ஊட்டியில் சினிமா சூட்டிங் நடைபெற ஆதரிப்பீர் எல்.முருகனை.. கலா மாஸ்டர் கலக்கல் பிரச்சாரம்
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் சினிமா ஷூட்டிங் நடைபெற பாஜக வேட்பாளர் எல்.முருகனுக்கு வாக்களிக்குமாறு கலா மாஸ்டர் பிரச்சாரம் செய்தார்.
அவர் மேலும் கூறுகையில் நீலகிரி மாவட்டத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. சினிமா படப்பிடிப்புகள் நடைபெறுவதில்லை, எவ்வித வளர்ச்சியும் அடையவில்லை என்றும் அவர் தனது பிரச்சாரத்தில் தெரிவித்தார்.

தமிழகத்தில் லோக்சபா தேர்தல் வரும் 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் அரசியல் கட்சியினர் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து வாக்குகள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் மத்திய இணை அமைச்சர் எல் முருகனை ஆதரித்து திரைப்பட நடன இயக்குனர் கலா மாஸ்டர் உதகையில் பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீலகிரி மாவட்டத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். நீலகிரி மாவட்டத்தில் தற்போது சினிமா படப்பிடிப்புகள் குறைந்துள்ளது.
நீலகிரி மாவட்ட மக்களின் அவசர மருத்துவ தேவைகளுக்கு கோயம்புத்தூர் செல்ல வேண்டியுள்ளது. பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றவுடன் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவை இயக்கப்படும் என அவர் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில் 1986 ஆம் ஆண்டு நான் பார்த்த ஊட்டி அப்படியே எந்த வளர்ச்சியும் இல்லாமல் இருக்கிறது.
ஒரு காலத்தில் ஊட்டியில் பல்வேறு இடங்களில் ஏராளமான சினிமா சூட்டிங் நடந்தது. இப்போது அது இல்லை. வேட்பாளர் முருகன் மிகவும் எளிமையானவர், கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர். மக்களுக்காக சேவை செய்யும் நோக்கம் கொண்டவர். அவரை ஆதரித்தால் போக்குவரத்து நெரிசலுக்கு ஒரு தீர்வு காணப்படும்.
சுற்றுலா மேம்படுவதற்கான சிறப்பு திட்டங்கள், ஐடி பார்க் உள்ளிட்டவை ஏற்படுத்தப்படும். மக்களின் அன்பை பார்த்துத்தான் பிரதமர் மோடி அடிக்கடி தமிழகத்திற்கு வருகிறார். பிரதமரின் எண்ணற்ற திட்டங்களால் மக்கள் பயனடைந்துள்ளனர். மீண்டும் மோடி வர வேண்டும் என ஆசைப்படுகிறார்கள்.
அவர் மூன்றாவது முறையாக ஹாட்ரிக் அடிப்பது உறுதியாகிவிட்டது. நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளர் எல். முருகனை பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என கலா மாஸ்டர் பிரச்சாரம் செய்தார்.
ஊட்டியின் மையப்பகுதியில் உள்ள ஐந்து லாந்தர் பகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்ட கலா மாஸ்டர், அங்கிருந்த வியாபாரிகளிடம் வாக்கு சேகரித்தார். அப்போது அருகே இருந்த அல்வா கடையில் அந்த கடைக்காரருக்கே அல்வா ஊட்டிவிட சென்றார். அவரோ வாங்க மறுத்து தலையை பின்னால் இழுத்தார். உடனே நான் அம்மாடா கண்ணா என கூறி ஊட்டிவிட்டார்.












Click it and Unblock the Notifications