30 பன்றி பலி.. முதுமலை புலிகள் காப்பகத்தில் பரவிய ஆப்ரிக்க பன்றி காய்ச்சல்.. மனிதர்களை தாக்குமா?
நீலகிரி: நீலகிரி முதுமலை புலிகள் காப்பகத்தில் கடந்த ஒரு வாரத்தில் 30க்கும் அதிகமான பன்றிகள் மர்மமான முறையில் இறந்தன. இதையடுத்து பன்றிகளின் மாதிரிகளை பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சல் பரவலால் பன்றிகள் இறந்ததாக வனத்துறை அதிர்ச்சி தகவலை கூறியுள்ள நிலையில் இது மனிதர்களுக்கு பரவுமா? இல்லையா? என்பது பற்றிய விபரம் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் முதுமலை புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இதனையடுத்து கர்நாடகாவின் பந்திப்பூர் புலிகள் காப்பகம் உள்ளது. இந்நிலையில் தான் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து காட்டு பன்றிகள் இறந்து வந்தன.
இந்த புலிகள் காப்பகங்களில் ஏராளமான காட்டு பன்றிகள் உள்ளன. இந்நிலையில் தான் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து பன்றிகள் இறந்து வருகின்றன.
விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் உருவாக்க சதி: திருச்சி முகாமில் இலங்கையை சேர்ந்த 9 பேர் கைது!
30க்கும் அதிகமான பன்றிகள் பலி
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 30க்கும் அதிகமான பன்றிகள் அடுத்தடுத்து இறந்தன. கொத்து கொத்தாக பன்றிகள் இறந்ததால் அதிகாரிகள் ஷாக் அடைந்தனர். பன்றிகள் இறந்ததற்கான காரணம் தெரியவில்லை. இதனை கண்டுபிடிக்க வேண்டும் என்பதற்காக இறந்த பன்றிகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மாதிரிகள் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்ட நிலையில் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன.
ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சல்
இதில் பன்றிகள் ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். பொதுவாக இந்த ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் என்பது வடகிழக்கு மாநிலங்களான அசாம், மிசோரம், சிக்கிம், திரிபுரா, உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் தான் அடிக்கடி பரவும். இந்நிலையில் தான் தற்போது தமிழ்நாட்டிலும் பரவ தொடங்கி உள்ளது.
பாதிப்பது எப்படி?
இந்த ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சல் பல்வேறு அறிகுறிகளை கொண்டிருக்கும். வயிற்றுபாக்கு, சுவாச பிரச்சனை, குமட்டல், காய்ச்சல், பசியின்மை, வாந்தி, தோலில் ஏற்படும் ரத்த கசிவு உள்ளிட்ட பாதிப்புகளை அறிகுறிகளாக கொண்டு இருக்கும். அதன்பிறகு திடீரென்று இறக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் தற்போது புலிகள் காப்பகத்தில் மேற்கொண்டு ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மனிதர்களுக்கு பரவுமா?
இதற்கிடையே தான் இந்த ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சல் மனிதர்களுக்கு பரவுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இது மனிதர்களுக்கு பரவாது. இது பன்றிகளை தான் அதிகம் தாக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்த ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் முதல் முதலாக 1920ம் ஆண்டில் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பிற நாடுகளுக்கும் பரவ தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
நீலகிரி கலெக்டர் விளக்கம்
இதற்கிடையே நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் குறித்து விளக்கம் அளித்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛நீலகிரி மாவட்டத்தில் உயிரிழந்த காட்டு பன்றிகளுக்கு எடுக்கப்பட்ட மாதிரிகளில் ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் பாதிப்பால் இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நோய் மற்ற வன விலங்குகள் மற்றும் கால்நடைகளுக்கு பரவாது. மனிதர்களுக்கம் பரவாது. இதனால் மக்கள் அச்சப்பட தேவையில்லை. சென்னையில் இருந்து கால்நடை சிறப்பு நோய் புலனாய்வு பிரிவு குழு நீலகிரி வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைகளை ஒட்டியுள்ள பகுதிகளில் நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து காணொளி காட்சி மூலம் இன்று ஆலோசனை நடத்தப்பட உள்ளது. நோய் தடுப்பு நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நீலகிரியில் பாதிப்பு எங்கு?
நீலகிரி மாவட்டத்தை பொறுத்தமட்டில் கீழ்கோத்தகிரி, கோத்தகிரி, குன்னூர், மஞ்சூர், உதகை மற்றும் முதுமலை புலிகள் காப்பகம் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்த காட்டு பன்றிகள் கடந்த ஒரு வார காலமாக அடுத்தடுத்து உயிரிழந்து வரும் நிலையில் ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் கர்நாடகா மாநிலத்தின் பந்திப்பூர் புலிகள் காப்பக பகுதிகளில் உள்ள பன்றிகளும் ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.