எடப்பாடிக்கு திட்டமிட்டு நெருக்கடி? “அப்போ அவங்க சொல்றது?” - 2வது நாளாக கண்ணனிடம் தீவிர விசாரணை!
நீலகிரி : ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக திமுக அரசு செயல்பட்டு வருவதாக எடப்பாடி பழனிசாமி தரப்பினரான மூத்த நிர்வாகிகளே கூறி வரும் நிலையில், கோடநாடு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு வருவது சந்தேகங்களைக் கிளப்பிவிட்டுள்ளது.
கோடநாடு கொலை கொள்ளை வழக்கில், ஜெயலலிதாவின் கார் ஓட்டுநராக இருந்த கண்ணனிடம் தனிப்படை போலீசார் இரண்டு நாட்களாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜெயலலிதாவின் கார் ஓட்டுநரான கண்ணனிடம் போலீஸ் விசாரணை நடத்தி வருவதால் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
நேரம் பார்த்து! எடப்பாடிக்கு அதிர்ச்சி வைத்தியம் தரும் ஸ்டாலின்! சூடுபிடித்த கோடநாடு கேஸ்! என்னாச்சு
கோடநாடு கொலை கொள்ளை
ஜெயலலிதாவிற்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி கொள்ளைச் சம்பவம் நடைபெற்றது. பாதுகாவலராக இருந்த ஓம்பகதூர் என்பவரை கொலை செய்து விட்டு, சில மதிப்புமிக்க பொருட்கள் ஆவணங்கள் திருடப்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஜெயலலிதாவின் ஓட்டுநர் கனகராஜ் , சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார்.
250 பேரிடம் விசாரணை
கனகராஜ் உயிரிழந்தது விபத்து அல்ல என கனகராஜின் அண்ணன் தனபால் தெரிவித்து வந்தார். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கோடநாடு வழக்கு விசாரணை தீவிரமடைந்தது. கோடநாடு வழக்கில் கூடுதல் விசாரணையை துவக்கிய நீலகிரி போலீசார் ஐஜி சுதாகர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைத்து, சாட்சிகள், குற்றம் சாட்டப்பட்டவர்கள் அவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என பலரிடம் விசாரணை நடத்தினர். இதுவரை சுமார் 250 பேரிடம் தனிப்படை போலீசார் கூடுதல் விசாரணை நடத்தியுள்ளனர்.
சசிகலா
ஜெயலலிதாவின் தோழியான சசிகலா, அவரது உறவினர் விவேக் ஜெயராமன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டி, ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளராக இருந்த பூங்குன்றன் உள்ளிட்ட பலரிடமும் பல்வேறு கட்டங்களாக தீவிர விசாரணை நடத்தப்பட்டது. மேலும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் நபர்களிடமும் போலீசார் மறுவிசாரணை மேற்கொண்டு வந்தனர்.
கார் ஓட்டுநர்
இந்நிலையில் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநராக இருந்த கண்ணனிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை காவலர் பயிற்சி வளாகத்தில் உள்ள தனிப்படை அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. நேற்று ஓட்டுநர் கண்ணனிடம் ரகசிய விசாரணை நடைபெற்ற நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூடுபிடிக்கும் விவகாரம்
கனகராஜின் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ஜெயலலிதாவின் மற்றொரு கார் ஓட்டுநரான கண்ணனிடம் போலீஸ் விசாரணை நடத்தி வருவதால் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. கோடநாடு கொலை,கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களுடன் இவருக்கு தொடர்பு உள்ளதா? கொலை, கொள்ளைக்கு பிறகு கண்ணனை யாராவது தொடர்பு கொண்டார்களா? என்ற கோணத்தில் தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
எடப்பாடிக்கு சிக்கல்
கோடநாடு கொலை கொள்ளை வழக்கில், விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இதற்கிடையே, அதிமுகவில் ஏற்பட்டுள்ள குழப்பங்களால் ஓபிஎஸ்ஸூக்கு எதிராக நீதிமன்றத்தில் போராடி வருகிறார் எடப்பாடி பழனிசாமி. கோடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு சிக்கல் ஏற்பட்டால் அது கட்சியின் அதிகாரத்தைக் கைப்பற்றுவதிலும் தனக்குப் பின்னடைவாகும் என்பதால் எடப்பாடி இதுகுறித்து தீவிரமாக ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
நெருக்கடி கொடுக்கும் அரசு
கோடநாடு வழக்கு விசாரணையை தீவிரப்படுத்தி எடப்பாடி பழனிசாமிக்கு குடைச்சல் கொடுக்க திமுக அரசு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக திமுக அரசு செயல்பட்டு வருவதாக எடப்பாடி பழனிசாமி தரப்பினரான மூத்த நிர்வாகிகளே கூறி வரும் நிலையில், அது உண்மையாக இருக்குமோ என்ற சந்தேகத்தையும் இந்த விவகாரம் கிளப்பி விட்டுள்ளது.