கொள்கையின் கீழ் இன்று, அதிபர் டொனால்ட் ஜே. டிரம்ப், அமெரிக்க நலன்களுக்கு இனி பயன்படாத 66 சர்வதேச அமைப்புகளில் இருந்து விலகுமாறு ஒரு ஜனாதிபதி பிரகடனத்தில் கையெழுத்திட்டார், இதில் 35 ஐ.நா. சாராத அமைப்புகளும் 31 ஐ.நா. அமைப்புகளும் அடங்கும்" என்று வெள்ளை மாளிகை குறிப்பிட்டது.
அமெரிக்கா ஷாக் முடிவு
வெள்ளை மாளிகையின் அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, ஜனாதிபதி பிரகடனம், அமெரிக்காவின் தேசிய நலன்கள், பாதுகாப்பு, பொருளாதார செழிப்பு அல்லது இறையாண்மைக்கு எதிராக செயல்படும் 35 ஐ.நா. சாராத அமைப்புகளுக்கும் 31 ஐ.நா. அமைப்புக்களுக்கும் நிதி வழங்குவதையும், அவற்றில் பங்கேற்பதையும் அனைத்து நிர்வாகத் துறைகளும் நிறுத்த வேண்டும் என உத்தரவிடுகிறது.
அமெரிக்க ஆதரவு பெறும் சர்வதேச அமைப்புகள், உடன்படிக்கைகள் மற்றும் மாநாடுகள் பற்றிய பரந்த ஆய்வுக்குப் பின்னரே இந்த முடிவுகள் எடுக்கப்பட்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்தது. இந்த பல அமைப்புகள் அமெரிக்க சுதந்திரத்தை குறைத்து மதிப்பிடுவதாகவும், அமெரிக்க முன்னுரிமைகளுடன் மோதும் உலகளாவிய திட்டங்களை ஊக்குவிப்பதாகவும், வரி செலுத்துவோர் பணத்தை அர்த்தமற்ற விளைவுகளுக்காகச் செலவிடுவதாகவும் இதில் வாதிடப்பட்டது.
இந்த அமைப்புகள் எங்களுக்கு எந்த வகையிலும் உதவவில்லை. அப்படி இருக்க இவர்களுக்கு செலவு செய்வது தேவையில்லை. இதனால் நாங்கள் அங்கிருந்து வெளியேறுகிறோம். அமெரிக்க வரி செலுத்துவோர் நிதியையும், ஈடுபாட்டையும் முடிவுக்குக் கொண்டுவரும். இதனால், அமெரிக்க வரி செலுத்துவோர் பணம் தொடர்புடைய பணிகளுக்கு வேறு வழிகளில் சிறப்பாகச் செலவிடப்படும்" என்று அதிகாரப்பூர்வ அறிக்கை கூறியது.
66 உலகளாவிய அமைப்பு
இந்த 66 உலகளாவிய அமைப்புகளில் பல, அமெரிக்காவின் இறையாண்மை மற்றும் பொருளாதார வலிமைக்கு முரணான தீவிர காலநிலை கொள்கைகள், உலகளாவிய ஆளுகை மற்றும் சித்தாந்த திட்டங்களை ஊக்குவிப்பதாக அந்த அறிக்கை குறிப்பிட்டது.
இந்த அமைப்புகளில் இருந்து வெளியேறுவதன் மூலம், திறமையற்ற அல்லது விரோதமானதாகக் கருதப்படும் குழுக்களுக்கான அமெரிக்க நிதி முடிவுக்கு வரும் என்றும், உள்கட்டமைப்பு, தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார வலிமை போன்ற உள்நாட்டுத் தேவைகளுக்கு வளங்களை மீண்டும் திசைதிருப்ப முடியும் என்றும் நிர்வாகம் தெரிவித்தது.
"ஜனாதிபதி டிரம்ப் அமெரிக்க இறையாண்மையைப் பாதுகாக்கத் தொடர்ந்து போராடி வருகிறார், மேலும் சர்வதேச ஈடுபாடுகள் அமெரிக்க நலன்களுக்கு சேவை செய்வதை உறுதிசெய்கிறார்" என்று அந்த அறிக்கை மேலும் குறிப்பிட்டது.












Click it and Unblock the Notifications