அம்மாடியோவ்..200 வீடியோ! வசமாய் சிக்க போகும் முக்கிய ‘புள்ளி’ ஜெட் வேகமெடுக்கும் கொடநாடு கொலை வழக்கு
நீலகிரி : கொடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணை சூடு பிடித்திருக்கும் நிலையில், கொலையாளிகள் அளித்த வாக்குமூலம் மாறுபட்டு இருப்பதாக சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. மேலும் வழக்கு தொடர்பாக 200 வீடியோக்களை போலீசார் ஆய்வு செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாடு பகுதியில் 2017 ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான பங்களாவில் கொலை, கொள்ளை சம்பவம் நடைப்பெற்றது.
இது தொடர்பாக சயான், வாளையாறு மனோஜ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டு அனைவரும் தற்போது ஜாமினில் உள்ளனர். இந்த வழக்கு கடந்த ஐந்தாண்டு காலமாக உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

கொடநாடு கொலை வழக்கு
வழக்கினை மறுவிசாரணை செய்ய அப்போதைய மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி சஞ்சய் பாபா தனிப்படை காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தார். இதற்காக மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதி முதல் தற்போது வரை 316 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

பலரிடம் விசாரணை
குறிப்பாக குற்றம் சாட்டப்பட்ட 10 பேர், மேலும் வாகன விபத்தில் இறந்த கனகராஜன் சகோதரர் தனபால், உறவினர் ரமேஷ் மற்றும் கொடநாடு மேலாளர் நடராஜ், சசிகலா, சசிகலா உறவினர் விவேக், தற்கொலை செய்துகொண்ட கோடநாடு கணினி பொறியாளர் தினேஷின் தந்தை போஜன் உள்ளிட்ட பலரிடமும் இந்த விசாரணையானது தொடர்ந்து நடைபெற்று வந்தது.

சிபிசிஐடி
இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி தமிழக டிஜிபி, கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டார். இதனால் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இதுவரை 316 பேரிடம் சேகரிக்கப்பட்ட வாக்கு மூலங்கள் மற்றும் கைப்பற்றபட்ட 1500 பக்க ஆவணங்கள் நீதிமன்றத்தில் நீதிபதி முருகன் அவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் சாட்சிகளிடமிருந்து பெறப்பட்ட ஆவணங்கள் மூலம் சிபிசிஐடி போலீசார் விரைவில் விசாரணையை துவக்கினர்.

ஐஜி தேன்மொழி
கொடநாடு எஸ்டேட் பங்களாவில் கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு போலீசார் கொடநாட்டில் ஆய்வு மேற்கொண்டு, கடந்த நவம்பர் மாதம் கொடநாட்டிற்க்கு சென்ற சிபிசிஐடி போலீசார் மேலாளர் நடராஜிடம் 4 மணி நேரம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து அங்கு பணிபுரியும் காசாளர் மற்றும் கணக்கீட்டாளர் ஆகியோரிடமும் விசாரணை மேற்கொண்டனர். மேலும் இவ்வழக்கு தொடர்பாக மீண்டும் பலரிடம் விசாரிக்க சிபிசிஐடி தரப்பு தயாராகி வருகிறது. பணியாளர்கள், குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்கள், முன்னாள் காவல் அதிகாரிகள், அரசியல்வாதிகள், என இந்த பட்டியல் நீள்கிறது. அதிலும் குறிப்பாக சசிகலா, எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைகளின் பெயர்கள் அடிபடும் நிலையில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.

முக்கிய புள்ளி
இந்த நிலையில் கொடநாடு கொலை வழக்கு விசாரணை அதிகாரியாக இருந்த இன்ஸ்பெக்டர் பாலசுப்ரமணியம், எஸ்ஐ ராஜன் ஆகியோரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தியதாக தெரிய வந்திருக்கிறது. அதில் குன்னூர் போலீசார் நடத்திய விசாரணைக்கும் தனிப்படை போலீசார் நடத்திய விசாரணைக்கும் இடையே நிறைய வித்தியாசங்கள் இருந்திருக்கிறது. அது மட்டுமல்லாமல் 2017 ஆம் ஆண்டு குற்றவாளிகள் அளித்த வாக்குமூலமும் 2021ஆம் ஆண்டு அளித்த வாக்குமூலமும் வேறு மாதிரியாக இருந்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக 200 வீடியோக்கள் தற்போது சிபிசிஐடி போலீசாரால் அறிவுக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது. இதனால் கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக முக்கிய பள்ளி ஒருவர் விரைவில் சிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.












Click it and Unblock the Notifications