அப்பாவி பாலஸ்தீனர்கள் மீது தாக்குதல்.. இஸ்ரேலுக்கு அமெரிக்க பாதுகாப்பு கவுன்சில் பகிரங்க எச்சரிக்கை
நியூயார்க்: ராஃபாவில் தஞ்சமடைந்துள்ள பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்துவதை தவிர்க்க வேண்டும் என்று அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகத்தின் மூத்த அதிகாரி அறிவுறுத்தியுள்ளார்.
இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தீவிரவாத அமைப்பாக பட்டியலிட்டிருக்கிறது. இந்த அமைப்பு கடந்த ஆண்டு இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.

இதற்கு பதிலடி கொடுப்பதாக கூறி 200 நாட்களுக்கும் மேலாக இஸ்ரேல் ராணுவம், காசாவில் உள்ள பாலஸ்தீன மக்கள் மீது தாக்குதலை தொடுத்து வருகிறது. இதில் 35 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். இதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள். 75% பேர் குழந்தைகள் என பாலஸ்தீன சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது.
காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் சமீபத்தில் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன்னர் ஐ நா பணியாளர்களை ஏற்றிச் சென்ற வாகனம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தியது. இதில் 7 பேர் கொல்லப்பட்டனர். எனவே உடனடியாக போர் நிறுத்தத்தை கொண்டு வரவேண்டும் என்று உலக நாடுகள் தீவிரமாக வலியுறுத்த தொடங்கின. இது நாள் வரை இஸ்ரேலுக்கு ஆதரவாக நின்ற அமெரிக்கா கூட, உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.
போர் காரணமாக காசாவுக்குள் நிவாரண பொருட்கள் எதுவும் வரவில்லை. இதனால் உணவுக்கும், குடிநீருக்கும் பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது. நோயாளிகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் உணவு கிடைக்காமல் அடுத்தடுத்து உயிரிழந்தனர். தொற்று நோய் பாதிப்புகளும் தீவிரமடைந்துள்ளன.
மறுபுறம் இந்த போரை எதிர்த்தும், போரில் இஸ்ரேலுக்கு ஆதரவான அமெரிக்காவின் நிலைப்பாட்டை எதிர்த்தும் அமெரிக்க பல்கலைக்கழகங்களில் போராட்டங்கள் சூடுபிடித்துள்ளன. அமெரிக்காவில் மட்டும் 50க்கும் அதிகமான பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர். போராடும் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களை அந்நாட்டு காவல்துறை கைது செய்து வருகிறது. தற்போது வரை 900க்கும் அதிகமானோர் கைதாகியுள்ளனர்.
மாணவர் போராட்டம் லண்டன், பாரிஸ் என ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவ தொடங்கியுள்ளது. சூழல் இப்படி இருக்கையில் 'சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால்' (ICC) போர் குற்றத்திற்காக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு விரைவில் கைது செய்யப்படுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இப்படி இருக்கையில் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகம், ராஃபா தாக்குதல் குறித்து எச்சரித்திருக்கிறது. இதன் முக்கிய அதிகாரியான ஜான் கிர்பி,
"குழந்தைகள், பெண்கள் என ஆயிரக்கணக்கான அப்பாவி பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதை தொடர்ந்து, தற்போது ராஃபா தாக்குதல் குறித்த அதிர்ச்சியான படங்கள் வெளிவந்துள்ளன. நாம் அனைவரும் இந்த படங்களை பார்த்திருக்கிறோம். அவை இதயத்தை நொறுக்கும் வகையில் இருக்கிறது.
இஸ்ரேல் பாதுகாப்பு படைக்கு ஹமாஸை பின்தொடர்ந்து அழிக்க உரிமை இருக்கிறது. இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பை சார்ந்த 2 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆனால், இதில் எந்த அப்பாவி உயிரும் பலி ஆகக்கூடாது. நாங்கள் ஏற்கெனவே பலமுறை கூறியதைபோல, அப்பாவி உயிர்களை காப்பாற்ற இஸ்ரேல் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.
ராஃபா தாக்குதலை தொடர்ந்து சர்வதேச அளவில் இஸ்ரேலுக்கு எதிராகவும், இஸ்ரேலுக்கு ஆயுதங்களை சப்ளை செய்யும் அமெரிக்காவுக்கு எதிராகவும் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், அமெரிக்காவிடமிருந்து இந்த வலியுறுத்தல் வந்திருக்கிறது.












Click it and Unblock the Notifications