நடக்கிறார்.. நடக்கிறார் .. நடந்து கொண்டே இருக்கிறார்.. மூர்த்தி ஏன் இப்படி ஆனார் தெரியுமா?
ஊட்டி - அவினாசி சாலையில் நடந்து கொண்டே இருக்கிறார் ஒரு நபர்.
ஊட்டி: ஒருத்தர் வேக வேகமாக ரோட்டில் நடந்துட்டே இருந்தார்.. ஏதோ அவசர வேலை என்று நினைத்தால், திரும்பவும் நடந்துட்டே இருந்தார்.. சரி, ஏதோ பிரச்சனை என்று நினைத்தால், தொடர்ந்து நடந்துக்கிட்டே இருந்தார்... என்ன என்று பார்த்தால், இப்படி நடக்கிறதுதான் அவருக்கு பிரச்சனையாம்!! அந்த செய்திதான் இது!!
திருப்பூரை அடுத்து அவினாசி வலையாம்பாளையத்தை சேர்ந்தவர் மூர்த்தி என்பவர் இவருக்கு 40 வயதாகிறது. அம்மா, அப்பா, கூட பிறந்தவர்கள் அண்ணன், அக்கா என பெரிய குடும்பம்தான்.
மூர்த்திக்கு வீட்டில் ஒரு பெண்ணை பார்த்து கல்யாணம் செய்து வைத்தார்கள். அளவுக்கு அதிகமாக மனைவியை நேசித்தார் மூர்த்தி. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. ஆனால் காலத்தின் சூழ்நிலை மனைவி கொஞ்ச நாளிலேயே இறந்துவிட்டார்.
மனைவி மரணம்
வெறித்தனமான அன்பை மனைவியிடம் காட்டிய மூர்த்தியால், அவரது பிரிவை தாங்க முடியவில்லை. இதனால் மனம் உடைந்த நிலைக்கு தள்ளப்பட்டார். எதை பார்த்தாலும் வெறுப்பு, யாரை பார்த்தாலும் வெறுப்பு.. வாழ்க்கையே வெறுப்பு.. மனைவியின் இழப்பிலிருந்து மீள தெரியாமல் தவித்தபோதுதான் அடுத்த இடி வந்து விழுந்தது.
நினைவு நாள்
அம்மா-அப்பா ஒரே நாளில் மரணம் வந்து சேர்ந்தது. இறந்தவர்கள் தெய்வமாகி விட்டார்களே என்ற கதறி அழுதார். அம்மா-அப்பாவை நினைத்து கொண்டே வேண்டுவது தினசரி பணியாயிற்று. பெற்றோரின் நினைவு நாளை பிரம்மாண்டாக செய்வார். அப்படித்தான் ஒரு நினைவுநாளில், பூஜைகளுக்கு ஏற்பாடு செய்தார் மூர்த்தி. சொந்தக்காரர்களை எல்லாம் வீட்டுக்கு வரவழைத்தார். அப்பா-அப்பா படத்திற்கு மாலை போட்டு கண்ணை மூடி கும்பிட்டு கொண்டிருந்தார்.
தாடை, ஜடாமுடி
பிறகு என்ன ஆச்சோ தெரியவில்லை... ஆளே ஒரு தினுசாக மாற தொடங்கினார். பேச்சு, உடையில் மாற்றம் வந்து சேர்ந்தது. சிவன் தன்னை ஆட் கொண்டுவிட்டார் என சொல்ல ஆரம்பித்தார். சிவன் எனக்குள் இருக்கிறார், இறந்தவர்கள் அனைவரும் தனக்குள் தெய்வமாக இருக்கிறார்கள் என்று சொல்ல ஆரம்பித்தார். அத்துடன் நடக்கவும் ஆரம்பித்தார். அப்படி நடக்க ஆரம்பித்தவர்தான் இந்த மூர்த்தி. தாடை, ஜடாமுடி என மொத்தமும் மாறி போய், "உலகம் விரைவில் அழிவை காணும், உலகை வலம்வர எனக்கு சிவன் கட்டளை இட்டிருக்கிறார்" என்று கூறி நடக்க ஆரம்பித்தவர்தான்.. இன்னமும் நடந்து கொண்டிருக்கிறார்.
இரவு பகல் கிடையாது
காலில் சக்கரம் உள்ளதால் ஒரு நிமிடம் கூட நிற்க முடியாத நிலை இவருக்கு ஏற்பட்டுள்ளது. இப்படியே கடந்த 5 வருஷமாக நடக்கிறார். கேரளா, சேலம், சென்னை, கோவை, மருதமலை, ஊட்டி என எல்லா இடங்களும் நடந்தே சென்று வந்து கொண்டிருக்கிறார். இவருக்கு இரவு பகல் கிடையாது, வெயில் மழை தெரியாது, பனி, காற்று, புயல் அறியாது என நடந்தே காலத்தை கழித்து வருகின்றார்.
சிறப்பு பேட்டி
ஒருநாள் ஊட்டி ரோட்டில் வேக வேகமாக நடந்து கொண்டிருந்த மூர்த்தியை பார்க்கும்போது ஆச்சரியமாகவும் விந்தையாகவும் இருந்தது. இதுகுறித்து பத்திரிகையாளரும், சமூக சேவகருமான உலிக்கல் சண்முகம் அவர்களை "ஒன் இந்தியா தமிழ்" சார்பாக தொடர்பு கொண்டு மூர்த்தி பற்றி கேட்டோம்.
உலிக்கல் சண்முகம்
அதற்கு உலிக்கல் சண்முகம் சொன்னதாவது, "இவரை இப்படி நான் நிறைய முறை இந்த ரோட்டில் பார்த்திருக்கிறேன். ஊட்டியில் இருந்து அவினாசி நடந்தே போய், திரும்பவும் அங்கேயிருந்து ஊட்டிக்கு நடந்தே வருவார். வழியில் யாருடனும் பேசமாட்டார். இவருக்கென்று வீடு வாசல் கிடையாது. இரவில் கடவுள் பேசுவதாக சொல்வார். தன் தலை மேல் சிவன் உட்கார்ந்திருக்கிறார் என்பார்.
கால் வலி
வெயில், மழையில் இப்படி உடல் வருத்தி நடக்கிறீர்களே என்று கேட்டால், தன் உடல் கல்லாய் மாறி மாறிவிட்டது, என்னை எதுவும் அண்டாது என்கிறார். இவருக்கு ஒரு இடத்தில் கால் வலி வந்துவிடுமாம். படுத்தாலும் பிரச்சனையாம். மீறி எங்காவது படுத்தால் இவரால் நேராக சக மனிதரை போல தூங்க முடிவதில்லை. படுப்பது கூட ஒருக்களித்து ஒரு தினுசாகவே படுக்கிறார்' என்று சொல்லி முடித்தார்.
3 வருஷம் ஆகிறது
இப்போதைக்கு ஊட்டி-அவினாசி ரோடில்தான் மூர்த்தி நடந்து கொண்டிருக்கிறார். 3 வருஷமாக இதே ரூட்தான்.. இன்னமும் ஊட்டிக்கும் அவினாசிக்கும் நடந்தே போய் வந்து கொண்டிருக்கிறார். இவர் நடக்கும்போது மற்றவர்களால் கூடவே ஓடக்கூடிய முடியாதாம். அந்த அளவுக்கு ஒரு வேகம் இருக்கிறது நடையில். யாரிடனும் பிச்சையும் கேட்பது கிடையாது. மற்றவர்கள் தருவதை வாங்கி கொள்கிறார் மூர்த்தி!