ஊட்டியில் டைடல் பார்க் அமைக்க இடம் தேர்வு.. “மைக்ரோசாஃப்ட்டே ரெடியா இருக்கு”.. அமைச்சர் சொன்ன தகவல்!
நீலகிரி : நீலகிரி மாவட்டம் ஊட்டியில் மினி டைடல் பார்க் மிக விரைவில் அமைக்கப்படும் என, டைடல் பார்க் அமைப்பதற்கான இடத்தைப் பார்வையிட்ட தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
ஊட்டியில், 100 கோடி ரூபாய் மதிப்பில், மினி டைடல் பார்க் அமைக்க, எச்.பி.எப் பகுதி திருப்திகரமாக உள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
நீலகிரியில் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் நோக்கில், மாநில அரசு 'மினி டைடல் பார்க்' அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
அதற்கான இடத்தை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில், வனத்துறை அமைச்சர் ராமசந்திரன், நீலகிரி தொகுதி தி.மு.க., - எம்.பி., ராஜா, கலெக்டர் அம்ரித் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டனர்.
முதல்வர் அதிரடி அறிவிப்பு
தமிழ்நாட்டில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு அவர்களது மாவட்டத்திலேயே வேலைவாய்ப்புகள் கிடைக்கும் வகையில், தமிழகத்தில் உள்ள இரண்டாம் மற்றும் மூன்றாம் அடுக்கு நகரங்களிலும் மினி டைடல் பூங்காக்கள் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி திருப்பூர், விழுப்புரம் மாவட்டங்களில் மினி டைடல் பூங்காக்கள் அமைப்பதற்கு ஏற்கனவே அடிக்கல் நாட்டினார் முதல்வர் ஸ்டாலின். மற்ற பகுதிகளிலும் மினி டைடல் பார்க் அமைப்பதற்கான இடம் தேர்வு, ஆய்வுப் பணிகள் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
அமைச்சர்கள் இடம் தேர்வு
அந்த வகையில், நீலகிரி மாவட்டம் ஊட்டியில் மினி டைடல் பார்க் அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்ய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், நீலகிரி எம்.பி ஆ.ராசா ஆகியோர் ஊட்டியில் பரிசீலனையில் உள்ள இடங்களை நேற்று ஆய்வு செய்தனர். ஊட்டி ஹிந்துஸ்தான் போட்டோ ஃபிலிம் பேக்டரி பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான இடம், பட்பயரில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான நிலம், கால்நடை பராமரிப்புத் துறைக்கு சொந்தமான மேய்ச்சல் நிலம் ஆகியவற்றை பார்வையிட்டனர்.
இந்த இடம் பொருத்தமா இருக்கும்
பின்னர் தமிழக அரசின் விருந்தினர் மாளிகையில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "நீலகிரி மாவட்டத்தில் டைடல் பூங்கா மிக விரைவில் அமைக்கப்படும். எங்களுடைய பார்வையில் ஹெச்பிஎஃப் பகுதியில் 90 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த இடம் டைடல் பார்க் அமைப்பதற்கு பொருத்தமாக இருக்கும் என கருதுகிறோம். நீலகிரியில் மாஸ்டர் பிளான் உள்ளதால், அதற்கு பிரத்யேகமாக வடிவமைப்பு தேவை. அதன்படி டைடல் பார்க் கட்டுமானங்கள் அமைக்கப்படும்" என்றார்.
மைக்ரோசாஃப்ட் ரெடியா இருக்கு
மேலும் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, "டைடல் பார்க் மூலம் நீலகிரி மாவட்டத்தில் சுமார் ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இங்கு, ரூ.100 கோடி அளவுக்கு நிறுவனங்கள் முதலீடு செய்யும் வாய்ப்புள்ளது. ஐடி துறையில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது. கோவை, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் உள்ள ஐ.டி., நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் நிரம்பியுள்ளன. தமிழகத்தை நோக்கி ஐடி நிறுவனங்கள் வர விருப்பம் தெரிவித்துள்ளன. தமிழகத்துக்கு மைக்ரோசாஃப்ட் நிறுவனம் கூட வர தயாராக உள்ளது.
முதலீடுகள்
விழுப்புரம், தேனி, மதுரை ஆகிய மாவட்டங்களில் புதிய தொழில்நுட்ப பூங்காக்கள் அமைய உள்ளன. தொழில்துறையில் ஜிஎஸ்டிக்கு பிறகு தேக்க நிலை இருந்தது. கொரோனா காரணமாக தொழில்துறையில் கடும் பின்னடைவு ஏற்பட்டது. கொரோனா காலகட்டத்திலும் மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தின் உள்ளூர் உற்பத்தி 9% பங்களிப்புக்கு குறையாமல் இருந்தது. முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் தமிழகத்தில் ரூ.2.5 லட்சம் கோடிக்கு முதலீடு ஈர்த்துள்ளோம்.
தொழில்புரட்சி 4.0
தொழில்புரட்சி 4.0 மூலம் வேலைவாய்ப்பு உருவாக்கம், தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் திறன்மிகு நிறுவனங்கள் மீது கவனம் செலுத்துகிறோம். தமிழகத்தில் அதிகளவில் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளன. பொறியாளர்கள், பாலிடெக்னிக் மாணவர்களின் திறன் மிகப்பெரிய அளவில் உள்ளது. அவர்களின் திறனை பயன்படுத்த தொழில்துறை, உயர்கல்வித்துறை மற்றும் சிறு குறு தொழில்துறை ஆகியவை ஒன்றிணைந்து அதற்கான நடவடிக்கையை எடுத்து வருகிறது." எனத் தெரிவித்தார்.