"உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர.. புதின் துளியும் தயாராக இல்லை!" பிரான்ஸ் அதிகாரி பரபர தகவல்
பாரீஸ்: பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மற்றும் ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ் ஆகியோர் ரஷ்ய அதிபர் புதின் உடன் தொலைப்பேசி வாயிலாக உரையாடிய நிலையில், பிரான்ஸ் அதிபர் மாளிகையில் பணிபுரியும் அதிகாரி ஒருவர் போர் குறித்து முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் நாட்டில் கடந்த பிப். 24ஆம் தேதி தொடங்கிய போர் 3ஆவது வாரமாகத் தொடர்கிறது. உக்ரைன் நாட்டின் முக்கிய நகரங்களைக் குறிவைத்து ரஷ்யா தாக்குதலைத் தீவிரப்படுத்தி உள்ளது.
உலகில் வலிமையான ராணுவங்களில் ஒன்றாக அறியப்படும் ரஷ்ய ராணுவத்திற்கு எதிராக உக்ரைன் இந்தளவு எதிர்த்துப் போரிடும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. இதனால் பல பகுதிகளில் போர் தொடர்ந்து வருகிறது.
கடும் கோபத்தில் புதின்.. புலனாய்வு அதிகாரிகளுக்கு வீட்டுச்சிறை! உக்ரைன் போர் தோல்வி? இதுதான் காரணமா
பிரான்ஸ் அதிபர் வலியுறுத்தல்
அப்போது போர் காரணமாகப் பல நாட்களாகக் குடிநீர் மற்றும் மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் தவிக்கும் துறைமுக நகரமான மரியுபோல் நகரின் மீது ரஷ்ய ராணுவம் தனது தாக்குதலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று இம்மானுவேல் மக்ரோன் ரஷ்ய அதிபர் புதினிடம் வலியுறுத்தியாக கூறப்பட்டுள்ளது. மேலும், தற்காலிக போர் நிறுத்தம் மூலம் பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும் என்றும் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி தலைவர்கள் புதினிடம் வலியுறுத்தி உள்ளனர்.
எண்ணம் இல்லை
இருப்பினும், இந்த உரையாடலில் ரஷ்ய அதிபர் புதின் போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் துளியும் தாயாராக இல்லை என்பதையே காட்டுவதாக பிரான்ஸ் அதிபர் அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரி ஒருவர் கூறியுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், உக்ரைன் போரில் நடைபெறும் மனித உரிமை மீறல்களுக்கு உக்ரைன் வீரர்கள்தான் காரணம் என்று புதின் கூறிய போது, அது முழுக்க முழுக்க பொய்யான குற்றச்சாட்டு எனப் பிரெஞ்சு அதிபர் மறுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனி விளக்கம்
மூன்று தலைவர்களுக்கு இடையே நடைபெற்ற இந்த உரையாடல் குறித்து மேற்கொண்டு எந்தவொரு தகவலும் வெளியிடப்படவில்லை. உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வரும் சர்வதேச முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த உரையாடல் உள்ளதால் அதில் என்ன ஆலோசிக்கப்பட்டது எனக் கூற முடியாது என ஜெர்மனி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ரஷ்யா
அதேநேரம் ரஷ்ய அதிபர் மாளிகை இந்த பேச்சுவார்த்தை குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில், போர் தொடர்பாக மக்ரோன் மற்றும் ஸ்கோல்ஸுக்கு புடின் விளக்கினார் என்றும் உக்ரைனில் உள்ள மனிதாபிமான நிலைமை குறித்தும் விளக்கினார் எனக் கூறப்பட்டுள்ளது. உக்ரைன் அப்பாவி மக்களை மனித கேடயமாகப் பயன்படுத்துவதாகக் குற்றஞ்சாட்டிய ரஷ்யா, போர் நிறுத்தம் பற்றி இதில் பேசப்பட்டதா என்பது குறித்து எதையும் தனது செய்திக்குறிப்பில் குறிப்பிடவில்லை.