அசைவ உணவுக்கு நோ சொல்லும் அதிசய கிராமம்.. எங்குள்ளது தெரியுமா?
நீலகிரி: அசைவ உணவே சாப்பிடாத நபர்களைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். அசைவ உணவை சாப்பிடாத ஒரு கிராமமே உள்ளது என்றால் நம்ப முடிகிறதா. ஆம் உள்ளது.. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கிராம மக்கள் அவர்களது முன்னோர் காலம் முதலே சைவ உணவையே உண்டு வருகின்றனர். அசைவ உணவுகளை அவர்கள் சாப்பிடுவதே இல்லையாம்.. வாங்க அந்த அதிசய கிராமம் குறித்து தெரிந்து கொள்ளலாம்..
நீலகிரி என்றாலே முதலில் நினைவுக்கு வருவது அதன் குளுகுளு காலநிலை தான். எங்கு பார்த்தாலும் பச்சைப் போர்வை போர்த்தியதுபோல காண்போரின் கண்களைக் குளிர வைக்கும் இயற்கை அமைப்பைக் கொண்ட ஓர் அழகிய மாவட்டம். தேயிலை, மலைக் காய்கறிகள் விவசாயத்திலும், சுற்றுலாத் துறையிலும் முக்கியப் பங்காற்றி வருகிறது இம்மாவட்டம். அதிக அளவில் பழங்குடியினர் வசித்து வரும் மாவட்டமாகவும் நீலகிரி உள்ளது. இம்மாவட்டத்தில் இன்றளவும் பழங்குடி மக்கள் தங்களது முன்னோரின் பாரம்பரிய பழக்கவழக்கங்களையும், விநோதமான வழிபாட்டு நடைமுறைகளையுமே பின்பற்றி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம், கக்குச்சி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் உள்ளது தீனட்டி கிராமம். இந்த கிராமம் பசுமையான மலைகள், குளுகுளு காலநிலை, தேயிலைத் தோட்டங்கள் என அழகு நிறைந்த அமைதியான கிராமமாக உள்ளது. இந்த கிராமத்தில் சைவ உணவை மட்டுமே கிராம மக்கள் காலம் காலமாக சாப்பிட்டு வருகின்றனர். அசைவ உணவுகளை முற்றிலும் புறக்கணித்து வருவதாகவும் கூறுகின்றனர். பழங்காலம் முதல் இன்றுவரை இந்த கிராமத்தில் உள்ள இளைஞர்களும் சைவ உணவு முறையை மட்டுமே கடைப்பிடித்து வருகிறார்களாம்.
இதுகுறித்து, அந்த கிராம மக்கள் கூறுகையில், எங்களது மூதாதையர் காலம் முதல் இன்றுவரை நாங்கள் மிகுந்த ஆரோக்கியமாக உள்ளோம். அசைவ உணவை சாப்பிடாததால் எந்தவித ஆரோக்கிய குறைபாடும் எங்களுக்கு இதுவரை ஏற்பட்டதில்லை. எங்கள் கிராமத்தில் ஊட்டச்சத்துக் குறைபாடு என்பதே இல்லை. நாங்கள் இயற்கையான உணவுகளை மட்டுமே சாப்பிடுகிறோம். சைவ உணவை உட்கொண்டு விவசாயப் பணிகளை மேற்கொள்கிறோம். நாங்கள் அனைவரும் மிகுந்த ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் உள்ளோம்.

எங்களது மூதாதையர்கள் சைவ உணவுப் பழக்கத்தையே பின்பற்றி வந்தனர். நாங்களும் அவர்களது வாழ்க்கை முறையையே பின்பற்றி வருகிறோம். எங்களது வருங்காலத் தலைமுறைக்கும் சைவ உணவுப் பழக்கத்தைத்தான் கற்றுக் கொடுக்கிறோம். கடந்து பத்து ஆண்டுகளில் ரசாயனத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. அதனால், ரசாயனப் பொருட்களை உட்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
எங்கள் கிராமத்தைச் சேர்ந்தவர் இளைஞர்கள், கிராம மக்கள் கல்வி மற்றும் வேலை நிமித்தமாக பல வெளிமாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் உள்ளனர். அங்கிருந்தாலும் சைவ உணவுகளையே சாப்பிட்டு வருகின்றனர். எங்கள் கிராம இளைஞர்கள் பெங்களூர், சென்னை என பல்வேறு இடங்களில் வேலை செய்து வருகின்றனர். எந்தப் பகுதிக்குச் சென்றாலும் அங்கும் எங்கள் கிராம மக்கள் சைவ உணவுப் பழக்கத்தையே பின்பற்றி வருகின்றனர் என்றனர்.












Click it and Unblock the Notifications