26 பேரிடம் தீவிர விசாரணை.. குன்னூர் விபத்தில் எந்த சந்தேகமும் இல்லை.. டிஜிபி சைலேந்திரபாபு
நீலகிரி: குன்னூரில் நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்து குறித்து வேறு சந்தேகங்கள் இல்லை எனவும், விபத்தின் போது மீட்பு பணிகளில் ஈடுபட்ட நெஞ்சப்பன்சத்திரம் மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக தமிழக டிஜிபி சைலேந்திர பாபு கூறியுள்ளார்.
முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 14 பேர் கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து கடந்த 8ஆம் தேதி , MI-17V5 ராணுவ ஹெலிகாப்டரில் நீலகிரி மாவட்டம் வெலிங்டன் இராணுவ பயிற்சி மையத்திற்கு சென்றனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே சென்ற போது மோசமான வானிலையால் நெஞ்சன்பசத்திரம் என்ற இடத்தில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.
இதில் முப்படைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த குரூப் கேப்டன் வருண் சிங்குக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தில் மரணமடைந்த முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட உயிரிழந்த இராணுவ வீரர்களின் உடல்களுக்கு வெலிங்டன் ராணுவ பயிற்சி மைய வளாகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முப்படைகளின் தளபதிகள், இராணுவ உயர்அதிகாரிகள் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் அஞ்சலி மரியாதை செலுத்தினர்.

டிஜிபி சைலேந்திரபாபு விசாரணை
இந்த நிலையில் MI-17V5 ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடத்தில் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு ஆய்வு நடத்தி, அங்குள்ள காவல் அதிகாரிகளிடம் வழக்கு விசாரணை மற்றும் களநிலவரங்கள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், விபத்து குறித்து நெஞ்சப்பன் சத்திரம் கிராம மக்கள் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இந்த தகவல் தமிழக முதல்வர் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. காவல்துறை, தீயணைப்புத்துறை, தடயவியல் துறையில் உள்ள மூத்த அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணிகள் உடனடியாக நடைபெற வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டார் என கூறினார்.

மீட்பு பணிகளில் உதவிய மக்கள்
தொடர்ந்து, 12.25 மணிக்கு குன்னூர் காவல் நிலைய அதிகாரிகள் டிஎஸ்பி, ஏடிஎஸ்பி உள்ளிட்டோர் இந்த ஊருக்கே வந்து நெஞ்சப்பன்சத்திரம் மக்களுடன் சேர்ந்து 3 பேரை அவர்கள் உயிருடன் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி இருந்தனர். அதிகமாக தீ பிடித்து எரிந்து கொண்டிருந்த சிரமமாக சூழ்நிலையிலும் இந்த ஊர் மக்கள் அவர்களின் வீட்டில் உள்ள போர்வை உள்ளிட்ட பொருட்களை கொடுத்து மீட்பு பணி நடைபெற்றுள்ளது. மீட்கப்பட்ட 3 பேரும் அப்போது பேசியுள்ளனர். அவர்களை சாலைக்கு தூக்கி கொண்டுவந்து ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்துள்ளனர் என சைலேந்திரபாபு கூறியுள்ளார்,

நெஞ்சப்பன்சத்திரம் மக்களுக்கு நன்றி
மீட்பு பணிகளில் ஈடுபட்ட நெஞ்சப்பன்சத்திரம் ஊர்மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகக் கூறிய தமிழக டிஜிபி சைலேந்திர பாபு , தீயணைப்பு துறையினர், காவல்துறையினர் இணைந்து குரூப் கேப்டன் வருண் உள்ளிட்டோரை மீட்டுள்ளனர். இந்த அளவுக்கு உதவி செய்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சப்-கலெக்டர், டிஎஸ்பி, எஸ்.பி உள்ளிட்டோர் நன்றி தெரிவிக்க வந்துள்ளதாகவும், விபத்து குன்னூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதுவரை 26 சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்றுள்ளது என்றார்.
Recommended Video

விபத்து குறித்து சந்தேகங்கள் இல்லை
விபத்து குறித்த வழக்கு கூடுதல் எஸ்.பி அதிகாரி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணை தகவல்கள் ஒன்றிய பாதுகாப்பு படையினருடன் தெரிவிக்கப்படும். முப்படை தலைமை தளபதி இங்கு வரும் போதெல்லாம் வான் மார்க்கமாக வரும் போதும் கூட தரைவழி போக்குவரத்து கட்டுப்பாட்டில் வைத்திருக்கப்படும் எனவும், மொத்த நீலகிரி மாவட்டமும் பாதுகாப்பு வளையத்திற்குள் வந்துவிட்டது, தேவையற்ற நபர்கள் உள்ளே நுழைய முடியாதபடி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன என்பதால், இதில் வேறு சந்தேகங்கள் எதுவும் இல்லை எனவும் டிஜிபி சைலேந்திர பாபு கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications