உதயநிதி மாதிரி நானும் கல்லை எடுத்துட்டு போய்ருவேன்.. விமான நிலையம் கட்ட முடியாது : சீமான் ஆவேசம்!
நீலகிரி : "பரந்தூரில் விமான நிலையம் கட்ட விடமாட்டேன். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒரு கல்லை நட்டுவிட்டுப் போனார்கள். அதையும் உதயநிதி எடுத்துக்கொண்டு போய்விட்டார். நானும் அதையேதான் சொல்கிறேன். பரந்தூரில் ஒரு கல்லை நட்டால் அதை நான் எடுத்துக்கொண்டு போய்விடுவேன்." என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார்.
நாள் ஒன்றுக்கு 600 கோடி ரூபாய்க்கு குடிக்க காசு வைத்திருப்பவர்களுக்கு எதற்கு இலவசங்கள் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
டேன்டீ தேயிலை தோட்டங்களை வனத்துறையிடம் ஒப்படைப்பதைக் கைவிடக் கோரி நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய சீமான், திமுக அரசின் இலவச திட்டங்களைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இதுவரை 1,12,500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு! அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புது தகவல்!
நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்
நீலகிரி மாவட்டம் கூடலூர் சட்டமன்றத் தொகுதியில் அமைந்துள்ள பந்தலூர் கடை வீதியில் நாம் தமிழர் கட்சி சார்பில், டேன்டீ தேயிலை தோட்ட நிலங்களை வனத்துறைக்கு ஒப்படைப்பதைக் கைவிடக் கோரியும், டேன்டீ தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களை வெளியேற்றும் தமிழ்நாடு அரசைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு பேசினார்.
சீமான் பேச்சு
அப்போது பேசிய சீமான், "இந்த நிலம் வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு தேயிலைத் தோட்டத்தில் தமிழர்கள் வெளியேற்றப்பட்டு வட இந்தியர்கள் வேலைக்கு அமர்த்தப்படுவார்கள். வனத்துறைக்கு இந்த டேண்டீ நிறுவனத்தை ஒப்படைக்க முடியாது, ஒப்படைக்கவும் விடமாட்டோம். வனத்துறையிடம் தேயிலைத் தோட்டங்களை ஒப்படைப்பதை நிறுத்தி தோட்டக்கலைத்துறையிடம் ஒப்படைத்து மக்களை பாதுகாக்க வேண்டும்.எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்றால் உறுதியாக போராடி இதைத் தடுப்போம்.
டாஸ்மாக்கை மட்டும் நடத்த முடிகிறது?
ஒரு நிர்வாகம் இழப்பில் செல்வதற்கு தொழிலாளர்கள் பொறுப்பேற்க முடியாது, அதற்கு நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டும். டாஸ்மாக்கை நடத்த முடிகிறது. டேன்டீ நிறுவனத்தை நடத்த முடியவில்லையா? 400 கோடி ரூபாய்க்கு பொங்கலுக்கு மட்டும் குடித்துள்ளார்கள். தீபாவளிக்கு 600 கோடிக்கு குடித்துள்ளார்கள். இது அரசு அறிவித்த செய்தி. உண்மையில் ஆயிரம் கோடி வசூலாகி இருக்கிறது.
எதற்கு இலவசம்?
எனக்கு ஒரே ஒரு கேள்விதான். 600 கோடிக்கு ஒரு நாளைக்கு குடிக்க காசு வைத்திருப்பவர்களுக்கு எதற்கு இலவசங்கள்? ஒரு படத்திற்கு ஒரு வாரத்தில் 250 கோடி வசூல் ஆகிறது. ஒரு படத்திற்கு, ஒரு பொழுதுபோக்கிற்கு, கேளிக்கைக்கு இவ்வளவு கொட்டிக் கொடுக்க காசு வைத்திருப்பவர்களுக்கு எதற்கு இலவசம்? ஆண்டு ஒன்றுக்கு 50,000 கோடி ரூபாய் வசூல் ஆகிறது டாஸ்மாக்கில். ஆனால் இவர்கள் இந்த இலவசங்களை வைத்து ஏமாற்றுகிறார்கள்.
எய்ம்ஸ் மாதிரி வேணும்னா கட்டலாம்
இலவச பஸ் பாஸ், பெண்களுக்கு இலவச பஸ் பயணம் என்று சொல்கிறார்கள். முதலில் பஸ் பாஸாக இருக்கிறதா? பேருந்துக்குள் மழை பெய்கிறது. நமது சகோதரிகள் பேருந்துக்குள் குடை பிடித்துக்கொண்டு போகிறார்கள். கொடுமைக்காரர்களுக்கு ஓட்டு போட்டுவிட்டு எங்களை ரோட்டில் விட்டுவிட்டு கத்த விடுகிறீர்கள். எட்டு வழிச் சாலை எல்லாம் போட முடியாது. பரந்தூரில் விமான நிலையம் கட்ட விடமாட்டேன். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டிக் கொண்டிருக்கிறார்களே.. அது மாதிரி வேண்டுமானால் கட்டலாம். அதில் ஒரு கல்லை நட்டு விட்டு போனார்கள். அதையும் உதயநிதி எடுத்துக்கொண்டு போய்விட்டார்.
நான் எடுத்துட்டு போய்டுவேன்
நானும் அதையேதான் சொல்கிறேன். பரந்தூரில் ஒரு கல்லை நட்டீர்கள் என்றால் அதை நான் எடுத்துக்கொண்டு போய்விடுவேன். சொந்தமாக ஒரு வானூர்தி கிடையாது. பிறகு எதற்கு ஐயாயிரம் ஏக்கரில் விமான நிலையம். ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் போர் நடந்தபொழுது அங்கு தவித்துக் கொண்டிருந்த நமது மாணவர்களை அழைத்துக் கொண்டு வர நமக்கென ஒரு விமானம் இல்லை. அதிகபட்சம் இன்னும் இரண்டு ஆண்டு, அதன் பிறகு ஒரு தேர்தல் வருகிறது. அதையாவது நாம் மாறுதலுக்கான தேர்தலாக எடுத்துக்கொள்ள வேண்டும்" என ஆவேசமாகப் பேசினார் சீமான்.