4 வயது சிறுமியை தாக்கி கொன்ற சிறுத்தை.. கூண்டில் சிக்கியதால் நீலகிரி மக்கள் பெருமூச்சு
நீலகிரி: உதகை அருகே அரக்காடு பகுதியில் தேயிலை தோட்டத்தில் விளையாடி கொண்டிருந்த 4 வயது சிறுமியை தாக்கி கொன்ற சிறுத்தை, வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது. இதனால் அச்சத்தில் தவித்து வந்த அக்கிராம மக்கள் நிம்மதியடைந்தனர்.
Recommended Video
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள அரக்காடு பகுதியில் தனியார் தேயிலைத் தோட்டம் ஒன்றில், அசாம் மாநிலத்தை சேர்ந்த கிஷாந்த் என்பவர் குடும்பத்துடன் வசித்து வேலை செய்து வருகிறார். கடந்த 10ம் தேதி கிஷாந்தின் மகள் சரிதா என்கின்ற நான்கு வயது சிறுமியை சிறுத்தை தாக்கியதில், அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனால் அச்சமடைந்த அக்கிராம மக்கள், சிறுத்தையை உடனடியாக பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறையினருக்கு அப்பகுதி கோரிக்கை விடுத்தனர். இதனை அடுத்து, சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிக்க முதற்கட்டமாக கடந்த எழு நாட்களுக்கு முன்பு தேயிலை தோட்டங்களில் 15 க்கும் மேற்பட்ட இடங்களில் தானியங்கி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி, சிறுத்தையின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில், வனத்துறையினர் கடந்த இரு தினங்களுக்கு முன் தானியங்கி கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது, குடியிருப்பின் அருகே உள்ள தேயிலை தோட்டத்தில் சிறுத்தையின் நடமாட்டம் பதிவாகி இருந்தது. இதனால், சிறுத்தையின் நடமாட்டத்தை வனத்துறையினர் உறுதி செய்தனர்.
இதனையடுத்து, மாவட்ட வன அலுவலர் சச்சின் போஸ்லே துக்காராம் உத்தரவின் பேரில் உதகை வனச்சரகர் ரமேஷ் தலைமையில் நேற்று கிராமப் பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் இரண்டு கூண்டுகளை வைத்தும் அதில் வளர்ப்பு ஆடுகளை கட்டி வைத்து சிறுத்தை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து இன்று காலை சிறுத்தையை பிடிக்க கூண்டு வைக்கப்பட்ட இடங்களில் வனத்துறையினர் சென்று பார்த்த போது சிறுத்தை கூண்டில் சிக்கியதை கண்டு மகிழ்ச்சியடைந்தனர். பின்னர், உதகை வடக்கு வன கோட்ட வனச்சரகர் ரமேஷ் தலைமையில் கூண்டில் சிக்கிய சிறுத்தையை லாரியின் மூலம் ஏற்றி முதுமலை புலிகள் காப்பகம் அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர்.
சிறுத்தை வனத்துறையினரின் கூண்டில் சிக்கியதால், கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக அச்சத்தில் உறைந்திருந்த அரக்காடு கிராம மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இதுபோன்று, வனவிலங்குகள் ஊருக்குள் நுழையால் இருக்க, வனத்துறையினர் நிரந்தரமான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.