ஈரான் அமைதி திட்டத்தை கிழித்து எறிந்த டிரம்ப்! "இனியும் கேம் ஆட முடியாது!" மீண்டும் வெடிக்கும் போர்?
வாஷிங்டன்: வளைகுடா போர் முடிவுக்கு வருவதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. போரை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பாக ஈரான் முன்மொழிந்த அமைதி திட்டத்தை டிரம்ப் நிராகரித்துள்ளார். ஈரானின் அமைதி திட்டம் எனக்குப் பிடிக்கவில்லை என்றும் ஈரானின் அமைதி திட்டத்தை ஏற்றுக்கொள்ளவே முடியாது என்றும் சொல்லி அமைதி முன்மொழிவை டிரம்ப் நிராகரித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் தொடங்கிய வளைகுடா போர், இன்னும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை. இப்போது நேரடி தாக்குதல் இல்லை என்றாலும் கூட முழுமையாக அமைதி திரும்பவில்லை என்பதால் எப்போது வேண்டும் என்றாலும் போர் வெடிக்கும் என்ற சூழலே இருக்கிறது. இதற்கிடையே இரு நாடுகளும் பேச்சுவார்த்தைக்குத் திரும்பிய நிலையில், ஈரான் தனது அமைதி முன்மொழிவை அமெரிக்காவுக்கு அனுப்பியது.

போர் நிறுத்தம்
வளைகுடா நாடுகளில் நிலவி வரும் போர் மேகங்கள் கலைந்து அமைதி திரும்பும் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் ஒற்றைப் பதிவு ஒட்டுமொத்த உலகையும் மீண்டும் அதிர வைத்துள்ளது. ஈரான் முன்வைத்த அமைதித் திட்டத்தை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என நிராகரித்துள்ள ட்ரம்ப், ஈரான் தோல்வி அடைந்த ஒரு நாடு எனக் கூறியுள்ளார்.
மேலும், ஈரானின் அணுசக்தித் திட்டத்தை அமெரிக்கா தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், யாராவது அணு உலைகளை நெருங்கினால் அவர்கள் பெயர், முகவரி, அடையாள அட்டை எண் உட்பட அனைத்தையும் தனது 'விண்வெளிப் படை' கண்டுபிடித்துவிடும் என்றும், அவர்களை அங்கேயே வைத்து முடித்துவிடுவோம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரான் கோரிக்கை
முன்னதாக, அமைதி பேச்சுவார்த்தையில் பாகிஸ்தான் மூலம் ஈரான் தனது முன்மொழிவை அனுப்பி இருந்தது. அதில், தங்களின் அணுசக்தி எரிபொருளைப் பாதுகாப்பாக ஒரு மூன்றாவது நாட்டிற்கு மாற்றத் தயார் என்று கூறியிருந்தது. அதேநேரம் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் அல்லது எதிர்காலத்தில் அமெரிக்கா இந்த அமைதி ஒப்பந்தத்தில் இருந்து விலகினால் யுரேனியத்தை மீண்டும் தங்களிடமே ஒப்படைக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதித்திருந்தது.
மேலும், தங்களுக்குப் போரினால் ஏற்பட்ட இழப்புகளுக்கு அமெரிக்கா இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் முழு இறையாண்மையை அங்கீகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தது.. இருப்பினும், இந்த முன்மொழிவை ஏற்கத் தான் டிரம்ப் மறுத்துவிட்டார். அதேநேரம் இதில் எந்த பாயிண்டுகள் எல்லாம் ஏற்க முடியாது என்பதை அவர் விளக்கவில்லை.
ஏற்க மறுத்த டிரம்ப்
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் மேலும், "ஈரானின் 'பிரதிநிதிகள் என்று சொல்லப்படுபவர்களின் பதிலை நான் இப்போதுதான் படித்தேன். அது எனக்குப் பிடிக்கவில்லை.. முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. அமெரிக்கா உட்பட உலக நாடுகளுடன் ஈரான் கடந்த 47 ஆண்டுகளாக கேம் ஆடி வருகிறது. இப்போது அவர்கள் சிரிக்கலாம். ஆனால், இனிமேல் சிரிக்க முடியாது" என எச்சரித்துள்ளார்.
ஈரான் திட்டம்
இதற்கு நடுவே ஈரானின் புதிய உச்ச தலைவர் மோஜ்தாபா கமேனி, போரைத் தொடர்ந்து நடத்துவது குறித்து ராணுவத் தளபதிகளுக்குப் புதிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்காலிக போர்நிறுத்தம் முடிவுக்கு வரவுள்ள நிலையில், இரு நாடுகளும் தங்களின் பிடிவாதத்தைக் குறைக்க முன்வராதது மீண்டும் மோதலுக்கு வழிவகுக்குமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சாமல், ஹார்முஸ் ஜலசந்தியில் அந்நியப் போர்க்கப்பல்களை அனுமதிக்க மாட்டோம் என ஈரான் எச்சரித்துள்ளதால், சர்வதேச எண்ணெய் வர்த்தகமும் மீண்டும் சிக்கலுக்குள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications